Last Updated : 20 Jun, 2014 03:19 PM

 

Published : 20 Jun 2014 03:19 PM
Last Updated : 20 Jun 2014 03:19 PM

சிறகொடிந்த சினிமா டிக்கெட்!

கடந்த வாரம் ஒரு பேட்டியில் கமல் ஹாசன் சொன்னது இது: மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலையையும், கோக் விலையையும் அந்தந்த நிறுவனத்தினரே நிர்ணயிக்கும்போது, திரையரங்க டிக்கெட் கட்டணத்தை மட்டும் அரசு ஏன் நிர்ணயிக்க வேண்டும்? தமிழகம்தான் இருப்பதிலேயே சினிமா பார்ப்பதற்கு மலிவான இடமாக இருக்கிறது. திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்கோ, திரைத் துறையினரின் ஆரோக்கியத்திற்கோ இது உகந்ததல்ல.

அவர் சொல்லாமல் விட்டது; திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்ன் மற்றும் காப்பி/தேநீர் விலைகளை அந்தந்த அரங்கு நிர்வாகமே நிர்ணயிக்கும்போது, சினிமா கட்டணங்களை மட்டும் ஏன் அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்?

தேவையும் நிர்ணயமும்

தமிழ் சினிமாவின் வருமான வளர்ச்சியை அதிகம் பாதிப்பது, மாறவே மாறாத திரையரங்க நுழைவுக் கட்டண விகிதம்தான். முக்கியமான நடிகர்களின் படங்கள், அதிகம் எதிர்பார்ப்புள்ள, மக்களுக்குப் பிடித்துப்போன படங்களை மட்டுமே மக்கள் தற்போது திரையரங்குகளுக்கு வந்து பார்க்கும் சூழ்நிலை உள்ளது. 3 நிமிடம் அருந்தும் காப்பிக்கு 60 ரூபாய் கொடுக்கத் தயங்காத பார்வையாளர்கள் 3 மணி நேரம் பார்க்கும் ஒரு திரைப்படத்திற்கு, ரூபாய் 30 முதல் 120 மட்டுமே கட்டணம் என ஏன் அரசாங்கம் நிர்ணயிக்கவேண்டும்?

குறைந்தபட்சம், டிமாண்ட் அண்ட் சப்ளை என்ற சந்தை விதிமுறைப்படி, தேவை நிலவும் படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமைகூட எவருக்கும் இல்லாததுதான் ஒரு சவாலான சூழ்நிலையைத் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த நிலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இன்று பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் வட இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரு மல்டிபிளக்ஸ் அரங்கில் படம் பார்க்க டிக்கெட்டுக்கு ரூபாய் 90 முதல், ரூபாய் 400 வரை தருகிறார்கள் (தமிழ் அல்லது எந்த மொழிப் படமானாலும்). காலைக் காட்சிக்கு 90 ரூபாய், அனேக மக்கள் பார்க்க நினைக்கும் மாலை மற்றும் இரவுக் காட்சிகளுக்கு ரூபாய் 300 முதல் 400 என ஒரு புதிய படத்திற்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை திரையரங்குகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பார்வையாளர்களும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். திங்கள் முதல் வியாழன் வரை கட்டணம் குறைக்கப்பட்டு, படத்தின் தேவைக்கு ஏற்பக் கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், எந்த நாளானாலும், எந்த காட்சி யானாலும், ஒரே கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்பது தமிழகத்தில் அரசு ஆணையாக இருக்கிறது. இது திரையரங்குகளின் வருமான முன்னேற்றத்தைப் பெருமளவில் தடுக்கிறது.

விலைவாசியும் கட்டணமும்

இன்று தமிழ்நாட்டில் அமலில் உள்ள டிக்கெட் கட்டணங்கள் 1-1-2007 அன்று அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில், எல்லாப் பொருட்களின் விலையும், தொழிலாளர்கள் சம்பளமும், திரையரங்கு சேவைகளின் செலவுகளும் இரண்டு மடங்கு கூடி இருந்தாலும், டிக்கெட் கட்டணம் மட்டும் அதேயளவில் இருக்கிறது. சினிமா டிக்கெட் கட்டணத்தை ஏற்றக் கூடாது எனக் கூறுபவர்கள், நம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எப்படி 2007 முதல் அதிகமாகி உள்ளன என்பதைக் கீழ்காணும் அட்டவணையில் பார்க்க வேண்டும். அரசாங்கம் சலுகையாகக் கொடுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கூட, இந்தக் காலக் கட்டத்தில் 43% கூடியுள்ளது.

கட்டண உயர்வு ஏன் அவசியம்?

பார்வையாளர்களுக்குத் தரமான சினிமா பார்க்கும் அனுபவத்தைத் திரை யரங்குகள் ஏற்படுத்த, அதிகமாகிக்கொண்டே போகும் செலவுகளுடன், வருமானமும் திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெருக வேண்டும். இல்லையென்றால், தொடர் நஷ்டம் காரணமாக ஒரு கட்டத்தில் அரங்கை மூட வேண்டிய நிலை உருவாகும். இன்று நிறையத் திரை அரங்குகள், அவற்றின் தரத்தை உயர்த்த முடியாமல், லாபத்தில் இயங்க முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த அடிமாட்டு நுழைவுக் கட்டண முறையே! டிக்கெட் கட்டணங்கள் தமிழகத்தில் அதிகம் என்று நினைப்பவர்கள் அண்டை மாநிலத்தில் தற்போது வசூலிக்கப்படும் நிலவரத்தை அட்டவணையில் பார்க்கலாம்.

பார்வையாளர்களுக்குத் தரமான சினிமா பார்க்கும் அனுபவத்தைத் திரை யரங்குகள் ஏற்படுத்த, அதிகமாகிக்கொண்டே போகும் செலவுகளுடன், வருமானமும் திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெருக வேண்டும். இல்லையென்றால், தொடர் நஷ்டம் காரணமாக ஒரு கட்டத்தில் அரங்கை மூட வேண்டிய நிலை உருவாகும். இன்று நிறையத் திரை அரங்குகள், அவற்றின் தரத்தை உயர்த்த முடியாமல், லாபத்தில் இயங்க முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த அடிமாட்டு நுழைவுக் கட்டண முறையே! டிக்கெட் கட்டணங்கள் தமிழகத்தில் அதிகம் என்று நினைப்பவர்கள் அண்டை மாநிலத்தில் தற்போது வசூலிக்கப்படும் நிலவரத்தை அட்டவணையில் பார்க்கலாம்.

தேவை நிர்ணய உரிமை

திரையரங்கு அனுபவம் வேண்டுபவர்கள் கண்டிப்பாக அரங்குக்கு வந்து பார்ப்பார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை கூடினாலும் அவற்றை வாங்கிவருவது போல, நல்ல திரைப்படத்தை அரங்கில் வந்து பார்க்க நினைக்கும் பார்வையாளர்களுக்கு, அண்டை மாநிலங்கள் அளவு இல்லாவிட்டாலும், படங்களின் வரவேற்புக்கு ஏற்பச் சரியான டிக்கெட் விலை நிர்ணயிக்கும் உரிமை திரையரங்குகளுக்கு இருக்க வேண்டும்.

சினிமா கட்டணம் அதிகம் என்பதால்தான் வீடியோ பைரசி (மோசடி) அதிகமாக உள்ளது என்ற ஆதாரமில்லாத கருத்து நிலவிவருகிறது. அப்படி என்றால், நம்மை விட அதிகக் கட்டணங்கள் வசூலிக்கும் அண்டை மாநிலங்களில், அம்மொழிப் படங்களுக்குப் பைரசி நம்மைவிட அதிகமாக இருக்க வேண்டும். தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில், புதுப் படங்களுக்கு பைரசி தொல்லை இல்லை என்பதுதான் உண்மை. எனவே கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சீர்படுத்தப்பட வேண்டும். நம் சகோதர மாநிலங்களில் எல்லாம், கட்டணங்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப் படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஏழு வருடங்களாக அதே கட்டணம் நீடிப்பது திரைத்துறை வளரவும், உள்ளடக்கத்தில் அதன் தரம் உயரவும் உதவக்கூடியதாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x