Last Updated : 12 Mar, 2016 11:56 AM

 

Published : 12 Mar 2016 11:56 AM
Last Updated : 12 Mar 2016 11:56 AM

பரிசோதனை ரகசியங்கள் - 22: எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்படுவது ஏன்?

மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்தக் கதிர்களுக்குப் படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு திட ஊடகத்தில் படியவைக்க முயன்றார்.

ஒரு சமயம் போட்டோ தகட்டின் மீது கைவிரல்களை வைத்திருந்த தன் மனைவியின் கை மீது இந்தக் கதிர்களைச் செலுத்தினார். அப்போது, அந்தத் தகட்டில் அவருடைய மனைவியின் கைவிரல் எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. இதிலிருந்து எலும்பு போன்ற கடினமான பொருட்களின் வழியே எக்ஸ் கதிர்கள் ஊடுருவுவது இல்லை; உறிஞ்சப்படுகின்றன என்பது புலனாயிற்று. இதன் பலனால் இந்தப் பொருட்களின் பிம்பங்கள் போட்டோ தகட்டில் நிழல்களாக விழுகின்றன என்பதும், அதேவேளையில் மெல்லிய திசுக்களின் வழியே இவை ஊடுருவிச் சென்றுவிடுவதால், இத்திசுக்கள் போட்டோ தகட்டில் தெரிவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த அறிவியல்தான் எக்ஸ்-ரே பரிசோதனைக்கு அடிப்படை ஆனது.

எக்ஸ்-ரே எவ்வாறு எடுக்கப்படுகிறது?

எக்ஸ்-ரே எடுப்பதற்குச் சாதாரண எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே எனப் பல்வேறு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எக்ஸ் கதிர்களை உருவாக்கித் தரும் கருவிதான் அடிப்படையானது. இதிலிருந்துதான் பொத்தானை அழுத்தியதும் எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. பயனாளியை நிற்கவைத்தோ, படுக்கவைத்தோ எக்ஸ்-ரே எடுப்பது நடைமுறை.

முதலில் எந்த உறுப்புக்கு எந்த நிலையிலிருந்து எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். பிறகு, அவருடைய உடல் பகுதிக்கு எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டுக்கொள்கிறார்கள். பின்னர் அதே அளவுக்கு இந்தக் கதிர்களை ஒரு குழாய் மூலம் செலுத்துகிறார்கள். அதற்கு முன் பயனாளியின் எதிர்ப்புறம் எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டு பொருத்தப்படும். அதற்குள் எக்ஸ்-ரே ஃபிலிம் இருக்கும். செலுத்தப்படுகிற எக்ஸ் கதிர்கள் பயனாளியின் உடலுக்குள் புகுந்து ஃபிலிமில் படியும்.

அந்த ஃபிலிமை வெளியில் எடுத்து போட்டோ ஃபிலிமை கழுவுவதுபோல் இரு வேறுபட்ட வேதி கரைசல்களில் கழுவுகிறார்கள். அதைக் காய வைத்தபின் பார்த்தால், அதில் உடல் பகுதிகள் தெரியும். மருத்துவருக்கு இயல்பான எக்ஸ்-ரேயில் உடல் பகுதிகள் எப்படி இருக்கும் என்பது தெரியுமல்லவா? அந்த மருத்துவ அறிவின் அடிப்படையில், எக்ஸ்-ரே படத்தில் தெரிகிற உடல் பகுதிகளின் அசாதாரண வடிவமைப்பை ஒப்பிட்டுப் பார்த்து நோயைக் கணிக்கிறார்கள்.

முன்னேற்பாடுகள் என்ன?

# எக்ஸ்-ரே பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை; எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

# முடிந்தவரை எக்ஸ்-ரே எடுக்கப்படும் உடல் பகுதியில் ஆடைகளைக் களைந்துவிட வேண்டும்.

# மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்கடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும்.

# காசு, சாவி, ஏடிஎம் கார்டு, உலோகப் பொருட்கள் போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.

# நெஞ்சுப் பகுதியை எக்ஸ்-ரே எடுக்கும்போது மட்டும் பயனாளி மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு, எக்ஸ்-ரே எடுப்பவர் சொல்லும்வரை மூச்சை வெளியில் விடாமல் அடக்கிக்கொள்ள வேண்டும்.

நெஞ்சுப் பகுதி எக்ஸ்-ரே

# மூச்சுக் குழாய், நுரையீரல், நுரையீரல் உறை, இதயம், நெஞ்செலும்புகள் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை இதில் கண்டுபிடிக்கலாம்.

# அதாவது அடிக்கடி நெஞ்சில் சளி பிடிப்பவர்களுக்கு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசத் தடை இருப்பவர்களுக்கு, நெஞ்சில் வலி ஏற்படுபவர்களுக்கு முதலில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனை இது.

# காசநோய், பிரைமரி காம்ப்ளெக்ஸ், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் காற்றேற்றம் (Emphysema), நுரையீரல் உறையில் நீர் கோத்தல், ரத்தம் கட்டுதல், மூச்சுக்குழாய் புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறியலாம்.

# இதய வீக்கம், இதய உறையில் நீர் கோத்தல், இடம் மாறியுள்ள இதயம், இதயச் செயலிழப்பு, மகாதமனி வீக்கம் முதலியவற்றையும் இந்தப் பரிசோதனையில் அறிய முடியும்.

# விபத்து காரணமாக நெஞ்செலும்புகளில் அடிபட்டு முறிவு ஏற்பட்டிருந்தால் தெரியும்.

# அந்நியப் பொருள்கள் ஏதேனும் மூச்சுக்குழாய்க்குள் அல்லது நுரையீரலுக்குள் சென்றிருந்தாலும் தெரியும்.

# நெஞ்சுக்குள் குடல் ஏறியிருந்தால் (Diaphragmatic Hernia) தெரியும்.

வயிற்றுப் பகுதி எக்ஸ்-ரே

# வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் ஆகியவற்றைக் காணலாம்.

# குடலில் துளை விழுந்துபோனால் அல்லது குடலில் அடைப்பு இருந்தால் காணலாம்.

# வயிற்றில் அந்நியப் பொருட்கள் இருந்தால் காணலாம். உதாரணத்துக்கு, குழந்தைகள் நாணயத்தை விழுங்கிவிடும்போது அதைக் காண முடியும்.

# கர்ப்பிணியின் வயிற்றில் சிசுவைக் காண முடியும்.

முகப்பகுதி எக்ஸ்-ரே

# சைனஸ் கோளாறுகள், மூக்கில் உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றை அறியலாம்.

# முக எலும்பில் அடிபட்டிருந்தால் எலும்பு முறிவைக் காணலாம்.

தலைப் பகுதி எக்ஸ்-ரே

# தலைக்காயங்களால் ஏற்படுகிற எலும்பு முறிவு, சிதைவு, மூளை பாதிப்பு, மூளையில் ரத்த உறைவு ஆகியவற்றை அறியலாம்.

# மண்டை ஓட்டில் உள்ள பிரச்சினைகளையும் காண முடியும்.

# சிறிய தலை, பெரிய தலையோடு குழந்தைகள் பிறப்ப தற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

# மூளைக் கட்டிகளை அறியலாம்.

கை, கால், பாதம் பகுதி எக்ஸ்-ரே

# இப்பகுதிகளில் ஏற்படுகிற எலும்பு முறிவு, வீக்கம், ரத்த உறைவு, மூட்டு பாதிப்புகள் ஆகியவற்றை அறியலாம்.

# இதன் பலனால் மூட்டுவலி மற்றும் கை, கால் வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறலாம்.

கழுத்துப் பகுதி எக்ஸ்-ரே

# இப்பகுதிகளில் ஏற்படுகிற எலும்பு முறிவு, எலும்புத் தேய்மானம், உட்சவ்வு நகர்தல் ஆகியவற்றை அறியலாம்.

# இதன் பலனால் கழுத்து வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறலாம்.

# தொண்டையில் அந்நியப் பொருள் சிக்கியிருப்பதைக் காண முடியும்.

முதுகுப் பகுதி எக்ஸ்-ரே

# இப்பகுதிகளில் ஏற்படுகிற காசநோய், புற்றுநோய், எலும்பு முறிவு, எலும்புத் தேய்மானம், உட்சவ்வு நகர்தல், எலும்பு வலுவிழப்பு நோய் ஆகியவற்றை அறியலாம்.

# இதன் பலனால் முதுகு வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறலாம்.

இடுப்புப் பகுதி எக்ஸ்-ரே

# இப்பகுதிகளில் ஏற்படுகிற எலும்பு முறிவு, எலும்புத் தேய்மானம், வீக்கம், உட்சவ்வு நகர்தல் ஆகியவற்றை அறியலாம்.

# இதன் பலனால் இடுப்பு வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறலாம்.

டிஜிட்டல் எக்ஸ்-ரே: என்ன நன்மை?

சாதாரண எக்ஸ்-ரேயை நீண்ட காலம் பாதுகாத்துவைக்க முடியாது. டிஜிட்டல் எக்ஸ்-ரேவைக் கணினியில் எவ்வளவு காலத்துக்கும் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு நோய் மீண்டும் தாக்கும்போது, முன்னர் வந்தபோது அந்த நோயின் தன்மை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும்.

கர்ப்பிணிகள் கவனம்!

கர்ப்பக் காலத்தில் எக்ஸ்-ரே எடுப்பதை மருத்துவர்களே தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக, முதல் ஏழு வாரங்களில் எக்ஸ்-ரே எடுக்கவே கூடாது. அந்தச் சமயத்தில் எக்ஸ்-ரே மிகவும் அவசியப்பட்டால், காரீயமும் ரப்பரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு பிரத்யேக மேலாடையைக் கர்ப்பிணியின் வயிற்றின் மேல் போர்த்திய பிறகுதான் எக்ஸ்-ரே எடுக்கப்படும். திருமணமான பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்குப் பிரச்சினை இருந்தால், கர்ப்பம் ஆனது தெரியாமலேயே சில நேரங்களில் எக்ஸ்-ரே எடுக்க நேரும்போது, கருவுக்குப் பாதிப்பு ஏற்படலாம். நிறை மாதக் கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்-ரே எடுக்கலாம்; குறிப்பாக, குழந்தையின் தலை இறங்கிச் சுகப் பிரசவம் ஆக வாய்ப்புள்ளதா என அறியக் கர்ப்பிணியின் இடுப்புப் பகுதி எக்ஸ்-ரே உதவுகிறது.

முக்கியக் குறிப்புகள்:

# குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, எக்ஸ்-ரே பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது.

# எக்ஸ்-ரே அறையில் எக்ஸ்-ரே எடுப்பவரைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.

# எக்ஸ்-ரே எடுப்பவர் ஒவ்வொரு முறையும் இந்தக் கதிர்களைத் தடுக்கிற தடுப்புப் பட்டை (Lead apron) உள்ள மேலாடையைத் தன் உடலில் அணிந்துகொண்டுதான் எக்ஸ்-ரே படத்தை எடுக்க வேண்டும்.



எக்ஸ்-ரே எப்போதெல்லாம் தேவை?

# நோயைக் கண்டுபிடித்துச் சிகிச்சை கொடுப்பதற்கு இது பயன்படுகிறது.

# குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னர் உடலின் அதே பகுதியை மறுபடியும் எக்ஸ்-ரே எடுக்கும்போது, அந்த நோய் குணமாகி வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

# முழு உடல் பரிசோதனையில் நெஞ்சு எக்ஸ்-ரே ஒரு முக்கியப் பரிசோதனையாக இருக்கிறது.

# அறுவை சிகிச்சைக்கு மயக்கம் ஏற்படுத்துவதற்கு முன்னர், நுரையீரலின் நிலைமை மற்றும் உடல்நிலை சரியாக உள்ளதா என்று தெரிந்துகொள்ள இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

# வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படும்போது, நெஞ்சு எக்ஸ்-ரே பரிசோதனை கட்டாயம்.

# குழந்தைகளைப் பாதிக்கும் ரிக்கெட்ஸ் நோயை எலும்பு எக்ஸ்-ரேயில் அறியலாம்.

# வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி உள்ளதா என்பதையும் ஒருவரின் வயதையும் எலும்பு எக்ஸ்-ரே மூலம் அறியலாம்.

# இடுப்பு எலும்பு எக்ஸ்-ரே மூலம் ஆண், பெண் பாலினத்தை அறியலாம். புலனாய்வுத் துறையினருக்கு இது பயன்படுகிறது.

# பல் அறுவை சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது.





(அடுத்த வாரம்: சிறப்பு எக்ஸ்-ரே பரிசோதனைகள் செய்யப்படுவது ஏன்?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x