Published : 05 Mar 2016 10:49 AM
Last Updated : 05 Mar 2016 10:49 AM

கிழக்கில் விரியும் கிளைகள் - 20: வெண்கடம்பும் செங்கடம்பும் வேறு வேறா?

எது உண்மையான கடம்ப மரம் என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தமிழிலக்கியத்திலுள்ள செய்திகளையும், வரலாறு, புராணத் தரவுகளையும், தற்காலத் தாவரவியல் அடிப்படையில் இந்தத் தாவரத்தின் பூகோள விரவல் (Geographical Distribution) பற்றிய தரவுகளையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழிலக்கியம் கூறும் மராஅம் மரத்தின் பண்புகள்

பாலை நிலத்தது; உறுதியான வலுவான பெரிய மரம்; அடிப்பகுதி நன்கு திரண்டு, கருத்தது; பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை; பூக்கள் வெள்ளிய மழைத்துளி போன்று வெண்மையானவை; மணமுள்ளவை; கூந்தலில் சூடப்பட்டவை; வேனில் காலத்தில் தோன்றுபவை. எனவே, தமிழிலக்கிய அடிப்படையில் காணும்போது மராஅம் (மரவம், மரா) என்பது, மித்ரகைனா பார்விஃபோலியாவின் தற்காலத் தாவரவியல் அறிஞர்களின் விவரிப்போடு நன்கு பொருந்திப்போகிறது.

தமிழிலக்கியம் கூறும் கடம்ப மரத்தின் பண்புகள்

பாலை நிலத்தது (குறிஞ்சிப்பாட்டின் நீண்ட மலர் பட்டியலில் இது இல்லை); உறுதியான மரம்; பூக்கள் கொத்தாகப் பந்து போன்ற மஞ்சரியில் அமைந்தவை; பூத்து மணம் வீசுபவை. எனவே, இந்த விவரிப்பும் மித்ரகைனா பார்விஃபோலியாவின் தற்காலத் தாவரவியல் அறிஞர்களின் விவரிப்போடு நன்கு பொருந்திப்போகிறது. இந்தத் தாவரம் இடத்திற்கேற்ப ஏறக்குறைய ஆண்டு முழுவதும் பூக்கிறது.

பாலைத் திணை பாடிய புலவர்கள் வேனில் காலத்தில் பூப்பதையும், மற்றவர் இது கார்காலத்தில் பூப்பதையும் பாடியுள்ளனர். மேலும், கடம்பு, வெண் கடம்பு (வெண்மையான பூக்களைப் பெற்றிருப்பதால்), செங்கடம்பு (இது ஒரு இலக்கிய உருவகம்; சீரிய, சிறப்பான, வளமான கடம்பு என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, சிவந்த பூக்களைக் கொண்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. இதற்கு நல்ல மற்றொரு ஒப்பீடு `செங்கோல்’.)

தவறான கடம்பு

கடம்பின் தமிழிலக்கிய விவரிப்புப் பண்புகளில் பல நியோலமார்க்கியா கடம்பாவின் தற்காலத் தாவரவியல் அறிஞர்களின் விவரிப்புப் பண்புகளோடு ஒத்திருந்தாலும், தாவரப் பூகோள விரவல் (distribution) பண்புகள், இதைத் தமிழிலக்கியக் கடம்ப மரமாகச் சுட்டவில்லை. இந்தத் தாவரம் அரிதாகவே தமிழகத்தில் ஒரு இயல் தாவரமாக (wild plant) காணப்பட்டது. குறிப்பாக இது பாலைத் திணையில் காணப்படுவதில்லை. எனினும், பக்தி இலக்கியக் காலத்துக்குப் பிறகு, அதாவது கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பின்பு இது ஒரு வளர்ப்புத் தாவரமாக (cultivated plant) அதிக அளவில் நுழையத் தொடங்கியது.

இதுதான் தற்போது கடம்ப மரம் என்று பாமர மக்களால் தவறாகக் கருதப்படுகிறது. சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் பேராசிரியரான நரசிம்மன் மற்றும் என்னுடைய கருத்துப்படி மித்ரகைனா பார்விஃபோலியாதான் தமிழிலக்கியக் கடம்ப மரம். எப்படிக் காந்தள் தாவரம் கோடல், தோன்றி, வெண்காந்தள், செங்காந்தள் போன்ற வெவ்வேறு பெயர்களால் தமிழிலக்கியத்தில் அழைக்கப்பட்டதோ, அதேபோன்றுதான் கடம்பும் வெண்கடம்பு, செங்கடம்பு, மராஅம், மராஅத்து, மரா, மரவம் போன்ற வெவ்வேறு பெயர்களால் தமிழிலக்கியத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

மற்றக் கடம்புகள்

‘நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க்கடம்பின் துணஐயார் கோதை’ என்று சிறுபாணாற்றுப் படையில் சுட்டப்பட்ட நீர்க்கடம்பும் (துணையார் கோதை என்பது பூத்து ஒரு கோதை மாலை போன்று தொங்கும் என்று பொருள்படும்); ‘கடம்பு சூடிய கன்னி மாலைபோல், தொடர்ந்து கைவிடாத தோழிமாரொடும்’ என்று சீவகசிந்தாமணி (பாடல் வரி 990) குறிப்பிட்ட கடம்பும் பாரிங்டோனியா அக்யுடாங்குலா ஆகும்.

தற்காலத் தாவரவியல் அறிஞர்களால் ஹால்டினா கார்டிஃபோலியா, ஹைமிநோடிக்டியான் ஒரிக்சென்சே என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மஞ்சள் கடம்பும் வெள்ளைக் கடம்பும் தமிழிலக்கியத்தில் இடம்பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.

(அடுத்த வாரம்: கடம்பும் முருகனும்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x