Last Updated : 27 Apr, 2016 12:35 PM

 

Published : 27 Apr 2016 12:35 PM
Last Updated : 27 Apr 2016 12:35 PM

ஒரு ஓவியம் இரு பரிசுகள்

ஒரு ஓவியத்துக்கு ஒரு பரிசு கிடைத்தாலே குழந்தைகள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஆனால், ஒரே ஓவியத்துக்கு இரண்டு சர்வதேச பரிசுகளை வென்ற சென்னையைச் சேர்ந்த சிறுமி அக்‌ஷரா அமைதியாக இருக்கிறார். ஆரவாரமே இல்லாமல் அடுத்த சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறார் இவர்!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அக்‌ஷரா, சர்ச் பார்க் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயதிலிருந்தே தத்ரூபமாக ஓவியங்கள் வரைவதில் கைத்தேர்ந்தவராகிவிட்டார். ஓவியம் வரைவதில் அக்‌ஷராவுக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அம்மா கார்த்திகா, அப்பா வரதராஜன் ஆகியோர் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தினார்கள். இந்த ஊக்கத்தின் காரணமாகப் பள்ளி, மாவட்டம், அரசின் பல துறை சார்பிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகளை வென்றார்.

அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் உள்ள சர்வதேச ஆந்தை மையம் இந்த ஆண்டு பிப்ரவரியில் சர்வதேச ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்தது. ஆந்தைகளைப் பாதுகாப்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்க அழகான ஆந்தை ஒன்றை வரைந்து அக்‌ஷரா அனுப்பினார். இந்தப் போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 15 பேருடைய ஓவியங்கள் சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஓவியம் அக்‌ஷராவுடையது.

இதேபோல அமெரிக்காவின் அட்லாண்டாவில் சர்வதேச பிகாசோ ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அக்‌ஷரா, அதே ஆந்தை படத்தைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார். 150 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 6 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதிலும் அக் ஷராவுடைய ஓவியம் சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஓவியத்துக்கு சர்வதேச பரிசுகள் கிடைத்ததில் அக்‌ஷராவின் அம்மா, அப்பா அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அடுத்து ஜப்பான், பல்கேரியா, சைபீரியாவில் அறிவிக்கப் பட்டுள்ள ஆன்லைன் ஓவியப் போட்டிக்காகத் தயாராகி வருகிறார் அக்‌ஷரா. எதிர்காலத்தில் விண்வெளி வீராங்கனையாகவும் சிறந்த ஓவியராகவும் வர வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று கூறும் அக்‌ஷரா போல, நீங்களும் ஆன்லைன் சர்வதேச ஓவிய போட்டியில் பங்கேற்க ஆசையா? ஆன்லைன் போட்டிகள் குறித்து தொடர்ந்து அறிந்துகொள்ள >www.samanthasbell.com என்ற இணையதளத்தைப் பாருங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x