Last Updated : 10 Jul, 2021 03:13 AM

 

Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

போலி அறிவியலை உடைத்தெறியும் தடுப்பூசி விநியோகம்

2021 ஜனவரி முதல் உலகம் முழுக்க பல நாடுகளில் நாவல் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. அப்போதி லிருந்தே போலி அறிவியலாளர்கள்-செயற்பாட்டாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகி றார்கள். இதில் முக்கியமாகச் சொல்லப்படுவது, தடுப்பூசியால்தான் வீரியமிக்க - உருமாறிய வைரஸ் உருவாகிறது என்பது. இது அறிவியல் பூர்வமாகச் சாத்தியமா?

எந்த ஒரு உயிரியாக இருந்தாலும் அது தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கும். பரிணாம வளர்ச்சியின் விளைவாகவே நாமும் மனிதர்களாக உருப்பெற்றிருக்கிறோம். அதுபோலவே வைரஸும் உருமாறும். வைரஸால் சுயமாகப் பெருக முடியாது. அதற்காக ஓம்புயிர்களில் தொற்றுகிறது. நாவல் கரோனா வைரஸைப் பொறுத்தவரை மனித உடலே ஓம்புயிர். அதனால், மனிதர்களிடையே எவ்வளவு காலம் இந்த கரோனா வைரஸ் வலம் வருகிறதோ, அதுவரை அது பெருகும் காலத்தில் உருமாறிக் கொண்ட இருக்கும். குறிப்பிட்ட உருமாற்றங்கள் அதன் பரவும் வேகத்தையும் ஏற்படுத்தும் தாக்கத்தையும் வீரியப்படுத்தக் கூடும். எனவே, தடுப்பூசி போடப் படுவதால்தான் வீரியம் அதிகரிக்கும் என்பது அடிப்படையிலேயே உண்மையில்லை.

மருந்தும் தடுப்பூசியும் வேறுபட்டவை

ஆனால், இந்தக் கருத்தை முன்வைக்கும் போலி அறிவியல்-செயற்பாட்டாளர்களின் வாதம் என்னவென்றால், தடுப்பூசியை எதிர்க்கும் எதிர்ப்பாற்றல் வைரஸுக்கு உருவாகிவிடும் என்பதே. இது மற்றொரு தவறான கற்பிதம். ‘மருந்து’ செயல்படும் விதமும், ‘தடுப்பூசி’ செயல்படும் விதமும் வேறுபட்டவை.

பாக்டீரியத் தொற்று உண்டாக்கும் உடல் உபாதைகளிலிருந்து காத்துக்கொள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படுகின்றன. 1928ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பிளெமிங் கண்டறிந்த பென்சிலின், அப்படிப்பட்ட ஒரு ஆன்டிபயாடிக் மருந்தே. இந்த மருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான ஸ்டெபிலோ காக்கஸ் (Staphylococcus) பாக்டீரியா வகைகள் பென்சிலினை எதிர்க்கும் திறனைப் பெற்று விட்ட தாக 1948இல் கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு ஆன்டி பயாடிக் மருந்துகள் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டு பயன் பாட்டில் இருக்கின்றன.

தடுப்பூசியே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்

இப்போது தடுப்பூசிக்கு வருவோம். தடுப்பூசியால் மட்டுமே ஒழிக்கப்பட்ட நோய் பெரியம்மை (smallpox). பல ஆண்டுகளாக உலகம் முழுக்கத் தடுப்பூசி போடப்பட்டு, இந்த நோய் ஒழிக்கப்பட்டது. இடையே, பெரியம்மையை உண்டாக்கிய வேரியோலா (variola) வைரஸ் உருமாற்றம் அடைந்தாலும், பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்போது, வைரஸ் உருமாற்றம் அடைய வழியில்லாமல் வீரியமற்றுப் போனது.

தடுப்பூசி போடப்பட்ட பின்புதான் வைரஸ் உருமாற்றம் அடைகிறது என்கிற வாதம் உண்மையென்று வைத்துக் கொண்டால், நாவல் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி அதிகம் போடப்பட்ட இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் ஏன் குறைந்தது? தற்போது இஸ்ரேலில் ஒரு தவணையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 60 சதவீதம். தினசரி தொற்று எண்ணிக்கை கிட்டத்திட்ட பூஜ்ஜியம். அதனால், மக்கள்தொகையின் பெரும்பகுதிக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டால், வைரஸ் பெருகவோ உருமாற்றம் அடையவோ சாத்தியம் இருக்காது, தொற்றுப் பரவலும் மட்டுப்பட்டுவிடும். காலப் போக்கில் வைரஸ் மனிதர்களிடையே உலா வருவதை நிறுத்திக்கொள்ளும்.

கரோனா தொற்றுப் பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அறிவியலாளர்களும் மருத்துவர் களும் வைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் எழுதிவந்தார்கள், தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போது மக்கள் கேட்ட முக்கியக் கேள்வி, எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பதாகவே இருந்தது. இந்தியாவில் ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து தடுப்பூசி விநியோகம் தொடங்கியது. கூடவே தடுப்பூசி மறுப்பும் போலி அறிவியல் பரப்புரையும் தொடங்கின. தற்போது இந்தியாவில் தடுப்பூசிப் பற்றாக்குறை இருப்பது உண்மை என்றாலும், தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டால் உடனே செலுத்திக்கொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் முக்கியமானது. கடந்த ஆண்டில் தடுப்பூசி எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்த மக்கள், தடுப்பூசி கிடைக்கத் தொடங்கிய பின்பு சந்தேகங்களை மட்டும் அடுக்கிக்கொண்டே போவது சரியா?

இரண்டாம் அலையின்போது இந்தியா அதிகப்படியாக விலை கொடுத்துவிட்டது, இழப்புகளைச் சந்தித்தது. தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படாவிட்டாலும், மக்கள் தடுப்பூசியை மறுத்தாலும் மூன்றாம் அலை கூடுதல் வேகத்துடன் வரும். இந்தியாவில் இன்னும் குழந்தை களுக்குத் தடுப்பூசி வரவில்லை. அப்படி இருக்கும்போது, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலே நோய் தாக்காது, பெரியவர்களால் குழந்தைகளையும் நோய் தாக்காது. மனிதர்களிடையே கரோனா வைரஸ் நீண்ட காலம் உலவிவந்தால், இன்னும் வீரியமிக்க உருமாற்றத்தை அடையலாம், பேரிழப்பை ஏற்படுத்த லாம். அதனாலும், இந்த நிலையைக் கட்டுப்படுத்துவது மக்களான நம் கையில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர்,

இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x