Last Updated : 06 Jul, 2021 03:12 AM

 

Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

தமிழக ஒலிம்பிக் நாயகர்கள்: சென்னைப் பசங்களின் எதிர்நீச்சல்!

டோக்கியோ ஒலிம்பிக் கவுன்டவுன் தொடங்கிவிட்டது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து பாய்மரப் படகுப் போட்டியில் மூன்று வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் மூவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே பெரிய சாதனை. அவர்கள், கே.சி.கணபதி (25), வருண் தாக்கர் (26). மும்பையில் உள்ள விஷ்ணு சரவணனும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்கிறார். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், மகாராஷ்டிரா கணக்கில் வருகிறார்.

வருண் தாக்கர் யார்?

சிறுவயதிலிருந்தே கால்பந்து வீர‌ராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆனால், வருணின் தந்தை சென்னையில் ஷிப்பிங் ஏஜென்சி வைத்திருந்தவர். அதனால், பாய்மரப் படகு போட்டி மீதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதை கற்றுக்கொள்ளத் தொடங்கிய பிறகு, இதுவே தன்னுடைய பாதை என்பதை முடிவு செய்தார். பயிற்சி, தொடர்ந்து முயற்சி எனப் பாய்மர படகுப் போட்டிகளில் உழைப்பைக் கொட்டிய வருண், இப்போது ஒலிம்பிக் வரை உயர்ந்து நிற்கிறார்.

கே.சி.கணபதி யார்?

கே.சி.கணபதி சென்னையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே பாய்மரப் படகுப் போட்டி மீது இவருக்குக் காதல் பிறந்துவிட்டது. இந்த விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காகவே 9-ம் வகுப்போடு பள்ளியிருந்து நின்றுவிட்டார். பிறகு பயிற்சிக்கு இடையே திறந்தவெளிப் பள்ளி மூலம் படிப்பையும் தொடர்ந்தார். தன் இலக்கை நோக்கி பயணிக்கத் துணிச்சலான முடிவை எடுத்த கணபதி, இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

சூப்பர் ஜோடி

2006ஆம் ஆண்டிலிருந்தே வருணும் கணபதியும் சென்னையில் ஒரே இடத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர்கள். வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சியே கதி எனக் கிடந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டி என்கிற நிலையில் இருந்தவர்கள். ஆனால், 2011இல் இருந்து இருவரும் ஜோடி சேரத் தொடங்கினர். தொடர்ந்து பல்வேறு பாய்மரப் படகுப் போட்டிகளிலும் பங்கேற்றுவந்தனர். இந்த ஆண்டு ஓமனில் நடைபெற்ற முஸ்ஸன்னா ஓபன் பாய்மரப் படகுப் போட்டியில் இருவரும் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றனர்.

ஒலிம்பிக் போட்டி

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா மீண்டும் பாய்மரப் படகுப் போட்டிக்கு திரும்பியிருக்கிறது. அதற்கு இவர்களும் ஒரு காரணம். இந்த ஒலிம்பிக்கில் கே.சி.கணபதியும் வருண் தாக்கரும் 49 இஆர் (அதாவது 4.99 மீட்டர்) பிரிவில் பங்கேற்கிறார்கள். முஸ்ஸன்னா ஓபன் சாம்பியன்ஷிப் தொடரிலும் இதே பிரிவில் பங்கேற்றுத்தான் வெற்றி பெற்றார்கள்.

தற்போது இருவருமே போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் பயிற்சியில் உள்ளார்கள். டோக்கியோவின் எனோஷிமாவில்தான் பாய்மரப் படகுப் போட்டி நடக்கிறது. இங்கு வீசும் காற்று மற்றும் அலைகள் லிஸ்பன் கடல் பகுதியிலும் நிலவுவதால் இங்கு பயிற்சியில் இருக்கிறார்கள்.

கொசுறு தகவல்

வழக்கமாகப் படகோட்டும் பயிற்சியிலும் போட்டியிலும் ஈடுபடும்போது இருவருமே சத்தமாகப் பாட்டு பாடிக்கொண்டே இருப்பார்களாம். ஒலிம்பிக் போட்டியிலும் பாட்டு பாடி வெற்றி பெற்று பதக்கத்துடன் வரட்டும் இந்த சென்னை ஜோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x