Published : 01 Mar 2022 11:34 AM
Last Updated : 01 Mar 2022 11:34 AM

புத்தகத் திருவிழா 2022 | புதிய கல்வி நூல்கள்

இன்றைய சூழலில் கல்வி
l சு.உமா மகேஸ்வரி, சுவடு, தொடர்புக்கு - 95510 65500

பள்ளிக் கல்வியின் பண்புகளாகிய கற்றல், கற்பித்தல், தேர்வு முறைகள், மாற்றுக் கல்வி முறைகள் ஆகியவை அலசப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியராக இருபது ஆண்டு அனுபவம் கொண்டவரும் கல்விச் செயற்பாட்டாளருமான சு.உமாமகேஸ்வரி இந்த நூலை எழுதியுள்ளார். கல்வியில் நிலவும் பிரச்சினைகளுக்கு அனுபவபூர்வமான சான்றுகளுடன் நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.

மழலையர் கல்வி, மரியா மாண்டிசோரி
l தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு - 044-2433 2924

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மரியா மாண்டிசோரி அறிவியல்பூர்வ கல்விமுறையை உருவாக்கியவர். மழலையர் கல்வியைப் பற்றி அவர் எழுதிய நூலான ‘உள்வாங்கும் உள்ளம்’ (The Absorbent Mind) 1949இல் வெளியானது. இந்நூல், ஆசிரியர்களும் பெற்றோரும் மாண்டிசோரி கல்வி முறையின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கான பாடபுத்தகமாக எழுதப்பட்டது. இந்நூலின் மொழிபெயர்ப்பே இந்த நூல்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்
l மு.சிவகுருநாதன், இலக்கியச்சோலை,
தொடர்புக்கு - 99629 18724

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் பாடநூல்களில் சாதி, மதம் சார்ந்த பிரிவினையையும் அதன் அடிப்படையிலான வெறுப்பையும் விதைக்கும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதை இந்த நூலில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். அதோடு பாடநூல்களில் மலிந்திருக்கும் கருத்துத் திரிப்புகள், தகவல் பிழைகள், மொழிபெயர்ப்பு தவறுகள் ஆகியவற்றையும் இந்த நூல் பட்டியலிட்டு விளக்குகிறது.

நீட்: நீதியா? தகுதியா? தரமா?
l முருகையன் பக்கிரிசாமி-ஜாஹிர் உசேன்,
தமிழகக் கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்,
தொடர்புக்கு - 94442 51395

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை, அது தொடர்பான வழக்குகள், நாடாளுமன்ற விவாதங்கள், நீட் தேர்வு குறித்த கல்விச் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், பத்திரிகை செய்திகள், நீட் தேர்வு குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை முன்வைத்து நீட் தேர்வுக்கு ஆதரவான வாதங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது இந்நூல்.

தெரு விளக்கும் மரத்தடியும்
l ச. மாடசாமி, வாசல் வெளியீடு, தொடர்புக்கு: 98421 02133

வகுப்பறையில் சுதந்திரமாக விவாதிக்க, மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதுதான் கல்வியின் உண்மையான அடையாளம், நாகரிகத்தின் உண்மையான தொடக்கம் என வலியுறுத்திவரும் பேராசிரியர் ச. மாடசாமியின் நூல். அவருடைய அறிவொளிக் கள அனுபவம், பேராசிரியராக வகுப்பறை அனுபவம் ஆகியவற்றுக்கு இடையில் கல்வி குறித்து தன்னிடமே நிகழ்ந்த உரையாடல்களை, அனுபவங்களை இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x