Last Updated : 13 Feb, 2016 11:26 AM

 

Published : 13 Feb 2016 11:26 AM
Last Updated : 13 Feb 2016 11:26 AM

நீர்நிலை அருகே வீடு - கடுமையாகுமா விதிமுறைகள்?

நவம்பரிலும், டிசம்பரிலும் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவ மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாயின. பெருக்கெடுத்த வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. உடைமைகள் பறிபோயின. குறிப்பாக கான்கிரீட் காடாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, வகைமுறை இல்லாமல் நீர் நிலை அருகே கட்டப்பட்ட கட்டுமானங்கள் காரணமாகவே குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததாகச் சர்ச்சையும் உருவானது. நீர் நிலைகள் அருகே எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தவண்ணம் உள்ளன.

சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, நீர் நிலையில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நீர் நிலைகளிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இப்படி எந்த விதிமுறைகளும் இல்லை என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் நீர் நிலைகளை ஒட்டியே ஏராளமான கட்டுமானங்கள் உள்ளன. இன்னும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டே பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. நீர் நிலைகள் அருகே கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது பற்றி விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தால் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும் குறைந்தே இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் நீர் நிலைகள் அருகே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எழுத்துபூர்வமாக எந்தத் தடை உத்தரவும் இல்லை என்று கூறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், ரியல் எஸ்டேட் தொடர்பான நூல்களை எழுதியுவருமான ஜி. ஷ்யாம் சுந்தர்.

“இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவு வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை உள்ளது. ஆனால், அதுபோல ஒரு முழுமையான விதிமுறைகள் தமிழகத்தில் இல்லை. குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் ஒருவர் மனைகளை ஏற்படுத்த வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்பின் ஆணையர் அல்லது செயல் அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இந்த தடையில்லாச் சான்று கிடைத்துவிட்டால் நீர் நிலைகளிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் கட்டுமானங்களை ஏற்படுத்த முடியும். அதுவும் நீர் நிலையில் கால் வாய் அல்லது நீரோடை அருகே கூடக் கட்டிவிட முடியும்” என்று அதிர்ச்சி தகவலைக் கூறுகிறார் வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர்.

நகரமயமாக்கல் என்பது இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளைத் தேடி நகரங்களை நோக்கி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படி வருவோருக்கு வீடு என்பது அத்தியாவசிய தேவை. மேலும் தொழிற் வளர்ச்சியின் காரணமாகவும் கட்டுமானங்கள் பெருகிவருகின்றன. திட்டமிடாத நகர விரிவாக்கம் நீர் நிலை அருகே கட்டுமானங்கள் அமைய ஒரு காரணம் என்றே சொல்லலாம். ஆனாலும், வளர்ச்சியை நோக்கிச் செல்லும் போது அது மிகையாகிவிடக் கூடாது என்பதற்காக வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிமுறையின்படி வளர்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமே

“இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதி (டி.சி.ஆர்.) நீர் நிலைகள் அருகே கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை உள்ளதைக் குறிப்பிடுகிறது. ஆனால், பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) வளர்ச்சிக் கட்டுப்பாடு விதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த விதியை நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) பின்பற்றுகிறது. தமிழக நகராட்சி கட்டிட விதி 1972-ன் விதி 7-ன் படி நீர்த்தொட்டி, நீர்த்தேக்கம், நீரோடை, ஆறு, புதிய நீர் கால்வாய் அல்லது கிணறு ஆகியவற்றிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் கட்டுமானங்கள் அமைந்தால், அதிலிருந்து வெளியேறும் எந்தக் கழிவு நீரும் நீர் நிலைகளுக்குச் செல்வதை மட்டுமே தடுக்கிறது. இதன்மூலம் நீர் நிலைகளிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்குள் கட்டுமானங்களை மேற்கொள்ள தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்” என்கிறார் ஷ்யாம் சுந்தர்.

ஆனால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அப்படியில்லை. ஆந்திரா, தெலங்கானாவில் நீர் நிலைகளிலிருந்து 100 மீட்டர் வரையில் கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்களிலிருந்து 30 மீட்டர் தூரம் அல்லது வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து கட்டுமானங்களை மேற்கொள்ள தடை உள்ளது. சட்டீஸ்கரில் மகா நதி கால்வாயிலிருந்து 100 மீட்டர் வரை எந்தக் கட்டுமானத்துக்கும் அனுமதியில்லை. இதேபோல பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மா நிலங்களிலும் நீர் நிலைகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவு வரை கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை உள்ளது. இவையெல்லாம் கட்டுமான வளர்ச்சி கட்டுப்பாடு விதிமுறைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

நீர் நிலைகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்குக் கட்டுமானங்களை மேற்கொள்ளத் தமிழகத்தில் தடை விதித்தால் மட்டுமே நீர் நிலைகளைக் காப்பாற்ற முடியும். எதிர் காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் குடியிருப்புப் பகுதியில் வராமலும் தடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x