Published : 16 Apr 2016 01:37 PM
Last Updated : 16 Apr 2016 01:37 PM

ஆரோக்கிய நூலகம்: நீரிழிவு என்சைக்ளோபீடியா

உலக சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

“இது தொற்றுநோயும் இல்லை, தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நோயும் இல்லை. என்றாலும் உலகில் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிற நோய்களில் முக்கிய இடம் இதற்கு உண்டு. உலகில் 20 கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இந்தியாவில் 7 கோடிப் பேருக்கும் தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கும் இந்நோய் உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. நீரிழிவு நோய் அதிகரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் உங்களுக்கு, உங்களுடன் பிறந்தவருக்கு, உறவினருக்கு, நண்பருக்கு, தோழிக்கு என்று யாருக்காவது இந்த நோய் இருக்கலாம். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் உங்களுக்கும் இந்நோய் வரலாம். இன்னும் பதினைந்து வருடங்களில் நீங்கள் சந்திக்கிற நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருப்பார்.”

- இப்படித் தொடக்கமே அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கிறது டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது’ என்னும் இந்த நூல். இந்த நோய்க்கு நீரிழிவு, மதுமேகம் என்று பல பெயர்கள் இருந்தாலும், சர்க்கரை நோய் என்றால் எளிதில் புரிகிறது என்பதால், புத்தகம் முழுவதும் இந்த வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலம் கடந்த விழிப்பு

நீரிழிவு பலருக்குச் சாபமாக அமைந்துவிடுகிறது. ஏனென்றால், நீரிழிவு தாக்குவதற்கு முன்வரை உடலைக் குறித்த பிரக்ஞையற்று இருப்பவர்கள், வந்த பின்னர் உடலைப் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். சிலருக்கு விரும்பியதைச் சாப்பிட முடியாமல் போவதால் ஏற்படுகிற மன அழுத்தம், வேளாவேளைக்கு மருந்து எடுத்துக்கொள்வதில் உள்ள தயக்கம், வயது மூப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உடல்/நடைப் பயிற்சி செய்வதில் இருக்கும் சிரமம் என்று கலவையான விளைவுகளை, இந்த நோய் ஏற்படுத்துகிறது. நீரிழிவு வராமல் கவனமாக இருந்து தவிர்த்துக்கொள்ள முடியும். ஆனால், வந்துவிட்ட பின்பு கட்டுப்படுத்த முடியுமே அன்றி, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இதை நோய் என்பதைவிட மனித உடலில் உண்டாகும் ஒரு குறைபாடு எனலாம்.

ஏன் இந்தப் பெயர்?

நீரிழிவு நோய் மிகப் பழைமையான நோயாகக் கருதப்படுகிறது, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிரேக்கர்கள் இதை டயாபடிஸ் மெலிட்டஸ் என்று அழைத்துள்ளனர். டயாபடிஸ் என்றால், கிரேக்க மொழியில் நீருற்று என்று பொருள். அதிகப்படியான நீர், சிறுநீராகக் கழிவதால் இப்படி அழைத்தனர். மெலிட்டஸ் என்பதற்குத் தேன் போன்ற தித்திப்பு என்று அர்த்தம். ரத்தத்திலும் சிறுநீரிலும் இனிப்பு அதிகரிப்பதை இது குறிக்கிறது.

எப்படி வருகிறது?

நாம் எப்போதெல்லாம் சாப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் உணவை எரித்துச் சக்தியாக மாற்றுவதற்கான இன்சுலினை நம் உடலில் உள்ள கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. கணையம் பாதிக்கப்பட்டாலோ, இன்சுலினைக் குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ வருவதுதான் நீரிழிவு. கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது எனலாம். அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் சோர்வு, உடல் எடை குறைதல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.

இரவு பகல் பாராமல் வேலை செய்வது, நேரத்துக்குச் சாப்பிடாதது, நேரம் போவது தெரியாமல் கணினி, மொபைல், தொலைக்காட்சி என்று ஏதேனும் ஒரு செயற்கைத் திரையில் கட்டுண்டு கிடப்பது, உடல் உழைப்பு இல்லாமை, நூறு மீட்டர் தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனத்தை நம்பியிருப்பது, எந்தச் சத்துமில்லாத அரிசி, மைதா உள்ளிட்ட உணவையே முதன்மையாகக் கொண்டிருப்பது, போதிய உறக்கமின்மை, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் நீரிழிவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துவருகிறது.

யாருக்கெல்லாம் வரும்?

நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஒரு தலைமுறையில் அவர்களைத் தொடர்ந்து யார் யாருக்கெல்லாம் இந்த நோய் வரும், பெற்றோர் ஒருவருக்கு மட்டுமே இருந்தால் குழந்தைகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்படும், பெற்றோர் இருவருக்கும் இருந்தால் உண்டாகும் பாதிப்பின் சதவீதம், தாத்தா பாட்டிகளுக்கு இருந்தால் அடுத்த தலைமுறையினருக்கு எத்தனை சதவீதம் நீரிழிவின் தாக்கம் இருக்கும் என்பதை எல்லாம் இந்த நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார் டாக்டர் கு. கணேசன்.

என்னென்ன உணவு?

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு, மாவுச் சத்துப் பொருட்கள், கொழுப்புச் சத்துள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் என்னென்ன உணவை, எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்? அவற்றில் உள்ள கலோரியின் அளவு போன்றவை அடங்கிய அட்டவணை இந்தப் புத்தகத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வழக்கமாகக் காலையில் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் காலை எட்டு மணிக்கு இரண்டு இட்லிகளையும் பின்னர் 10 மணிக்கு இரண்டு இட்லிகளையும் சாப்பிடலாம். இதேபோல், மதிய மற்றும் இரவு உணவையும் பிரித்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை உடனடியாக அதிகரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகவே அதிகரிக்கும், இன்சுலின் சுரப்பும் சீராக இருக்கும் என்கிறார்.

கட்டுப்பாட்டுக் கருவிகள்

நவீன மருத்துவத்தில் மருந்துகளுக்கு மாற்றாக நீரிழிவைக் கட்டுப்படுத்தப் பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப், இன்சுலின் பட்டைகள், இன்சுலின் இன்ஹேலர், ஸ்டெம்செல் சிகிச்சை, கணைய மாற்று சிகிச்சை என்று நிறைய வந்துள்ளன. அதிலும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பயானிக் கணையக் கருவி நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது என்கிறார் மருத்துவர். இந்தக் கருவியை இடுப்பில் பொருத்திக்கொண்டால் இன்சுலின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம், கருவியில் வைக்கப்பட்டுள்ள இன்சுலினைத் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு, உடலில் சரியான விகிதத்தில் சர்க்கரையின் அளவை இக்கருவி கட்டுப்பாட்டில் வைக்கிறது.

சூரியன் பதிப்பக வெளியீடான இந்நூலில் நீரிழிவு நோய் குறித்த அனைத்துத் தகவல்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி டாக்டர் கு. கணேசன் விளக்கியுள்ளார். நீரிழிவு என்றால் என்ன, ஏன் வருகிறது, வகைகள், அதற்குண்டான பரிசோதனைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு பாதிப்பு, கர்ப்பக் காலத்தில் வரும் நீரிழிவுக்குத் தீர்வுகள், நீரிழிவால் ஏற்படும் பக்கவாதம், மாரடைப்பு, கண், காது, நரம்புகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உயர்-தாழ்வு ரத்த அழுத்தம், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், ஆசனங்கள், எடுத்துக்கொள்ள வேண்டிய - தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல், நீரிழிவைக் குறைக்க என்னென்ன மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம், பாலியல் சந்தேகங்கள் என நீரிழிவு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் விளக்கங்களும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கேள்வி - பதில் வடிவில் வாசகர்களின் பொதுவான சந்தேகங்களுக்குப் பதிலும் சொல்லியிருக்கிறார் டாக்டர் கு. கணேசன். தமிழில் வெளிவந்துள்ள 'நீரிழிவு என்சைக்ளோபீடியா' என்று கூறுமளவுக்கு விரிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

நீரிழிவு நாள்

நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்களின் தோற்றத்தையும் அதைத் தோற்றுவித்தவர்களையும் பலரும் நினைவுகூர்வதில்லை. பிரெட்ரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் என்கிற இரண்டு மருத்துவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சார்லஸ் என்கிற 19 வயது சிறுவனுக்கு நாயின் கணையத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இன்சுலினைக் கொடுத்துப் பரிசோதித்தனர். அதில், அவருடைய உடலில் இன்சுலின் சட்டெனக் குறையாமல், படிப்படியாகக் குறைந்து நல்ல மாற்றம் ஏற்படுவதைக் கண்டுபிடித்தனர்.

இந்த இருவரும் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்திருக்காவிட்டால், இன்றைக்கு இந்நோயால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருந்தில்லாமல் வாடியிருப்பார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவர்களுடைய பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ‘உலக நீரிழிவு நோய்' நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெளியீடு: சூரியன் பதிப்பகம், தொடர்புக்கு: 044-42209191

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x