Published : 01 Apr 2016 10:58 AM
Last Updated : 01 Apr 2016 10:58 AM

குறும்படங்களை மனசுக்கு உண்மையா இயக்கணும்! - கார்த்திக் சுப்பராஜ் பேட்டி

குறும்படங்களை இணைத்துப் படமாக்கி 'பெஞ்ச் டாக்கீஸ்', 'அவியல்' என வெளியிட்டு, அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு தந்த‌ சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தான் இயக்கியுள்ள‌ ‘இறைவி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தவரிடம் பேசிய போது...

‘அவியல்' படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்...

எங்களுக்கு ‘அவியல்' ஒரு முக்கியமான படமா இருந்துச்சு. ஒரு படம் பண்ணி அது மூலமா பணம் பார்த்துடணும் அப்படிங்கிற‌ ப்ளான் எல்லாம் எனக்குக் கிடையாது. மக்கள்ட்ட கொஞ்சம் கொஞ்சமா குறும்படங்களையும் பிரபலப்படுத்தணும்கிறதுதான் என் எண்ணமே. முதல் முயற்சியான‌ ‘பெஞ்ச் டாக்கீஸ்' படத்துக்குக் குறைந்த அளவுலதான் ‘ஸ்கிரீன்ஸ்' கிடைச்சுது.

‘அவியல்' கதையாகவும் சரி, வெளியீட்டிலும் சரி எங்களுக்கு ஒரு புதிய முயற்சியா இருந்துச்சு. ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ். நாங்களே எதிர்பார்க்கலை. படம் பார்த்த எல்லோருமே ‘இது குறும்படம்'னு சொல்லி குறைச்சு மதிப்பிடலை. அந்த வகையில‌ எனக்கு சந்தோஷம்தான். விமர்சகர்கள், மக்கள் என எல்லா தரப்பிலும் இந்தப் படம் நல்ல‌ வெற்றியா அமைஞ்சது. இது ஒரு நல்ல தொடக்கம்.

சினிமாவுக்கான ‘என்ட்ரி கார்ட்' ஆக மட்டுமே குறும்படத்தைப் பார்க்கிற மனோபாவம் இளைஞர்கள்கிட்ட இருக்கு...

குறும்படங்கள்னு சொன்னாலே ஒரு நல்ல விஷயத்தை பிரச்சாரத் தொனியில் எடுக்கிறதைத்தான் வழக்கமா வெச்சிருக்காங்க. குறும்படங்களுக்குனு ஒரு பார்வை இருக்கு.

சொல்லப் போனா சினிமாவை மைண்ட்ல வெச்சு எடுக்கப்படுற குறும்படங்களின் எண்ணிக்கை ரொம்பக் கம்மியா இருக்கு. சுமார் 100 படங்கள் பார்த்தால் அதுல‌ 10 படங்கள் மட்டுமே குறும்படத்துக்கான தகுதியுடன் இருக்கு. சினிமாவா மாத்துறதுக்கான வாய்ப்புகளும் அதுல இருக்கு. மத்த எல்லாமே தொழில்நுட்ப ரீதியாகவும், கதையாகவும் ஒரு முயற்சியாக மட்டும்தான் இருக்கு. அவை முழுமையாக இல்லை.

அவை முழுமை பெற என்ன செய்யணும்...

ஒரு சினிமாவை எவ்வளவு உண்மையாக இயக்குகிறோமோ அதே மாதிரிதான் குறும்படத்தையும் இயக்கணும். என்னைப் பொறுத்தவரை வெள்ளித்திரை படங்கள், குறும்படங்கள் இரண்டுக்குமே நேரத்தில் மட்டுமே வித்தியாசம். வெள்ளித்திரை இயக்குநருக்கு என்ன தேவையோ அது அனைத்துமே குறும்பட இயக்குநருக்கும் தேவைதான். 'குறும்படம்தானே... பண்ணிட‌லாம்'னு எளிதாக ஒரு இயக்குநர் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த குறும்படக் கூட்டணியில் முன்னணி இயக்குநர்களையும் இணைக்காலாமே...

அப்படியும் ஒரு ப்ளான் இருக்கு. அதில் ஒரு படத்தை கெளதம் மேனன் மாதிரி ஒரு முன்னணி இயக்குநரை இயக்கச் சொல்லிட்டு மற்றதை புது இயக்குநர்கள் இயக்குவாங்க. இதுல‌ நிறைய சுதந்திரம் இருக்கு. எந்த மாதிரியான கதைகள் வேணும்னாலும் சொல்லலாம். கமர்ஷியல் படங்களைத் தாண்டி குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர்களுடைய படங்களையும் இதுல‌ கொண்டு வரணும்னு நினைக்கிறோம். அது கொஞ்சம் பெரிய வேலைதான். ஆனாலும் பண்ணிடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x