Last Updated : 18 Jul, 2021 08:09 AM

 

Published : 18 Jul 2021 08:09 AM
Last Updated : 18 Jul 2021 08:09 AM

சென்னைப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை

ஒலிம்பிக் மட்டுமல்ல இலக்கு

தற்போது குஜராத்தில் வசித்தாலும் இளவேனிலின் பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம். நன்கு அறிமுகமானவர்களால் ‘இளா’ என்று அழைக்கப்படும் இவரது துப்பாக்கிச் சுடும் பயணம் 12 வயதில் தொடங்கியது. பயிற்சிக்கான துப்பாக்கியைக் கடனுதவி பெற்று வாங்கித் தந்துள்ளார் இவருடைய தந்தை. பின்னர் இளவேனில் துப்பாக்கிசுடும் போட்டிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அதன் விளைவாக 13 வயதில் முதல் பதக்கம் வென்றார்.
டெல்லியில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் திவ்யான்ஷ் பன்வருடன் சேர்ந்து, தங்கப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெல்வதற்காக மட்டுமே தான் பயிற்சி பெறவில்லை என்று சொல்லும் இளவேனில், நீடித்த வெற்றிக்கான அடித்தளமாகவும் தற்போதைய பயிற்சியை அமைத்துக்கொண்டுள்ளார். மன உறுதி அதிகம் தேவைப்படும் துப்பாக்கிச் சுடும் போட்டி, தன்னை ஆட்கொண்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறவர்களில் இளவேனில் வாலறிவனும் ஒருவர்.

சென்னைப் பெண்ணின் வரலாற்றுச் சாதனை

அந்தக் கால ராஜா ராணி திரைப்படங்களில் மட்டுமே வாள் சண்டையைப் பார்த்து பிரமித்திருந்த அந்தச் சிறுமிக்கு வாள் வீச்சுப் போட்டி குறித்துத் தெரிந்திருக்க நியாயமில்லை. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள முருகா தனுஷ்கோடி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோதுதான் சில விளையாட்டுகளுள் ஒன்றாக வாள் வீச்சு அறிமுகமானது. ‘வாள்’ மீதான ஈர்ப்பே அந்த விளையாட்டை அந்த 11 வயதுச் சிறுமியைத் தேர்ந்தெடுக்கவும் வைத்தது.

அந்தச் சிறுமியின் திறமை இந்திய விளையாட்டுக் கழகத்தின் பார்வையில் பட, பத்தாம் வகுப்பு முடித்த கையோடு கேரளத்தில் உள்ள தலசேரியில் பயிற்சிக்குச் சென்றார். 2017-ம் ஆண்டில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, இந்தப் போட்டியில் முதல் சர்வதேசப் பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார் அந்தச் சிறுமி பவானி தேவி. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள இவர், வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்கிற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

“வாள் வீச்சு விளையாட்டை நான் தேர்ந்தெடுத்து விளையாடியபோது இது பெண்களுக்கு உகந்ததா என்பது போன்று பல கேள்விகளை எதிர்கொண்டேன். ஆனால், என் இலக்கை அடைவதில் உறுதியுடன் இருந்தேன். அதுதான் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டுக்காக என்னை வெற்றிபெறச் செய்தது. இப்போது வாள் வீச்சுப் போட்டி குறித்து மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. இது தொடக்கம்தான்” என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார் பவானி தேவி. தனது 17 வருட பயிற்சியும் அனுபவமும் ஒலிம்பிக்கில் வெற்றியைத் தேடித்தரும் என்று பவானி தேவி நம்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x