Last Updated : 28 May, 2021 01:17 PM

 

Published : 28 May 2021 01:17 PM
Last Updated : 28 May 2021 01:17 PM

சிட்டுக்குருவிகள் அழியவில்லை; 160 கோடி உள்ளன: சமீபத்திய ஆய்வில் தகவல்

செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்கிற அறிவியல்பூர்வமற்ற கருத்து மிகப் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் கூற்று பொய் என்பதற்கு மற்றொரு அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் பறவையியல் கழகம் பகிர்ந்துகொண்டுள்ள செய்தி:

சிட்டுக்குருவிகள் (House Sparrow - Passer domesticus) என்பது நமது கிராமங்கள், நகர்ப்புறங்கள், வீடுகளுக்கு எளிதில் வரக்கூடிய பறவை. உலகம் முழுவதும் பரவி இருக்கும் இப்பறவையின் மொத்த எண்ணிக்கையை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கணக்கிட்டுள்ளனர்! எவ்வளவு தெரியுமா? 160 கோடி சிட்டுக்குருவிகள்!

உலகில் அதிக எண்ணிக்கையில் உள்ள பறவை இனங்களில் சிட்டுக்குருவிகள் முன்னிலையில் இருக்கின்றன.

(https://www.bbc.co.uk/news/science-environment-57150571)

கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் உள்ள பறவை ஆர்வலர்கள் eBird தளத்தில் பதிவேற்றம் செய்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு பறவை எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது, அழிந்துவருகின்றனவா அல்லது நல்ல நிலையில் உள்ளனவா, எவ்வளவு துரிதமாக அவற்றை நாம் காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற விஷயங்களை eBird போன்ற மக்கள் அறிவியல் சார்ந்த திட்டங்கள் சாத்தியப்படுத்தி உள்ளன.

இன்றைய தேதிக்கு, இந்தியாவில் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை. பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மை. ஆனால் ஒட்டுமொத்தமாக, சிட்டுக்குருவிகள் அழியும் ஆபத்தில் எல்லாம் இல்லை. இது குறித்து மேலும் அறிய கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்: www.stateofindiasbirds.in.

எந்தப் பறவையின் எண்ணிக்கையாவது குறையும் அபாயம் ஏற்பட்டால் பறவையியலாளர்கள் எச்சரிக்கை செய்வார்கள். தற்போதுள்ள நிலையில் கழுகு போன்ற இரைகொல்லிப் பறவைகள், புழு-பூச்சிகளை மட்டுமே உண்ணும் பூச்சியுண்ணிப் பறவைகளே அதிக ஆபத்தில் உள்ளன.

அதேநேரம், பறவைகள் பாதுகாப்புக்கு ஆர்வம் காட்டும்போது சிட்டுக்குருவிகளோடு நின்றுவிடாமல் உண்மையிலேயே எண்ணிக்கை குறைந்துவரும் மற்ற பறவைகளின் மீதும் அக்கறை காட்டுவதுதான் ஒட்டுமொத்தமாகப் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கு உண்மையான அர்த்தத்தை சேர்க்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x