Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

நலம்தானா 20: திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஏன் அவசியம்?

டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார்

திருமணத்துக்கு முன்பு பத்துப் பொருத்தம் பார்க்கிறார்கள். அதோடு மணமகளுக்கும், மணமகனுக்கும் உடல் பொருத்தம், உள்ளப் பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது.

ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதற்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அறுவைசிகிச்சைக்காக ரத்தப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. கல்யாணம் நின்றுவிட்டது. ஒருவேளை அவர்களுக்குத் திருமணம் நடந்தபின் எய்ட்ஸ் இருப்பது தெரிந்திருந்தால், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நோய் வந்திருக்கும், இல்லையா?

ஒருவர் பெண் பார்க்க சென்னை சென்றார். அவரின் நெருக்கமான நண்பரும் அவருடன் சென்றார். பெண் பிடித்துத் திருமண ஏற்பாடு நடந்தது. அந்த நண்பர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு ஒரு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தார். தன் நண்பருக்குத் திருமண நிச்சயம் செய்த பெண்ணுக்கு அங்கே சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. அந்தத் திருமணமும் நின்றுவிட்டது.

மருத்துவப் பொருத்தம் முக்கியம்

அண்மைக் காலமாக நிறைய விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதுவும் திருமணமான சில மாதங்களில். எய்ட்ஸ், மனநலப் பாதிப்பு, ஆண் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறாமல், உண்மையை மறைத்துத் திருமணம் நடத்திவைத்தால் விவாகரத்துக்கள் நடக்கத்தான் செய்யும். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நீண்ட காலத்துக்கு மூடி மறைக்க முடியாது.

திருமணத்துக்கு முன்பாக மதம், ஜாதி, உட்பிரிவு, குடும்ப கெளரவம், வயது, படிப்பு, வேலை, சம்பளம், வயது, நிறம், அழகு, உயரம், படிப்பு, சம்பளம், பத்துப் பொருத்தம், ஜாதக/நட்சத்திரப் பொருத்தம் எனப் பலவற்றையும் பார்க்கிறார்கள். இவற்றில் சில பொருத்தங்கள் இல்லையென்றால் நிராகரிக்கிறார்கள். அதேபோல மணமகன், மணமகளின் உடல்நல, மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது தேவையற்ற சிக்கல்களைத் தடுக்கும். உடல், மனநிலை பாதிப்புகளைக் குறித்து நேடியாகப் பேசிவிட்டால் பிரச்சினை இல்லை.

நெருங்கிய உறவுப் பிரச்சினை

அதேபோல், உறவு விட்டுப்போகக் கூடாது, சொத்து போகக் கூடாது என்று நடத்தப்படும் நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா? தலசீமியா, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், டவுன் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் (சிபி), காதுகேளாமை, பார்வைக் குறைபாடு போன்றவை அவற்றில் முக்கியமானவை. இந்தப் பாதிப்பு உள்ள குடும்பத்தினர் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். அதைத் தேவையற்ற ஒன்றாகப் பார்க்க வேண்டியதில்லை.

இப்படிப் பல்வேறு காரணங்களுக்காகத் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இது விநோதமாகவும் அதிசயமாகவும் தெரியலாம். ஆனால், ஆரோக்கியமான குடும்பம் உருவாவதற்கும், விவாகரத்துக்களைத் தடுப்பதற்கும், வருங்காலச் சந்ததியினரைப் பிறவி நோய்களிலிருந்து காப்பதற்கும் மருத்துவப் பரிசோதனைகள் பெரிதும் உதவும். மணமகன், மணமகள் உடல், மன ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளவும் மேம்படுத்தவுமே இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x