Published : 08 Apr 2022 12:15 PM
Last Updated : 08 Apr 2022 12:15 PM

வேளாண் விஞ்ஞானிகளை உருவாக்கும் புதூர் அரசுப் பள்ளி!

சு. கோமதிவிநாயகம்

பதியமிட்ட மரக்கன்றுகளை ஆர்வத்துடன் பார்ப்பதும் தண்ணீர் ஊற்றுவதுமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களான அவர்களின் வகுப்பறை முழுவதும் வேளாண்மை குறித்த படங்கள் நிறைந்துள்ளன.


கரோனா காலம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என உணர்த்தியிருக்கிறது. அதனை மையமாக வைத்தே எங்கள் ஆசிரியர் காளிராஜ் பயிற்சிகளை வழங்குகிறார். எங்கள் இலக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத இயற்கை விவசாயம், நஞ்சு இல்லாத உணவு என்றே உள்ளது.


முதலில் ரசாயனப் பூச்சிமருந்துகள் தெளிக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும், ஒவ்வொரு தாவரமும் எப்படி வளர்கிறது, எப்போது பூக்கிறது, காய் காய்கிறது என்பதை விரிவாகக் கற்று அறிந்தோம். பின்னர், மரக்கன்றுகள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டோம்.
நன்றாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்து 5 அடி உயரம், 5 செ.மீ. அகலமுள்ள உள்ள ஒரு குச்சியை எடுக்க வேண்டும். வாளியில் கரிசல், செம்மண், மண் புழு உரம், தொழு உரம் ஆகியவை கலந்து இந்தக் குச்சியை நடவு செய்ய வேண்டும். அதன் மீது தேவையான வெப்பம், ஈரப்பதம் கிடைக்க பிளாஸ்டிக் கொண்டு மூடிவிடுவோம். இதற்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். இவை 4 மாதங்களில் நல்ல பலன் தரும். இப்படி நாங்கள் வேப்பம், புளி, புங்கை, கொய்யா, மாதுளை, செம்பருத்தி, முருங்கை, சீத்தா, சப்போட்டா, மா உள்ளிட்ட 30 வகையான 100 மரக்கன்றுகளை வளர்த்து, பள்ளி வளாகம் முழுவதும் நடவு செய்துள்ளோம். இன்னும் ஓர் ஆண்டில் எங்கள் பள்ளி முழுவதும் பசுமையாகப் பூத்துக்குலுங்கும் என்று பூரிக்கின்றனர் இளம் வேளாண் விஞ்ஞானிகள். இதற்கான திட்ட அறிக்கையையும் தயாரித்து வைத்துள்ளனர். இவர்கள் காலையில் பள்ளிக்கு வந்ததும் தாங்கள் வளர்த்து வரும் மரக்கன்றுகளுடன் செலவிடுவதை அன்றாட பணிகளில் ஒன்றாக வைத்துள்ளனர்.


விதைகளில் இருந்து பதியம் போட்டு, 3 அடி உயர மரம் வளர்க்க சுமார் ஓர் ஆண்டாகிவிடும். இதற்குப் பராமரிப்பும் அதிகம். ஆனால், எங்கள் ஆசிரியர் கற்றுத்தந்த முறையில், 4 மாதங்களில் சுமார் 5 அடி உயரம் வரை மரக்கன்று வளர்ந்துவிடும். விதை பதியத்தைவிட, மரக்கன்று திடமாகக் காணப்படும். இப்போது சில பழ வகையை ஆசிரியரின் ஆலோசனைப்படி நாங்கள் வளர்த்து வருகிறோம் என்றனர்.


வேளாண் ஆசிரியர் காளிராஜ்,"இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை பார்த்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை மாணவர் பருவத்திலேயே புகுத்தி, இயற்கை விவசாயத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனக்குத் தலைமை ஆசிரியர் முனுசாமி உதவினார். தற்போது 50 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களை 4 குழுக்களாகப் பிரித்து பழவகைகள், மரக்கன்றுகள் என்று பதியமிட வைத்தோம். இந்தாண்டு மட்டும் சுமார் 100 மரக்கன்றுகள் பள்ளி வளாகம் முழுவதும் நடவு செய்துள்ளோம். அதே போல், பிளஸ் ஒன் வகுப்பில் 40 மாணவ, மாணவிகள் உள்ளனர். அவர்களுக்காக வேளாண் விளைபொருள் பகிர்வு மையம் உருவாக்க உள்ளோம். அவர்களையும் 4 குழுக்களாகப் பிரித்து, கிராமங்களில் விளையக்கூடிய விளைபொருட்களை அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேளாண் விளைபொருள் பகிர்வு மையத்துக்கு இலவசமாக வழங்க வைத்து, அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும். மேலும், இந்த முறையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியையும் வழங்கி உள்ளோம். மாணவர்கள் ஈடுபாட்டுடன் உள்ளதால் எங்கள் முயற்சி சாத்தியமாகி உள்ளது. இந்த மாணவர்களை வேளாண் விஞ்ஞானிகளாக உருவாக்குவதே எங்களின் நோக்கம்" என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x