Published : 27 Dec 2021 11:40 AM
Last Updated : 27 Dec 2021 11:40 AM

புதிய மாற்றங்கள்... புதிய வாய்ப்புகள்... - பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் எத்தகையது?

சித்தார்த்தன் சுந்தரம்

(sidvigh@gmail.com)

இந்தப் பெருந்தொற்று காலமானது நம் வாழ்க்கை முறையில், பொருளாதார கட்டமைப்பில், வேலைச் சூழலில், தொழிற்செயல்பாடுகளில் புதிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் மூலம் என்னென்ன புதிய போக்குகள் உருவாகி இருக்கின்றன, அவை பொருளாதார வளர்ச்சியில் என்ன மாதிரியாக தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பாக மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கிய விசயங்களை இங்கே நாம் சுருக்கமாகப் பார்க்கலாம்.

விருப்பங்களை இந்தப் பெருந்தொற்று மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி, பெருந்தொற்று காலத்தில் இ-குரோசரி, டெலி மெடிசின் போன்றவை அதிகரித்து இருக்கிறது. வரும் ஆண்டுகளில் அவை இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வியிலும் திறன் மேம்பாட்டிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அடுத்த பத்தாண்டுகளில் ஆசிய நாடுகளில் நுகர்வு அதிகரிக்கும். அதில், சுமார் 80% அளவுக்கான வளர்ச்சி நாளொன்றுக்கு 11 டால
ருக்கு மேல் செலவு செய்யும் நிலையிலிருக்கும் நுகர்வோர்கள் மூலம் நிகழும்.


மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் அரசாங்கங்கள் பயன்பெறும். உதாரணமாக இருதய நோய், வாதம், நீரிழிவு போன்ற நோய்களால் ஏற்படும் இழப்பை அல்லது மருத்துவ செலவைக் குறைக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்துவது, தொற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுவது, நடத்தை மற்றும் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வது போன்ற செயல்பாடுகளில் அரசு தீவிரமாக இறங்கும். அந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

முன்னெப்போதும் இருந்ததை விட தற்போது உலகம் செல்வமயமானதாக இருக்கிறது. ஆனால் இந்தச் செல்வத்தில் சுமார் 68 சதவீதம் நிலமாகவும், குடியிருப்பாகவும், கட்டிடங்களாகவும் இருக்கின்றன. இனி வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் மீது அதிகமாக முதலீடு செய்யப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

கண்ணுக்குப் புலப்படாத அறிவுசார் சொத்து (intellectual property), ஆய்வு (research), தொழில்நுட்பம், மென்
பொருள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித் திறனும் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பெருந்தொற்று குறைந்து வரும் நேரத்தில் வாழ்வையும், வாழ்வியல் ஆதாரங்களையும் மேம்படுத்துவதற்காக உலகத் தலைவர்கள் மூன்று இலக்குகளைக்கொண்டு செயல்பட வேண்டும். அவை, வளர்ச்சி (Growth), நிலைத்தன்மை (Sustainability), உள்ளடக்கல் (Inclusion) ஆகும். இதில் அவர்கள் கவனம் செலுத்தினால் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

வேலை செய்யும் முறையில் பெருந்தொற்று பெரிய மாற்றத்தை புகுத்தியிருக்கிறது. தானியக்கம், வீட்டிலிருந்து வேலை செய்
வது, இ-காமர்ஸ் ஆகியவற்றில் நாம் எதிர்பார்க்காததை விட வளர்ச்சியானது விரைவாக வந்தடைந்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் பெரிய பொருளாதாரத்தை உடைய நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், யுனை
டெட் கிங்டம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 மில்லியன் பணியாளர்கள், அவர்கள் வேலை சார்ந்து புதிய பணி வகைமைகளை கண்டறிய வேண்டியிருக்கும்.

பாரம்பரியமாக இருந்து வரும் துறைகளுக்கு புத்துணர்வு அளிப்பது வளர்ச்சிக்கு உதவும். உதாரணமாக அமெரிக்க உற்பத்தித் துறையில் மாறுதலைக் கொண்டு வருவதன் மூலம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 275 பில்லியன் டாலரிலிருந்து 460 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க முடியும். அதோடு அதிகமாக 1.5 மில்லியன் வேலைகளை உருவாக்க முடியும்.

பாகுபாடற்று செயல்படுவது வளர்ச்சிக்கு முக்கியம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கும் சம்பள வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. அதுபோல ஒரே நிலையில் வேலை பார்க்கும் ஆண் - பெண் ஆகிய இருவருக்குமான சம்பளம் ஏற்றதாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

ஒவ்வொரு புதிய ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து சற்று மாறுப்பட்டதுதான். ஆனால், கரோனாவுக்குப் பிறகான ஆண்டுகளை நாம் அந்த வரிசையில் சேர்த்துவிட முடியாது. கரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய பரிணாமம் எடுத்திருக்கிறது. அந்த வகையில், வரும் ஆண்டுகளில், பல புதிய வாய்ப்புகளையும் பல புதிய சாவல்களையும் நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். எதிர்கொள்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x