Last Updated : 02 Apr, 2022 10:45 AM

 

Published : 02 Apr 2022 10:45 AM
Last Updated : 02 Apr 2022 10:45 AM

காலநிலை மாற்றம்: சரியான திசையில் செல்கிறோமா?

கடந்த ஆண்டு இறுதியில் கிளாஸ்கோவில் நடை பெற்ற ஐ.நா. சபையின் வருடாந்திர காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) காலநிலை மாற்றத்துக்கு எதிரான முன்னெடுப்புகளுக்கும், தடுப்பு நடவடிக்கை களைச் செயல்படுத்துவதற்கும் இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது. 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை அடைவதை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் பயணத்தின் முதல்நிலையாக 2030க்குள் இந்தியா தனது ஆற்றல் தேவையின் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங் களின் மூலம் பெறும் என்று அறிவித்திருக்கிறது.

மின்னாற்றல் உற்பத்தித் துறையில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையைப் படிப்படியாகக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் அடிப்படையிலான உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இந்த அறிவிப்பு இருக்கிறது. இந்தியா அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவேற்றும் நோக்கில், மாநிலங்களும் தங்கள் அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டின் பங்களிப்பு

தமிழ்நாட்டில் கிராம அளவிலான மின்மய மாக்கலில் 100 சதவீதம் ஏற்கெனவே அடையப் பட்டு விட்டது. அனைத்துத் துறைகளுக்கும் தமிழ்நாட்டில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தித் திறனில் 25 சதவீதமும், தேசியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 15 சதவீதமும் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கின்றன. 2023ஆம் ஆண்டுக்குள் 9 ஜிகாவாட் அளவுக்கான சூரிய மின்னாற்றல் உற்பத்தியை இலக்காக நிர்ணயித்து, தமிழ்நாடு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதிகரிக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி, அபரிமித காற்றாலை மின்னுற்பத்தி, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மின் விநியோக அமைப்பு போன்ற காரணங்கள், நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியிலிருந்து விலகிச் செல்லும் சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கின்றன. இருப்பினும், புதிய அரசாங்கம் மேல் உப்பூரில் உள்ள அனல் மின்நிலையத்துக்குப் பல கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது.

அதே நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5-20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னாற்றல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. இது தவிர, மின் தொகுப்பில் (கிரிட்) இணைக்கப்பட்ட 20 ஜிகாவாட் சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கும், 10 ஜிகாவாட் மின்கலச் சேமிப்புக்கும் திட்டமிடப் பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் திறனைக் கருத்தில் கொண்டு, அதிவேகத்தில் வளர்ந்து வரும் தன்னுடைய மின்னாற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உறுதியான கொள்கைகளை மாநில அரசு வடிவமைக்க வேண்டும். இதுவே எதிர்காலத்தில் புதிய அனல் மின்நிலையங்கள் உருவாகாத நிலையை நோக்கி மாநிலத்தை நகர்த்திச் செல்லும். முக்கியமாக, நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியிலிருந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை நோக்கி நகர்வதற்கான தெளிவான வழித்தடத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அந்த வழித்தடம் வளர்ந்துவரும் மின்னாற்றல் தேவையையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனையும் இணைப்பதாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் முன்னெடுப்புகள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2015ஆம் ஆண்டிலிருந்து 226 சதவீதம் உயர்ந்துள்ளது. 2030ஆம் ஆண்டு அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 450 ஜிகாவாட் என்கிற இலக்கை இந்தியா எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் சூரிய மின்னாற்றல் உற்பத்திப் பெருக்கத்திற்கான தொழில்நுட்ப-பொருளாதாரத் தீர்வுகளைத் திரட்டும் நோக்கில் சர்வதேச சூரிய கூட்டணியையும் (ISA) இந்தியா தொடங்கியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பெரிய அளவிலிருந்தாலும், இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. நாடு முழுவதும் எரிசக்தி, நீர், உணவு, போன்றவற்றை அணுகக்கூடிய நிலை போதுமான அளவுக்கு இல்லாததால், பத்தாண்டுகளுக்கு மேலாக அதன் அதிகபட்ச தேவையிலிருந்து இந்தியா விலகியே உள்ளது. வளர்ந்துவரும் பெரிய நாடுகள் சந்திக்கும் விசித்திரமான சிக்கல் இது. விரைவான வளர்ச்சியினால் அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு, உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்தச் சிக்கலைத் திறனுடன் எதிர்கொண்டு, நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கிய பயணத்தில் இந்தியா பங்களிக்க முடியும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு. வளரும் பொருளாதாரம் என்கிற அந்தஸ்து, குறைந்த செலவிலான தொழில்நுட்பம் மூலம் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் போன்ற சவால்களைச் சமாளித்து, சூழலியல் பாதுகாப்புப் பாதையில் இந்தியா தொடர்ந்து பயணிப்பது நம் நாட்டை மட்டுமல்ல; உலகையும் சேர்த்தே காக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x