Last Updated : 25 Jun, 2021 03:54 PM

 

Published : 25 Jun 2021 03:54 PM
Last Updated : 25 Jun 2021 03:54 PM

15 ஆண்டுகள் எடுக்கப்பட்ட ஆவணப்படம்!

ஜப்பானின் மினமடா ஒரு கடற்கரை நகரம். 1956-ல் இந்த நகரில் வசிப்பவர்களிடையே வித்தியாசமான ஒரு நோய் பரவுவதைக் கண்டறிந்தார் ஒரு மருத்துவர். ரசாயன ஆலைக் கழிவிலிருந்து கடலில் கலக்கும் மெத்தில் மெர்க்குரி ரசாயனம் கடல்வாழ் உயிரினங்களின் உடலிலும் தங்குகிறது. அவற்றை உண்ணும் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் முறுக்கிக்கொள்ளுதல், செவித் திறன் மற்றும் பேச்சுத் திறன் அற்றுப்போவது போன்ற பிரச்சினைகள் நடக்கின்றன. குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இந்த நோய் உண்டானதால், ‘மினமடா நோய்’ என்றே அழைக்கப்பட்டது.

இந்த நோயின் தீவிரத் தன்மை, ஜப்பானிய அரசு “பாதிக்கப்பட்ட மக்கள் நடிக்கிறார்கள்” என்று பிரச்சினையை சரியாகக் கையாளாததால் ஏற்பட்ட விளைவுகள், நோயிலிருந்து சிறிது குணமடைந்தவர்களின் பேட்டிகள், மருத்துவர்களின் பேட்டிகள், தன்னார்வலர்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்களின் கருத்துகள், சட்டப் போராட்டங்கள், அரசின் நடவடிக்கைகள் என ஒரு முழு நீள ஆவணப்படமாக ‘மினமடா மண்டலா’வைக் கடந்த 2001-ல் தொடங்கி 2015 வரை எடுத்து முடித்தார் ஜப்பானின் பிரபலத் திரைப்பட இயக்குநர் கஸோ ஹரா.

“இப்படியொரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் 90-களின் இறுதியில் மினமடா நோயின் தாக்கம் குறையத் தொடங்கியபோது எழுந்தது. மினமடா பகுதியிலிருந்து ஏராளமானவர்கள் வேறு நகரங்களுக்குச் சென்று பணி செய்வதற்காக இடம்பெயர்ந்தனர். அப்படிப் பணி நிமித்தமாக ஒசாகா நகருக்கு வந்த ஒருவரை நான் சந்தித்தேன். மினமடா நோயின் அவலங்களை அவர் கூற, அந்த நோயைப் பற்றிய ஆவணப் படத்தை உருவாக்கும் எண்ணம் வந்தது” என்கிறார் கஸோ.

ஆவணப்படம் மூன்று பாகங்களாக இரண்டு இடைவேளைகளுடன் 372 நிமிடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக ஆறு மணி நேரத்துக்கு விரிகிறது இந்த ஆவணப்படம். நோயாளிகளே தங்களின் அனுபவங்களைக் கூறுதல், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், தன்னார்வலர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன. கஸோவின் 15 ஆண்டுகால உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படம், மனிதநேயத்தோடு அரசியலர்களின் கொள்கை முடிவுகளையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கஸோ ஹரா.

கஸோ ஹராவின் முந்தைய படமான ‘தி எம்பரர்ஸ் நேக்ட் ஆர்மி மார்ச்சஸ் ஆன்’, அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு தனிமனிதனைப் பற்றியது. “இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் தனி மனிதனில்லை, அன்றாடப் பாடுகளுக்காகத் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் மக்கள்தாம்” என்கிறார் இயக்குநர் கஸோ ஹரா.

அண்மையில் ராட்டர்டாமில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் ’மினமடா மண்டலா’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x