Last Updated : 05 May, 2022 11:08 AM

 

Published : 05 May 2022 11:08 AM
Last Updated : 05 May 2022 11:08 AM

10, 12 பொதுத் தேர்வுகள்: தேர்வு எழுதுவதை எளிதாக்கும் வழிகள்

டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போன்று எடுத்தவுடனே அடித்து ஆட வேண்டாம். முதலில் கேள்விகளை நன்கு படியுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பதில்களின் அடிப்படையில் அந்தக் கேள்விகளை வரிசைப்படுத்திக் குறித்துக்கொள்ளுங்கள். பின் ஒவ்வொரு கேள்விக்குப் பதில் எழுத ஆகும் நேரத்தை அதன் அருகில் குறித்துக்கொள்ளுங்கள்.

முதலில் எதை எழுதுவது

வினாத்தாளின் வரிசைப்படி எழுதாமல், உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளின் அடிப்படையில் விடை எழுதுங்கள். அது விரிவாக விடை அளிக்க வேண்டிய கேள்வியாக இருந்தாலும் சரிதான். ஆனால், எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் ஒதுக்கியிருக்கும் நேரத்துக்குள் அதற்கான விடையை எழுதிவிடுங்கள்.

எப்படி எழுதுவது?

எந்த கேள்விக்கு எந்தப் பதில் என்று ஆசிரியர் தேடும்படி ஆகிவிடக் கூடாது. நிறுத்தி நிதானமாக, திருத்தமாக எழுதுங்கள். முக்கியமாக எழுதும் தாள்களை மிச்சப்படுத்தி உங்களுடைய சிக்கனத்தை வெளிப்படுத்தத் தேவை இல்லை. முடிந்த வரை ஒவ்வொரு கேள்விக்கான விடையையும் புதுப் பக்கத்தில் தொடங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

எழுதும் எழுத்துகள் சற்றுப் பெரிதாகவே இருக்கட்டும். வார்த்தைகளுக்கு இடையேயும் வரிகளுக்கு இடையேயும் பதில்களுக்கு இடையேயும் போதுமான இடைவெளி விட்டு எழுதுங்கள். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரின் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை இது வெகுவாகக் குறைக்கும்.

தலைப்பில் கவனம்

விடைகளின் தலைப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள். அதை வேறு வண்ணங்களில் எழுதுவது நன்று. அதற்காகச் சிவப்பு, பச்சையில் எழுதிவிடாதீர்கள். தலைப்புகளுக்கு அடிக்கோடிடுவது அவசியம். ஆனால், இதை உடனுக்குடன் செய்து நேரத்தை வீணடிக்காமல், கடைசியில் மொத்தமாகச் செய்வது புத்திசாலித்தனம்.

கொஞ்சம் அலங்கரிக்கலாமே

இறுதி 15 நிமிடங்களில் எதையும் எழுத வேண்டாம். விடைத்தாளின் பக்கங்களுக்கு எண் இடுவது, தலைப்புகளுக்கு அடிக்கோடு இடுவது, எல்லாப் பக்கங்களிலும் சுற்றுக் கோடு இடுவது ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். முக்கியமாகக் கோடுகள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது உகந்தது.

புத்துணர்வு அளியுங்கள்

எந்தக் காரணம்கொண்டும் விடைத்தாளில், ஆசிரியருக்குத் தனிப்பட்ட குறிப்பையோ கடிதத்தையோ எழுதாதீர்கள். நாளுக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களைத் திருத்தும் ஆசிரியருக்கு நீங்கள் எழுதும் விதம் அவருடைய சலிப்பைக் களைந்து புத்துணர்வு அளித்தால் அது உங்களுக்கும் பலன் அளிக்கும்.

மத அடையாளங்கள் வேண்டாமே!

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. மதக் குறியீடுகளை விடைத் தாளில் எழுதுவது தேவையற்ற பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஆசிரியரை அசத்துங்கள்

படிப்பது உங்களுக்காகத்தான். ஆனால், நீங்கள் தேர்வு எழுதுவது ஆசிரியர் அளிக்கவிருக்கும் மதிப்பெண்களுக்காக. எனவே, நீங்கள் பதில் எழுதும் விதம் ஆசிரியரை அசத்தும் விதமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x