Published : 29 Apr 2022 03:13 PM
Last Updated : 29 Apr 2022 03:13 PM

நெப்டியூனைக் கண்டுபிடித்தது யார்?

திலகா

திலகா

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கூச் ஆடம்ஸ் யுரேனஸ் கோளின் சுற்றுப்பாதையை ஆராய்ந்துகொண்டிருந்தார். யுரேனஸ் தனது பாதையில் ஒரே சீராகச் செல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகத் தெரிந்தது. உடனே தன் கவனத்தை அதில் செலுத்தினார். அப்போதுதான் யுரேனஸுக்கு அப்பால் ஒரு கோள் இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

ஜான் கூச் ஆடம்ஸ்

1845ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் வான் ஆராய்ச்சிக்கூடத்தின் இயக்குநரிடம் சென்று, புதிய கோள் ஒன்று தென்படுவதைக் காட்டினார். அவர் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கிலாந்தின் பிரபல வானவியல் விஞ்ஞானியிடமும் விஷயத்தைச் சொன்னார். அவரும் இளம் ஜான் கூச் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. இப்படிப் புதிய கோள் கண்டுபிடித்த பெருமையை இங்கிலாந்து தவறவிட்டுவிட்டது.

ஜான் கூச் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அதே நேரம், பிரான்ஸ் நாட்டில் உர்பன் லே வெரியரும் யுரேனஸ் தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து, யுரேனஸுக்கு அப்பால் புதிய கோள் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தார். ஆடம்ஸ் புதிய கோளைக் கண்டுபிடித்த விஷயம் அவருக்குத் தெரியாது.

லே வெரியர் கூறுவது சரிதானா என்று உறுதிப்படுத்துமாறு இங்கிலாந்து நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அப்போதும் இங்கிலாந்து ஆர்வம் காட்டவில்லை. எனவே, ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது பிரான்ஸ்.

1846 செப்டம்பர் 23 அன்று தொலைநோக்கி மூலம் வானை ஆராய்ந்து, புதிய கோள் இருப்பதை ஜெர்மனி உறுதி செய்தது. ஜான் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகிய இருவரும் கண்டுபிடித்த கோளுக்கு நெப்டியூன் (Neptune) என்று ரோமானியக் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.

லே வெரியர்

நெப்டியூனைக் கண்டுபிடித்த பெருமை யாருக்குச் சொந்தம் என்பதில் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே சண்டை வந்தது. இறுதியில் ஜான் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகிய இருவருக்குமே இந்தப் பெருமை உரியது என்று முடிவு செய்யப்பட்டது.

சூரியனை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய கோள்கள் தனித்தனி பாதைகளில் சுற்றிவந்தன. நெப்டியூன் எட்டாவது கோளாகச் சூரியனைச் சுற்றிவந்தது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கிலோ மீட்டர். பூமி சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலம் ஆகிறது. நெப்டியூன் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 164 பூமி ஆண்டுகள் ஆகின்றன.

நெப்டியூன் கோள் சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது. தொலைநோக்கி மூலம் பார்த்தால் நீல நிற ஒளிப்புள்ளியாகத் தெரியும். ஹப்புள் தொலைநோக்கி வந்த பிறகுதான் நெப்டியூன் கிரகத்தை முழுதாகப் படம்பிடிக்க முடிந்தது.

வியாழன், சனி, யுரேனஸ் போலவே நெப்டியூன் கோளும் பெரிய பனிக்கட்டி உருண்டையாக இருக்கிறது. இது யுரேனஸ் கோளைவிடச் சற்றே சிறியது. பூமியைப் போல 17 மடங்கு எடை கொண்டது. நெப்டியூன் நீலமாகத் தெரிவதற்கு அந்தக் கோளின் வாயு மண்டலத்தில் மீதேன் வாயு இருப்பதே காரணம்.

நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பெற முடிந்தது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், 1977 ஆம் ஆண்டு வாயேஜர்-2 என்கிற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 1989ஆம் ஆண்டு வாயேஜர்-2 விண்கலம் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நெப்டியூனை நெருங்கிப் படங்களை எடுத்து அனுப்பியது.

விஞ்ஞானிகள் பூமியிலிருந்து வாயேஜர் விண்கலத்துக்கு ஆணைகளைப் பிறப்பித்தால் அவை போய்ச் சேர 4 மணி 6 நிமிடங்கள் ஆகும். ஆகவே வாயேஜர் நெப்டியூனை நெருங்கும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஆணைகளை மிகக் கவனமாக முன்கூட்டித் தீர்மானித்துத் தகுந்த நேரத்தில் அவற்றை அனுப்ப வேண்டியிருந்தது.

நெப்டியூன் கோள் அடர்ந்த மேகங்களால் சூழப்பட்டது. மணிக்கு 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் ஓயாத கடும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நெப்டியூனின் மையப் பகுதியில் கனல் வீசுகிறது.

நெப்டியூனுக்கு இரண்டு சந்திரன்களே உள்ளதாகக் கருதப்பட்டது. பல சந்திரன்கள் உள்ளதாக வாயேஜர் கண்டுபிடித்துக் கூறியது. தற்போது நெப்டியூனுக்கு 13 சந்திரன்கள் உள்ளன. இவற்றில் மூன்று சந்திரன்கள் பெரியவை.

சனி கோளுக்கு உள்ளது போலவே நெப்டியூனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. இந்த வளையங்களுக்கு நெப்டியூனைக் கண்டுபிடித்த ஜான் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x