Published : 28 Dec 2015 11:16 AM
Last Updated : 28 Dec 2015 11:16 AM

புத்தாண்டின் புதுவரவு 4-ஜி

தொலைத் தொடர்பு சேவைகளின் தேவை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. கையிலிருக்கும் ஸ்மார்ட்போனின் திரைகளை மேலும் கீழுமாக நகர்த்தும் நொடிக்குள் இருக்கிறது நமது தொழில்நுட்ப வேகம். தொழில்நுட்ப வளர்ச்சியின் இந்த வேகம்தான் தகவல்களை நமது உள்ளங்கையில் கொண்டு வந்து கொட்டுவதற்காக உலகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது இணைய உலகின் வேகம்தான் அந்த சேவையை கொண்டுவந்து தரும் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக உள்ளது.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது வேகம் நிகழ்கிறது. 1991க்கு முன்னர் இருந்த தொலைத்தொடர்பு சேவைகளை முதல் தலைமுறை தொழில்நுட்பம் (1ஜி) என்று குறிப்பிடலாம். 1991க்கு பிறகுதான் 2ஜி தொழில்நுட்பம் அறிமுகமானது. இதற்கு பிறகுதான் சிக்னல் குறைவான இடத்திலும் தொடர்புகள் கிடைப்பது, குறுஞ்செய்திகள், புகைப்படம் அனுப்புவது மற்றும் தரமாக குரல் வசதிகள் கிடைத்தன.

இதற்கு பிறகு ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட அலைவரிசை முயற்சிகள் நடந்தன. 2.5ஜி, 2.75ஜி என 1999 வரை தொலைத்தொடர்பு அலைவரிசைகளில் முயற்சிகள் இருந்தன. இதற்கடுத்த தொழில்நுட்ப முயற்சியாக 3ஜி தொழில்நுட்ப சேவைகள் 2001ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் முன்பைவிட தரமான குரல் வசதி, பாதுகாப்பு, வீடியோ அழைப்புகள், மொபைல் டிவி போன்ற சேவைகள் கிடைக்கப்பெற்றன.

4ஜி

2011 முதல் நான்காம் தலை முறை தொழில்நுட்பமாக 4ஜி அறிமுக மானது. 3ஜி-யை விட வேகம் அதிகமானது. தற்போது பெரிய நகரங் களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களது அலைவரி சைகளை பயன்படுத்திக் கொள்ள கூட்டு வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 4ஜி- யின் வேகம் அதிக சிக்னல் கிடைக்கும் இடங்களில் (High Mobility) அதிக பட்சம் 100Mbps தரவிறக்கம், - 50Mbps தரவேற்றம் செய்யலாம். குறைவான சிக்னல் உள்ள இடங்களில் (Low Mobility) 1Gbps-ல் டேட்டாவும் பெற முடியும்.

2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax என்கிற தொழில்நுட்பத்துடன் முதன் முதலில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து இதர நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. உலக அளவில் 4ஜி சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடு தென் கொரியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு இந்தியா ஈடு கொடுத்துள்ளதா என்று திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. கம்ப்யூட்டரில் இன்டெல் பென்டியம் காலத்து பயன்பாடுகளையே இன்னும் பலர் தாண்டவில்லை. இன்டெல் கோர், கோர் டூ டுயோ போன்ற அதிவேக பிராசஸர்களைப் பயன்படுத்திவருபவர் களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.

செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான். இதனால்தான் தலைமுறை தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் மக்களுக்கு முறையாக சென்று சேர்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் பல கிராமங்கள் முதல்தலைமுறை தொழில்நுட்ப வாடையே இல்லாமல் இருக்கின்றன என்பதும் உண்மை. தவிர உலகை ஒரு நொடிக்குள் இணைக்கும் இந்த வேகத்தில் நாம் முந்தைய அலை வரிசைகளை பயன்படுத்திய வேகமும் குறைவுதான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

முன்னணியில் ஏர்டெல்

நான்காம் தலைமுறை அலைவரிசை நமக்கு முன்பாகவே பல நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்தியாவில் 2011 ஆண்டில்தான் சேவை தொடங்கப்பட்டது.

ஏர்டெல் நிறுவனம் இதற்கான சோதனை முயற்சிகளில் இறங்கி 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் 4ஜி சவால் என்று இந்தியா முழுக்க சவால் விட்டது. துரு துருவென ஒரு பெண் பல நகரங்களிலும் பிற தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துபவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார். தற்போது இந்த விளம்பரம் தரக்கட்டுப்பாடு அமைப்பால் தடை செய்யப்பட்டு ஓய்ந்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் 4ஜி சேவை வழங்கும் அளவுக்கு அலைவரிசை ஏலம் விடப்படவில்லை என்றும், 3ஜி தொழில்நுட்பத்துக்கும் 4ஜிக்கும் இடையிலான அலைவரிசை சேவையைக் கொண்டே 4ஜி என்கிற பெயரில் சேவை வழங்கப்படுகிறது என்கிற சர்ச்சையும் உள்ளது.

உலக அளவில்...

நம்மைப்போல பல நாடுகளும் படிப்படியாகதான் அலைவரிசை பயன் பாட்டில் முன்னேறியுள்ளன. இப்போதும் பல நாடுகள் 2 ஜி தொழில்நுட்பத் தையே தாண்டவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் வசிப்பவர் களுக்குகூட 4ஜி சேவை இப்போதுதான் எட்டிபார்த்துள்ளது. 3 ஜியைக் கூட சரியான முறையில் அனுபவிக்கவில்லை என்கின்றனர்.

தென்கொரியா

ஆனால் இன்று தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஐந்தாம் தலைமுறை வரிசையை நோக்கி அடுத்த கட்டமாக நகர்ந்து வருகிறது. தென் கொரியா 5 ஜி தொழில் நுட்ப சேவை வழங்க ஆய்வுகளில் இறங்கி உள்ளது.

இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு உலக அளவில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் இதற்கான எஸ்.கே டெலிகொம், கொரியா டெலிகொம் மற்றும் சாம்சங், எல்ஜி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

வேகம்... வேகம்.. வேகம்...

பலரும் 3ஜி சேவைதான் வேகம் என நம்பிக் கொண்டிருந்தபோதுதான் 4ஜி வந்து வாசல் திறந்துவிட்டது. 4ஜி-யை விட பல நூறு மடங்கு வேகம் கொண்டது 5 ஜி தொழில்நுட்பம். அதாவது ஒரு நொடியில் ஒரு முழு திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யும் அளவுக்கு வேகம் இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.

5 ஜி சவால்

இந்த வேகம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப போட்டியை சமா ளிக்க இப்போதே தென் கொரியாவுக்கு போட்டியாக சில நாடுகள் 5 ஜி அலைவரிசையை மேம்படுத்த ஆய்வில் இறங்கியுள்ளன. சீனாவின் ஹுவாய் நிறுவனம் 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளது. இதனால் வரும் நாட்களில் 5 ஜி அறிமுகமாகும் பரபரப்பு உலகைத் தொற்றிக் கொள்ளும். இதற்கான சந்தை வளரத் தொடங்கும்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் முன்பைவிட அதிக முனைப்போடு சந்தையில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது. உலகளவில் தொலைத்தொடர்பு சந்தையிலும் தீவிர போட்டிகள் நிகழ உள்ளன.

2016-ம் ஆண்டில் இந்தியாவை ஆட்டிவைக்கும் தொழில்நுட்பமாக 4ஜி உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் உலக அளவில் 5ஜி என்கிற அடுத்தகட்ட வளர்ச்சியும் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் நம் கண்முன்னே தெரியும் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x