Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

டிங்குவிடம் கேளுங்கள்: எதிர்பார்ப்புகள் ஏன் உருவாகின்றன?

பூமி சூரியனுக்கு அருகில் வரும்போது கோடை காலமாகவும் தொலைவில் இருக்கும்போது குளிர் காலமாகவும் இருக்கிறதா, டிங்கு?

- சி.சி. விஷ்வ துளசி, 4-ம் வகுப்பு, எம்.ஏ.எம். ஹைடெக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மேட்டூர் அணை, சேலம்.

பூமி கோள வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், சில நேரம் சூரியனுக்கு அருகிலும் சில நேரம் சூரியனுக்குத் தொலைவிலும் இருப்பது உண்மைதான். ஆனால், இதன் மூலம் பருவநிலைகளில் பெரிதளவில் மாற்றம் ஏற்படாது. பூமி சற்றுச் சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் காரணமாகவே பூமியில் கோடை, குளிர் போன்ற பருவக் காலங்கள் ஏற்படுகின்றன. பூமியின் பல்வேறு பகுதிகள் சூரியனின் நேரடிக் கதிர்களைப் பெறுகின்றன. பூமியின் வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்தால், வடக்கு அரைக்கோளத்தில் கோடை காலம். தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்தால் வடக்கு அரைக்கோளத்தில் குளிர் காலம் ஏற்படுகிறது, விஷ்வ துளசி.

மனிதனுக்கு ஏன் எதிர்பார்ப்புகள் வருகின்றன, டிங்கு?

- வி. ஹேமவர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

நிச்சயமற்ற ஒரு நிலையில் அந்த நிகழ்வைச் சுற்றியுள்ள அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தேடுவது மனித இயல்பு. இந்த நம்பிக்கை யதார்த்தமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எதிர்பார்க்காத ஒன்று நடந்தால் அது ஆச்சரியத்தைத் தரும். எதிர்பார்த்த ஒன்று நடந்தால் மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த ஒன்று நடக்காவிட்டால் ஏமாற்றத்தைத் தரும். எதிர்பார்ப்பு என்பது சமூக விதியாகக் கருதப்படுகிறது. எதிர்பார்ப்புகளிலும் பல வகைகள் இருக்கின்றன. நான் கடினமாக உழைத்துத் தேர்வு எழுதியிருக்கிறேன். அதனால் நல்ல மதிப்பெண்கள் வரும் என்கிற எதிர்பார்ப்பு நம்பிக்கை தரக்கூடியது. இது நம் கையில் இருக்கக்கூடியது. நான் இவருக்கு இதைச் செய்திருக்கிறேன், அதனால் அவர் எனக்கும் இதைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பில், நம்பிக்கையும் கிடைக்கலாம், ஏமாற்றமும் கிடைக்கலாம். ஏனென்றால் இது நம் கையில் இல்லை, இன்னொருவரின் கையில் இருக்கிறது. அதனால்தான் நாம் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்பு நம்பிக்கையாகவும் ஆரோக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. பிறர் மீது எதிர்பார்ப்பு உருவாகும்போது அதில் வெற்றி அல்லது தோல்வி அடையும் சாத்தியங்கள் இருக்கின்றன. இது நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் தரக்கூடியது. அதனால்தான் பிறரிடம் எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்வது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. எதிர்பார்ப்புகள் ஏன் உருவாகின்றன என்கிற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. எதிர்காலத்தில் துல்லியமான காரணம் தெரிய வரலாம், ஹேமவர்ஷினி.

KDM என்று நகைகளில் குறிப்பிடப்படுகிறதே ஏன், டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

தங்கத்தில் ‘காட்மியம்’ கலந்திருப்பதைக் குறிக்கிறது. நகைகளில் 92 சதவீதம் தங்கமும் 8 சதவீதம் காட்மியமும் கலந்து செய்யப்படும் நகைகளை KDM என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு காட்மியம் கலந்தாலும் தங்கத்தின் தூய்மை பாதுகாக்கப்படுகிறது, மஞ்சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x