Published : 11 Mar 2016 11:14 AM
Last Updated : 11 Mar 2016 11:14 AM

வேண்டுமா புயல், மழை, வெள்ளம்?

எப்படி வாழவேண்டும் என்பதற்கு ’பத்து கட்டளைகளை’ கொடுத்தார் கடவுள். மனிதனோ கடவுள் கொடுத்த வழிகாட்டு நெறிகளை காற்றில் பறக்க விட்டான். தன்னை யார் கேள்வி கேட்பது என்று களியாட்டம் ஆடினான்.

நிலைமை கை மீறிப்போனது. ‘ஜலப்பிரளயம்’ எனும் பெரும் வெள்ளத்தை அனுப்பி கெட்டவர்களை அழிக்க முடிவுசெய்தார் கடவுள். கெட்டவர்கள் அழிந்தபிறகு மனிதனும் உயிரினங்களும் பூமியில் புத்துயிர்ப்புடன் துளிர்விட வேண்டுமே?! நோவா எனும் மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அவரையும் அவரது குடும்பத்தாரையும், விலங்குகள், பறவைகளின் ஜோடிகளையும் ‘நோவா கட்டிய கப்பல்’ மூலம் உயிர் பிழைக்க வைத்தார் என்கிறது பைபிள்.

கிறிஸ்தவ மதத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பான்மையான மதங்களில் இடி, மின்னல், மழை, புயல், வெள்ளம் எல்லாமே கடவுளின் கையில் இருக்கும் அதிகாரம் என்பதுதான் நம்பிக்கை. ஆனால் மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளின் கையில் இருக்கும் இந்த அதிகாரத்தை மனிதன் கைப்பற்றிவிட்டான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? ‘ஹார்ப்’ என்று அழைக்கப்படும் (HAARP - HIGH FREQUENCY ACTIVE AURORAL RESEARCH PROGRAM) அதிநவீன வானிலை ஆயுதம் பற்றி தெரிந்து கொண்டால் குலை நடுங்கிப் போவீர்கள்.

மனிதன் கண்டறிந்த ஆயுதங்கள்

மனிதன் முதலில் கண்டறிந்த ஆயுதம் கற்கோடாரி. பிறகு ஈட்டி, வேல், வில், வாள். காட்டிலிருந்து வெளியேறி நாகரிகமடைந்த பிறகு துப்பாக்கி, கண்ணிவெடி, பீரங்கி, ஏவுகணை, என்று முன்னேறினான். இந்தக் கொடிய ஆயுதங்களின் உச்சமாக கண்டறியப்பட்டதுதான் அணுகுண்டு. அதன்பிறகும் கொலைவெறி அடங்கவில்லை மனிதனுக்கு. கத்தியின்றி, ரத்தமின்றி மனிதர்களை கொல்ல ‘உயிரி ஆயுதம்’ (BIO WEAPON) கண்டுபிடித்தான். அவற்றின் விளைவாகவே சார்ஸ், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட கொடிய நோய்க்கிருமிகள் உருவானதாக விவாதிக்கப்பட்டது.

மேலே சொன்ன அனைத்து விதமான ஆயுதங்களிலும் ஒர் ஒற்றுமை உண்டு, அது எதிரிகள் மீது இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த ‘ஹார்ப்’(HAARP) ஆயுதம் பிரயோகிக்கப்பட்டால் அதை பிரயோகித்தவர் யார் என்பதை அத்தனை சீக்கிரம் கண்டறிய முடியாது. இதன் தொழில்நுட்ப வலிமையை அறிந்துகொண்ட மனிதநேயர்கள் மொத்த உலகத்துக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ‘ஹார்ப்’ ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடு அமெரிக்கா.

கண்டுபிடித்தது யார்?

பெர்னாட் ஈஸ்டுண்ட் (Bernard eastund 1938 2007) என்ற அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியின் கண்டுபிடிப்புதான் இந்த ஹார்ப். வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த பெர்னாட், சில இடங்களில் மழைபொழிவு அதிகமாக இருப்பதையும் சில இடங்களில் கடும் வறட்சி நிலவுவதையும் கண்டு வருந்தினார். வானிலையின் இந்த ஓரவஞ்சனையை மனிதனால் மாற்றியமைக்க முடியாதா என்று கனவு கண்டார். ஏன் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பக் கூடாது என்று ஒரு கேள்வி எழுப்பிக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார். அவரது ஆராய்ச்சி வெற்றிபெற்றது. ஆனால் தனது அடிப்படை ஆராய்ச்சி எதிர்காலத்தில் ஒரு அதிபயங்கர ஆயுதமாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

கண்டுபிடிப்பும் கட்டுப்பாடும்

நம்முடைய வளி மண்டலம் பல அடுக்குகளைக் கொண்டது. அவற்றில் அயனோஸ்பியர்(Ionosphere)எனப்படும் அயனி மண்டலம் நமது தகவல் தொழில்நுட்பத்துக்கும், மழை மேகங்களைக் காப்பதற்கும் அரணாகவும் அடிப்படையாகவும் விளங்குகிறது. அத்தகைய அயனி மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அனுப்பவோ அல்லது புதிய மேகங்களை உருவாக்கவோ முடியும் என்று பெர்னாட் கண்டுபிடித்தார். வான் இயற்பியல் துறையில் வியத்தகு சாத்தியங்களுக்கு வித்திட்ட இவரது ‘ஹார்ப்’ கண்டுபிடிப்பின் சக்தியை வெகுசீக்கிரமே புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இதன் முழுக் கட்டுப்பாட்டையும் தனது பாதுகாப்புத்துறையின் கீழ் கொண்டு வந்தது.

வானிலை ஆராய்ச்சித்துறையின் கீழ் சென்றிருக்க வேண்டிய ஹார்ப் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடும் ஆராய்ச்சியும் அமெரிக்க வான்படை மற்றும் கடற்படையின் கீழ் சென்றதால் சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி துருவ ஆரம்பித்தனர். தற்போது இவர்கள் வெளிப்படுத்திவரும் விஷயங்கள் உலக நாடுகளை உறைய வைத்திருக்கின்றன. மழையில்லாமல் வரண்டு கிடக்கும் இடத்துக்கு மழை கொடுக்கலாம் என்ற ஒரு மனிதநேய கண்டுபிடிப்பு, ஒர் அதிபயங்கர ஆயுதமாக மாறியிருப்பதாக கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

எப்படி வேலை செய்கிறது ஹார்ப்?

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப் (HAARP Lab) ஆராய்ச்சி மையத்தின் படம் இங்கே வெளியாகியிருப்பதைப் பாருங்கள். இங்கே 180 ஆண்டெனாக்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஈ.எல்.எஃப் (ELF-Extremely low frequency) என்று அழைக்கப்படும் மிகக்குறைந்த அலைவரிசை மூலம் மின்காந்த அலைகளை உருவாக்கக்கூடிய ஆண்டெனாக்கள். இவற்றின் அசுர சக்தியை புரிந்து கொள்வது எளிது.

உலகின் பெரிய வானொலி நிலையம் ஒன்று 50 கிலோவாட் சக்தியை பயன்படுத்தி தனக்கான மின்காந்த அதிர்வலைகளை வளி மண்டலத்தில் ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொண்டால், ஹார்ப் அண்டெனாக்கள் 3.6 மில்லியன் வாட் சக்தியை பயன்படுத்தி மின்காந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்பும் திறன் கொண்டவை. ஒரு வானொலி நிலையம் ஏற்படுத்தும் அதிர்வலைகளைவிட இது 7500 மடங்கு அதிகம்.

ஹார்ப் ஏற்படுத்தும் மின்காந்த அதிர்வலைகளை ஒருமுகப்படுத்தி, எந்த ஒரு பருவநிலை மாற்றத்தையும் ஒரு நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் எந்த நாட்டின் செயற்கைக் கோள்களையும் இந்த ஹார்ப்பின் சக்தியால் முடக்கமுடியும். எந்தவொரு நாட்டின் மீதும் அல்லது தாக்குதல் தேவைப்படும் ஒரு பகுதியில் இடைவிடாமல் பல நாட்கள் மழைபெய்யச் செய்யமுடியும். தொடர்ச்சியாக மழைபெய்தால் நீங்கள் வருணபகவானைத் திட்டக்கூடும்.

அல்லது வடிகால் வசதி செய்து தராத அரசாங்கதின் மீது உங்கள் கோபம் திரும்பலாம். ஆனால் உங்கள் மீது வானிலை வழியாக ஒரு போர் தொடுக்கப்பட்டது என்று நீங்கள் உணரும் முன்பே வெள்ளத்திலோ, புயலிலோ சிக்கிகொள்ளும் கொடூரத்தை ஹார்ப் நிகழ்த்தி முடித்துவிடக்கூடும்.

ஜப்பானை நிலைகுலையச் செய்த சுனாமியை அமெரிக்கா ஹார்ப் தொழில்நுட்பம் வழியாக் தொடுத்த தாக்குதல் என்பதாக விவாதிக்கப்பட்டாலும், அமெரிக்க அதை ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் வல்லரசுகளின் கையில் கிடைத்திருக்கும் ஹார்ப் ஒரு அதிபயங்கர வானிலை ஆயுதம்தான் என்பதை நிரூபிக்க இன்னொரு கண்டுபிடிப்பாளன் இந்நேரம் பிறந்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x