Last Updated : 10 May, 2016 11:39 AM

 

Published : 10 May 2016 11:39 AM
Last Updated : 10 May 2016 11:39 AM

சேதி தெரியுமா?- 10/5/2016

வருமான வரி தாக்கல் அதிகரிப்பு

நான்கு சதவீத இந்தியர்கள் மட்டுமே 2015-16-ம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்திருப்பதாக ஏப்ரல் 30-ல் வருமான வரித்துறை தெரிவித்தது. மொத்தம் இந்த ஆண்டில் 3.1 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்கள் இந்தியாவில் 10 லட்சம் பேரே உள்ளனர் என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் (2011-12 முதல் 2014-2015 வரை) 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் டாக்ஸிகளுக்குத் தடை

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடும் டாக்ஸிகளை மே 1 முதல் இயக்க உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 30-ல் உத்தரவிட்டது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசலில் ஓடும் தனியார் டாக்ஸிகள் அனைத்தும் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவுக்கு ஏப்ரல் 30-க்குள் மாற வேண்டும் என்று ஏற்கெனவே கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலக் கெடுவை நீட்டிக்கக் கோரி தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ‘மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசலில் ஓடும் டாக்ஸிகளை டெல்லியில் அனுமதிக்க முடியாது” என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு ‘ஆல் இண்டியா பர்மிட்’ பெற்றுள்ள டாக்ஸிகளுக்குப் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மீனவர்கள் கொலையும் - இத்தாலி வீரர்களும்

கேரளக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட இத்தாலிய கடற்படை வீரரை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. நடுவர் நீதிமன்றம் இந்தியாவுக்கு மே 2 அன்று உத்தரவிட்டது. கடந்த 2012 பிப்ரவரி 15-ல், இந்திய மீனவர்கள் இருவரை இத்தாலியக் கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள். இதனையடுத்து அவர்களைக் கேரளப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் கோளாறு காரணமாக ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். ஆனால், மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனி என்பவரை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் இந்திய-இத்தாலி உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரத்தை இருநாடுகளும் திஹேகில் உள்ள நிரந்தர ஐ.நா. நடுவர் நீதிமன்ற முடிவுக்கு விட்டுவிட்டன. இந்த வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், காவலில் உள்ள சால்வடோர் கிரோனியை விடுவித்து இத்தாலிக்கு அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலவச காஸ் திட்டம் தொடக்கம்

நாடு முழுவதும் 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மே 1-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 5 கோடி குடும்பங்களுக்கு ரூ. 8,000 கோடி மதிப்பில் இலவசமாகச் சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்திட்டம் உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் நடந்த விழாவில் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த விழாவில் மோடி பேசுகையில், “இத்திட்டத்தின்படி முதல் ஆண்டில் 1.5 கோடி குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களுக்கும் காஸ் இணைப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்புக்கு பிரேக்த்ரூ பரிசு

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்த ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்பு. இரண்டு கருந்துளைகளின் மோதலில் வெளிப்பட்ட ஈர்ப்பலைகளை அமெரிக்காவின் ‘லிகோ’ஆய்வு மையம் சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்புக்காக லிகோ குழுவினருக்கு ‘ப்ரேக்த்ரூ பரிசு’ வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 கோடி! லிகோவின் நிறுவனர்களான கிப் தார்ன், ரெய்னர் வெய்ஸ், ரொனால்டு ட்ரெவர் ஆகிய மூவரும் தங்களுக்குள் 10 லட்சம் டாலர்களையும், (சுமார் ரூ. 6.65 கோடி), லிகோவின் அறிவியலாளர்கள் 1,012 பேரும் ஆளுக்கு 2,000 டாலர்கள் (சுமார் 1.33 லட்சம்) வீதத்தில் மீதமுள்ள 20 லட்சம் டாலர்களையும் பங்கிட்டுக்கொள்ளவிருக்கிறார்கள். ரஷ்யத் தொழிலதிபரான யூரி மில்னர், ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட 5 பேர்தான் இந்தப் பரிசின் நடுவர் குழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x