Last Updated : 18 Mar, 2016 11:05 AM

 

Published : 18 Mar 2016 11:05 AM
Last Updated : 18 Mar 2016 11:05 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: உன் துக்கத்தை எனக்குத் தா

காதல் மயக்கம் தருபவள் மட்டுமல்ல காதலி. காதலன் மனம் உடைந்து துயரப்படும்போது ஒரு தாயாக நின்று அவனுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தவும் அறிந்தவள் அவள். இப்படிப்பட்ட ஆறுதல் உணர்வை இரண்டு விதமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாடல்.

திரைப்படம்: பஹாரோன் கீ சப்னா (பருவகாலங்களின் கனவு).

பாடல்: மஜ்ரூ சுல்தான் பூரி

பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

இசை: ஆர்.டி. பர்மன்.

பாடல்:

ஆஜா பியா துஹே பியார் தூம்

கோரி பய்யா தோப்பே வார் தூம்

கிஸீ லியே, கிஸீ லியே தும் இத்னா உதாஸ்

சுக்கே சுக்கே ஹோட்டே, அக்கியோன் மே பியாஸ்

பொருள்:

வா, காதலா, வழங்குகிறேன் என் அன்பை

வாரி அணைத்து உன்னைக் காக்கும்

என் சிவந்த தோள்கள்

எதனால் உனக்கு இத்தனை விரக்தி

வற்றிய உதடுகள், கண்களில் ஏக்கம்

ஆற்றாமையால் எரிந்துள்ளன பல தேகங்கள்

இந்த இரவில் களைத்துப்போன

உன் கரங்களைக் கலந்துவிடு என் கைகளுடன்

என் சுகத்தை எடுத்துக்கொள் - உன் துக்கத்தை எனக்குத் தா

நானும் வாழ்வேன் நீயும் வாழலாம்

உன் மேலுள்ள இப்பொல்லாத

கொடுமைகள் போகட்டும் விடு

நிமிடப் பொழுதில் உன் காலின்

முட்களைக் களைந்துவிடுவேன்

அழுகையை அடக்கி பர்தாவை அகற்றி

அமர்ந்துகொண்டிருக்கிறேன் உனக்காக, அன்பே வா

என் கண்களில்ருந்து கண்ணீர்

அருவியாய்க் கொட்டும்போது

உன் அன்பான ஒரு சிரிப்பு

அங்கு உதித்து மலரும்

நான் எப்படித் தோற்பேன்

கொஞ்சம் நினைத்துப் பார் அன்பே

இதே ஆறுதல் உணர்வை இன்னும் செம்மையாகச் சொல்கிறது தமிழ்ப் பாடல், தனக்கே உரிய அழகான உவமைகளுடன் கூடிய கண்ணதாசனின் வரிகளும் எஸ்.ஜானகியின் வசீகரமான குரலும் மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பும் காலத்தால் அழியாத பாடலாக இதை ஆக்கியிருக்கின்றன.



படம்: ஆலயமணி.

பாடல்: கண்ணதாசன்;

பாடியவர்: எஸ்.ஜானகி; இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி

பாடல்:

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்

அதைக் கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்

கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க

மையிட்ட கண்கள் சிவந்திருக்க

இரு கரம் நீட்டித் திரு முகம் காட்டி

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தூக்கம் உன் விழிகளைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

(சூழல் ஒன்று பார்வை இரண்டு நிறைந்தது)

சூழல் ஒன்று பார்வை இரண்டு