Published : 02 May 2016 08:55 AM
Last Updated : 02 May 2016 08:55 AM

திரை விமர்சனம்: மனிதன்

சில்லறை வழக்கில் சிக்கியவருக்கு பெயில் வாங்கித்தரக்கூட வக்கற்ற ஒரு கற்றுக்குட்டி வழக்கறிஞர், இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞரைத் தோற்கடிக்க நடத்தும் தர்ம யுத்தம்தான் ‘மனிதன்’.

பொள்ளாச்சி வழக்கறிஞர் சக்தியின் (உதயநிதி ஸ்டாலின்) திறமையின்மையை மீறி அவரைக் காதலிக்கிறார் முறைப்பெண் ப்ரியா (ஹன்சிகா). சக்தியின் அசட்டுத்தனங்களும் தோல்விகளும் அவரது காதலில் நெருடலை ஏற்படுத்த, தன்னை நிரூபித்துக்காட்டச் சென் னைக்கு வருகிறார் சக்தி. இவர் வந்த நேரத்தில் மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு பரபரப்பா கிறது. குற்றம் சுமத்தப்பட்ட பெரிய இடத்துப் பையன் விடுவிக்கப்படுகிறார். தனது வாதத் திறமையால் அவரை விடுவித்தவர் இந்தியா வின் முன்னணி வழக்கறிஞரான ஆதிசேஷன் (பிரகாஷ்ராஜ்). நடைபாதைவாசிகள் ஐந்து பேர் மீது கார் ஏற்றிக் கொன்ற அவ்வழக்கைக் கையில் எடுக்கிறார் சக்தி. வழக்கு மறுபடியும் சூடுபிடிக்கிறது. அனுபவஸ்தர் ஆதிசேஷனுக் கும் கற்றுக்குட்டி சக்திக்கும் ஏற்படும் மோதல் தான் மீதிக்கதை.

‘ஜாலி எல்.எல்.பி.’ என்னும் இந்திப் படத்தில் சிற்சில மாற்றங்கள் செய்து ‘மனிதன்’ ஆக்கி யிருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் பணபல மும் செல்வாக்கும் இருந்தால் ஆதாரங்களை யும் சாட்சியங்களையும் அழித்துவிட்டுத் தப்பிவிட வழிவகுக்கும் ஊழல் புரையோடிய அமைப்பின் மீதான விமர்சனத்தை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது படம்.

பெரிய வக்கீல் எனப் பெயரெடுத்தவரும் நமது அமைப்பின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டே வெல்கிறார்கள் என்பதை அப்பட்ட மாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கற்றுக்குட்டி வக்கீல் கொஞ்சம் கொஞ்சமாக வலுப் பெறும் விதம் நம்பும்படி இருக்கிறது. வழக்கின் திருப்பங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. பிரகாஷ் ராஜின் சாட்சியை உதயநிதி உடைக்கும் காட்சி யும் கமலக்கண்ணனிடம் நடக்கும் விசாரணையும் நீதிமன்றத்தைப் பின்புலமாகக் கொண்ட படத்துக்கான சிறப்பு முத்திரைகள்.

காவல் துறையில் உயர் பதவி ஏலம் விடப் படும் காட்சி, அத்துறையின் அபாயகரமான பரிணாமத்தை அம்பலப்படுத்துகிறது. வழக் கறிஞர் தொழிலின் அல்லாட்டத்தைச் சொல் லும் இந்தப் படம், அதே வழக்கறிஞர் பிரபல மாகிவிட்டால் தந்திரமாகப் பணம் பிடுங்கலாம் என்பதைக் காட்சியாக்கிய விதம் நெத்தியடி. நீதிபதிகளின் அணுகுமுறையை வடிவமைத்த விதத்தில் நேர்த்தி.

நீதி விசாரணையையும் அதற்கு இடமளிக் கும் நீதிமன்ற வளாகத்தையும் கதைக்களமாகக் கொண்ட ஒரு திரைக்கதையில், நாயகன் தனது சட்ட அறிவாலும் வாதத் திறமையாலும் வென்றிருக்க வேண்டும். நாயகன் வெல்வது புலனாய்வுத் திறமையால்தான். சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் இடம் தவிர மற்ற இடங்களில் வாதத் திறமைக்கு இடமில்லை. எனினும் அஜயன் பாலாவின் அழுத்தமான வசனங்களும் சுவையான காட்சிகளும் இந்தக் குறையை மறக்கக்கடிக்கின்றன.

“நீதி தேவதை கண்ணைக் கட்டியிருக்க லாம். ஆனால் நீதிபதி கண்களைத் திறந்துதான் வைத்திருக்கிறார்” என்னும் வசனம் முக்கிய மானது. வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போதே என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், சட்டத்தின் ஓட்டைகளால் உண்மை அம்பலம் ஏற முடியாமல் போகிறது என்பதை நீதிபதியின் வாயாலேயே சொல்லவைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

தனக்குப் பொருந்தக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் உதயநிதி நன் றாகவே தேறிவிட்டார். அலட்டலோ மிரட்டலோ இல்லாத மிதமான நடிப்பால் கவர்கிறார். நாய கனிடம் நேர்மையையும் தன்னம்பிக்கையை யும் எதிர்பார்க்கும் பாத்திரத்தில் ஹன்சிகா தேறுகிறார். பிரகாஷ்ராஜின் வசன உச்சரிப்பும் முக பாவங்களும் உடல் மொழியும் அபாரம். மிடுக்கும் அலட்டலுமாக பிரகாஷ்ராஜ் கவர, அமைதியான பாத்திரத்தில் அலட்டிக்கொள்ளா மல் நடித்துக் கவர்ந்துவிடுகிறார் ராதாரவி.

நீதிமன்ற வளாகத்தில் ஆவக்காய் ஊறுகாய் விற்கும் விலைபோகாத வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் விவேக், உடல் பருமன் கொண்டவர்களைப் பரிகசிக்கும் அவலத்தை இதிலும் தொடர்கிறார். தொலைக்காட்சி செய்தியாளர் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.

மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்த அளவுக்கு சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை உதவவில்லை. பாடல்கள் கவர்ந்தாலும் ஒரே சாயலுடன் ஒலிக்கின்றன.

உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும் கதையைத் திரைக்கதையாகத் தந்த விதத்தில் முதல் பாதி சுணக்கம். இரண்டாம் பாதி விறு விறுப்பு. பணப் பையிலிருந்து பெருச்சாளிகள் ஓடுவது, ஸ்நூக்கர் மேஜையில் சிதறியிருக்கும் பந்துகள் பிரகாஷ்ராஜ் கண்களுக்கு எலிகளாகத் தெரிவது போன்ற காட்சிகளில் ஜொலிக்கும் இயக்குநர், முதல் பாதியின் இழுவையைக் குறைத்திருந்தால் ‘மனிதன்’ இன்னும் மரியாதைக்குரியவனாக மாறியிருப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x