Published : 19 Mar 2022 07:15 AM
Last Updated : 19 Mar 2022 07:15 AM

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா?

டாக்டர் சூரஜ் சுப்ரமணியம்

ஆண்களுக்கு மார்பகப் புற்று நோய் என்று கூறியவுடன் விநோதமாகத் தோன்றலாம். ஆனால், இது உண்மை. அதே நேரம் பெண்களைப் போல் அல்லாமல் அரிதாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சாத்தியம் உண்டு. எல்லா ஆண்களுக்கும் மிகக் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜென் சுரக்கிறது. இது இயல்பானதே. அதே நேரம் சிலருக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாகச் சுரக்கலாம். அப்போது ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சாத்தியம் இருக்கிறது.

ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், முதுமை முதன்மைக் காரணம். ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் 60 வயதுக்கு மேல், முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. குடும்பத்தில் ஏற்கெனவே புற்றுநோய் இருப்பது, அதிக கதிரியக்கத்துக்கு ஆளாவது, தவறான/குறைபாடுள்ள மரபணு, ஹார்மோன் தெரபி உள்ளிட்டவை காரணமாக இந்தப் புற்றுநோய் வரலாம். இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், நன்கு படித்தவர்களும்கூட ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் என்பது குறித்து அறியாமல் இருப்பதுதான்.

தவறான கண்ணோட்டம்

இந்தியாவில், ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்கிற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. இதன் விளைவாக, ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் முற்றிவிட்ட நிலையிலேயே மருத்துவரைப் பார்க்கச் செல்கிறார்கள். மார்பகப் பகுதியில் ஏதேனும் மாற்றம் நிகழ்வது குறித்து ஆண்கள் மிகக் குறைவாகவே சந்தேகப்படுகிறார்கள். அதனால், தொடக்கக் காலத்தில் ஏற்படும் கட்டிகளை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளைக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவரைக் காணவும் தயங்கக் கூடாது. அம்மா, சகோதரி போன்றோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், தொடர்புடைய ஆணுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சாத்தியம் அதிகம். ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்திவிடலாம். தொடக்கத்திலேயே கண்டறிவது கூடுதல் வசதி.

டாக்டர் சூரஜ் சுப்ரமணியம்

அறிகுறிகள்

மார்பகப் பகுதி அல்லது கையின் கீழ்ப் பகுதியில் வலியற்ற கட்டி.

மார்புக் காம்புகளில் கசிவு. அதில் ரத்தம் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

மார்பகத்தில் வீக்கம்.

மார்பகப் பகுதியில் புண்.

மார்புக் காம்பைச் சுற்றித் தடிப்பு அல்லது வறண்ட தன்மை அல்லது அரிப்பு.

மார்புக் காம்பு உட்புறமாக இழுக்கப்பட்டிருப்பது.

மேற்கண்டவை எல்லாம் எச்சரிக்கை அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது பொது மருத்துவரை உடனே பார்க்க வேண்டும். இது தொடர்பாக நண்பர்கள், உறவினர்கள், குறிப்பாக மருத்துவர்களிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. இதில் அசிங்கம் ஏதுமில்லை. புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது சிறந்த சிகிச்சையை அளிக்க வசதியாக இருக்கும். ஆண்களுக்கு மார்பகத் திசு குறைவாக இருப்பதால், புற்றுநோய் உருவான பின் தாமதப்படுத்தினால் மார்பகப் பகுதி, தோலுக்கும் புற்று பரவுவதற்குச் சாத்தியம் அதிகம்.

ஆபத்து காரணிகள்

வயது

கதிரியக்கத்துக்கு அதிகம் ஆளாவது

ஹார்மோன் சிகிச்சை

க்லைன்ஃபெல்டர் குறைபாடு

குடும்ப வரலாறு

உடல்பருமன்

கல்லீரல் தொற்று

வாழ்க்கை முறை மாற்றங்கள்

தனிநபர்களின் வாழ்க்கை முறை காலங்கள் செல்லச் செல்ல மாறிவிடுகிறது. உட்கார்ந்தே இருப்பது, உடல் பருமன், அதிகப் படியாக மது குடித்தல், புகைபிடித்தல் போன்றவை இளம் வயதிலேயே ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக் கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன், ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் 50-70 வயதுப் பிரிவினரிடையேதான் காணப்பட்டது. தற்போது, அது 40-50 வயதுப் பிரிவினரிடையேயும் காணப்படுகிறது.

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு. அதே நேரம், நோய் ஏற்பட்டால் பாதிப்பு ஒன்றுதான். பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். அந்த மாற்றங்களைக் கடைப்பிடித்தால் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். இந்தப் புற்றுநோய் வகைகள் தசை செல்கள், கொழுப்புதொடர்புடைய திசுக்களில் உருப்பெறக்கூடியவை. சில அரிய வகை புற்றுநோய்களில் புற்று செல்கள் கட்டியாக உருவாவதும் இல்லை. மார்பகப் புற்றுநோயின் வகைகளைப் பொறுத்து அவற்றின் பெயரும் மாறுபடும்.

எந்தப் புற்றுநோயாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறியப்பட்டுவிட்டால் பிழைப்ப தற்கான சாத்தியம் அதிகம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் இறப்பு விகிதம் அதிகம். விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், தாமதமாகக் கண்டறியப்படுவதுமே இதற்குக் காரணம். சில நேரம் தொடக்கக் கட்ட அறிகுறிகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தைக் கொடுத்துவிட்டு, ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோயை மருத்துவர்களே தவறவிடவும் கூடும்.

தவிர்க்கும் வழிகள்

மதுவைத் தவிர்த்தல்:

அதிகமாக மது குடிப்பது ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியத்தை அதிகரிக்கும். அளவாகத்தான் குடிக்கிறேன் என்பதும் ஆபத்துதான்.

சரியான உடல் எடையைப் பராமரியுங்கள்:

உடல் பருமனுக்கும் 13 வகையான புற்றுநோய்களுக்கும் தொடர்பு உண்டு. உடல் பருமனுடன் இருந்தால், சரியான எடையைப் பராமரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். அன்றாடம் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவைக் குறைத்துக்கொண்டு, படிப்படியாக உடற்பயிற்சியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்:

அதிகக் கொழுப்பைக் கொண்டிருப்பது, ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். இதன் காரணமாக மார்பகப் புற்றுநோய் உருவாகவும் புற்றுநோய் வளரவும் ஹார்மோன் ரெசெப்டார் காரணமாக அமையும். உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது சரியான எடையைப் பராமரிக்க உதவும். விளைவாக, மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமான சரிவிகித உணவு:

ஆரோக்கியமான சரிவிகித உணவு, சில வகை புற்றுநோய், இதய நோய், பக்கவாதத்தை நிச்சயமாக மட்டுப்படுத்தும். பழம், காய், முழு தானியம், பருப்பு, கொட்டைகள் போன்ற தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தினமும் அதிகமாகச்சாப்பிடுவது நல்லது.

கண்டறிதலும் சிகிச்சையும்

பெண்களுடன் ஒப்பிட்டால், ஆண்களுக்குப் பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்களுக்கான சிகிச்சை முறைகள் நல்ல பலனைத் தருகின்றன. எனவே, மார்பகப் புற்றுநோய், கட்டிகள் குறித்து மருத்துவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் ஆண்கள் பேச அஞ்சவோ, அவமானப்படவோ தேவையில்லை. தயங்குவதால், மார்பகப் புற்றுநோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.

மார்பகப் புற்றுநோய் என்பது மேம்பட்ட தொழில்நுட்பம், இலக்கு சார்ந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய ஒரு புற்றுநோயே. அதே நேரம் தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம். மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கு இருந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசியுங்கள்.

கட்டுரையாளர், பொது அறுவைசிகிச்சை நிபுணர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x