Published : 11 Jun 2021 10:09 AM
Last Updated : 11 Jun 2021 10:09 AM

கோலிவுட் ஜங்ஷன்: எதிரும் புதிரும் 

டில்லி பாபு தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தில் கோட் சூட் அணிந்த கடவுள் வேடத்தில் நடித்தார் விஜய்சேதுபதி. இதற்கு அப்படியே நேர்மாறாக மிஷ்கின் இயக்கிவரும் ‘பிசாசு 2’ படத்தில் கோட் சூட் அணிந்து பேய் ஓட்டுபவராக நடிக்க இருக்கிறாம் விஜய்சேதுபதி. படத்தில் பேய் பிடித்திருப்பது ஆண்ட்ரியாவுக்கு!

திருப்பிக் கொடுப்பவர்கள்!

ரசிகர்கள் டிக்கெட்டுக்குக் கொடுக்கும் பணத்தையே தயாரிப்பாளர்களிடமிருந்து ஊதியமாகப் பெற்றுக்கொள்கிறார்கள் நடிகர்கள். இதை நினைவில் வைத்து ரசிகர் மன்றங்களுக்கு சில கதாநாயகர்கள் ஊக்கத்தொகை வழங்குவதுண்டு. சூர்யாவும் கார்த்தியும் இதில் முற்றிலும் வித்தியாசமானவர்கள். ஏற்கெனவே அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்துவரும் இவர்கள், இந்தக் கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுடைய ரசிகர்களில் 500 பேரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள் அண்ணனும் தம்பியும்.

மறுபடியும் ‘மகாமுனி’ கூட்டணி

‘மௌனகுரு’ படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் சாந்தகுமார். அதன்பின், 7 வருட இடைவெளியில் அவர் இயக்கிய படம் ‘மகாமுனி’. அதில், ஆர்யா மாறுபட்ட இரட்டை வேடங்களை ஏற்றிருந்தார். முதலுக்கு மோசம் செய்யாத ‘மகாமுனி’, இதுவரை சர்வதேசப் படவிழாக்களில் வாங்கிக் குவித்த விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சாந்தகுமார். புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கியிருக்கும் அவர், ஆர்யா தயாரித்து, நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

ராஷி கண்ணாவின் முன்னெடுப்பு!

தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, முதியோர் இல்லங்களுக்கு உதவி வருகிறார் ராஷி கண்ணா. வரலட்சுமி சரத்குமாரைப் போல், கரோனா, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் பசியில் இருக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுதவிர, ‘பி தி மிராக்கிள்’ என்கிற முன்னெடுப்பைத் தொடங்கி, அதன் மூலம் பட்டினியால் வாடும் வறியவர்களுக்கு உதவிட வருமாறு சமூக வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்காக #BeTheMiracle என்கிற ஹேஷ்டேகை பதிவிட்டு வேண்டுகோள் வைத்திருக்கிறார் ராஷி கண்ணா.

8 இயக்குநர்கள் இணைந்தால்...

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, மிஷ்கின் உள்ளிட்ட 8 இயக்குநர்கள் ஒன்றினைந்து படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக தற்போது கதைகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். பட நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். ராஷி கண்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x