Last Updated : 13 Apr, 2016 12:18 PM

 

Published : 13 Apr 2016 12:18 PM
Last Updated : 13 Apr 2016 12:18 PM

வாண்டு பாண்டு: கூண்டுக்குள் மலர்ந்த ஆஹா நட்பு!

வாண்டு: ஹலோ பாண்டு, ஸ்கூலுக்கு லீவு விட்டாச்சே ஊருக்குப் போகலையா?

பாண்டு: இப்போ போகலை. அடுத்த மாசம்தான் போவேன். நீ போகலையா?

வாண்டு: நானும் இப்போ போகலை. அப்புறம், தாத்தாவும் பாட்டியும் என்னை வண்டலூர் விலங்குக் காட்சி சாலைக்குக் கூட்டிட்டுப் போனாங்களே.

பாண்டு: ஓ... தாத்தா, பாட்டி வந்தாச்சா? ம்..ஜாலிதான் விலங்குக் காட்சி சாலையில என்ன பார்த்த?

வாண்டு: பறவைகள், விலங்குகள், நீர்வாழ் விலங்குகள், ஊர்வன என எல்லாத்தையும் பார்த்தேன். இந்தத் தடவை போனப்ப ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துட்டுப் போயிட்டேன்.

பாண்டு: ஏன்? அங்கேயும் போய்ப் படிப்புதானா?

வாண்டு: ஒவ்வொரு விலங்கைப் பத்தியும் குறிப்புகள் எழுதி வச்சிருப்பாங்க இல்லையா?. அதைப் பார்த்து எழுதிட்டு வந்தேன். எழுத முடியாததையெல்லாம் தாத்தா கேமராவுல போட்டோ புடிச்சுக் கொடுத்திருக்காரு.

பாண்டு: அதெல்லாம் சரி, அப்படி எழுதி வச்சு என்ன பண்ணப் போறப்ப?

வாண்டு: ஒவ்வொரு பக்கத்துலயும் அதை எழுதி வச்சு, அந்த விலங்கோட போட்டோவையும் ஒட்டி வைக்கப்போறேன். படிக்கறப்ப, அது நமக்கும் உதவியா இருக்கும். நம்ம தம்பி, தங்கைக்கும் படம் காட்டிச் சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா?

பாண்டு: நீ சொல்றது கரெக்ட்டுதான். சும்மா அப்படியே வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வந்தா, கொஞ்ச நாள் கழிச்சு அது மறந்துபோயிடும். அப்புறம், நீ விலங்குக் காட்சி சாலையைப் பத்தி சொல்றப்பத்தான் எனக்கு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள நோஹா விலங்குக் காட்சி சாலை பத்தி படிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

வாண்டு: ஞாபகம் வர அளவுக்கு அந்த விலங்குக் காட்சி சாலையில என்ன இருக்கு?

பாண்டு: அங்கேயும் விலங்குகள்தான் இருக்கும், வேற என்ன இருக்கும்? நம்ம ஊர் விலங்குக் காட்சி சாலைகளில் புலி, கரடி, சிங்கத்தையெல்லாம் தனித்தனியாத்தானே பார்க்க முடியும். இந்த விலங்குக் காட்சி சாலையில புலி, கரடி, சிங்கம் மூணும் ஒண்ணா இருக்குதுங்களாம். அது மட்டுமில்ல, இந்த மூன்றுமே ரொம்பவும் நெருங்கிய ஃபிரெண்டுகளாம்.

வாண்டு: ஆஹா, ஆச்சரியமா இருக்கே பாண்டு.

பாண்டு: ஆச்சரியம்தான் வாண்டு. புலி, கரடி, சிங்கம் இந்த மூன்றும் நட்பாகப் பழகுறதப் பார்த்து எல்லோருமே ஆச்சரியப்படுறாங்க. இதுல கரடியோட பேரு பாலூ (Baloo), சிங்கத்தோட பேரு பெயர் லியோ (Leo), புலியோட பேரு ஷேர் கான் (Shere Khan). இந்தப் பெயர்கள் எல்லாமே ‘ஜங்கிள் புக்’ கதையில் வர்றதை பிரதிபலிப்பவை.

வாண்டு: ஓ... இதுங்களுக்குப் பேருகூட இருக்கா? எப்புடி மூன்றும் ஒண்ணாப் பழகுச்சுங்க?

பாண்டு: 15 வருஷங்களுக்கு முன்னால வெவ்வேறு இடங்கள்ல இருந்து இந்த மூன்றையும் இங்கே கொண்டுவந்திருக்காங்க. அப்போ மூணுமே குட்டியா இருந்ததால ஒண்ணா விட்டுருக்காங்க. ஆனா, வளர ஆரம்பிச்சவுடன் மூன்றையும் பிரிச்சு வைக்க முயற்சி செய்திருக்காங்க. ஆனா, மூன்றுமே ஒன்றைவிட்டு ஒன்று போகாம அடம் பிடிச்சுருக்குங்க. முயற்சி செஞ்சு பார்த்துட்டு, அப்படியே விட்டுட்டாங்க. இப்போ 15 வருஷமா இந்த மூணுமே ஒண்ணாத்தான் இருக்குங்களாம்.

வாண்டு: வெவ்வேறு இனங்களாக இருந்தாலும் பாசம் அதுங்களை ஒண்ணாக்கிடுச்சுன்னு சொல்லு.

பாண்டு: ஆமா வாண்டு. நீ சொல்றதும் சரிதான். இந்த விலங்குக் காட்சி சாலைக்கு இந்த மூன்றையும் பார்க்கவே நிறைய சுற்றுலாப் பயணிகள் வர்றாங்க. இதுங்களோட பெயர்களிலிருந்து முதல் வார்த்தையை மட்டும் வைச்சு பி.எல்.டி.ன்னு செல்லமா கூப்பிடுறாங்க. அமெரிக்காவுல பி.எல்.டி.ன்ற பேரு ரொம்ப பிரபலமாயிடுச்சாம்.

வாண்டு: ம்... பின்னே பிரபலமாகாதா? இது வித்தியாசமான பிரபலம்தான். ஆனா, உடல் குறைபாடு காரணமாகக்கூட சிலர் பிரபலமாயிடுறாங்க, அது தெரியுமா பாண்டு?

பாண்டு: எனக்கு ஒண்ணும் புரியலையே. ஆனா, ஏதோ ஒரு விஷயத்தைப் பேசுறேன்னு மட்டும் தெரியுது. அது என்னான்னு நீயே சொல்லிடு.

வாண்டு: சரி, சொல்றேன். குஜராத்ல தேவேந்திர சுதர்னு ஒருத்தரு இருக்காரு. இவருக்குக் கை, கால் சேர்த்து மொத்தம் 28 விரல்கள் இருக்கு.

பாண்டு: என்னது, 28 விரல்களா?

வாண்டு: ஆமா பாண்டு. ஒவ்வொரு கை, காலிலும் 7 விரல்கள்னு மொத்தமா 28 விரல்கள் இருக்கு. இது கின்னஸ் சாதனையா அறிவிச்சுருக்காங்க.

பாண்டு: நமக்கெல்லாம் ஒவ்வொரு கை, காலிலும் 5 விரல்கள்தானே இருக்கு. இவருக்கு மட்டும் எப்படி அதிகமா இருக்கு?

வாண்டு: உடல் குறைபாடுதான் காரணம். இதை ‘பாலிடேக்டிலிஸம்’ சொல்றாங்க. இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இப்படிக் கூடுதலா விரல்கள் இருக்குமாம். ஆனா, தேவேந்திர சுதர்க்குதான் உலகிலேயே ரொம்ப அதிகமா விரல்கள் இருக்காம். அதனால இதை உலக சாதனையாக கின்னஸ் அமைப்பு அறிவிச்சுருக்கு.

பாண்டு: அதிகமான விரல் இருக்குறனால, அவருக்கு என்னென்ன பிரச்சினை இருக்கோ தெரியலை. ஆனா, இந்த கின்னஸ் சாதனை அவருக்கு மகிழ்ச்சி கொடுத்தா சரி.

வாண்டு: சரியா சொன்ன பாண்டு. ஓ.கே. இப்போ நான் வீட்டுக்குப் போறேன். அப்புறமா பார்ப்போம்.

பாண்டு: சரி வாண்டு. டாட்டா.

தேவேந்திர சுதர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x