Published : 17 May 2021 10:16 AM
Last Updated : 17 May 2021 10:16 AM

நடுத்தர, சிறு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய சரியான தருணம்

கடந்த மூன்று ஆண்டுகளாகவே சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டுத் திட்டங்கள் பெரும் நெருக்குதலுக்கு உள்ளாகி வந்தன. பங்குச் சந்தையில் பிரதான குறியீடுகள் பெரிய நிறுவன பங்குகளை விடவும் அதிக ஏற்ற இறக்க நிலையை எதிர்கொண்டன. மார்ச் மாதத்தில் பங்குச் சந்தை ஸ்திரமற்ற நிலையில் இருந்தபோதும் அதன் அடிப்படை காரணிகளில் மாற்றம் ஏதும் உண்டாகவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பங்குச் சந்தையில் எந்த முதலீடுமே சரியானதாக இல்லாத சூழல் உருவானது. பல்வேறு முன்னணி பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இருந்தாலும் பரந்துபட்ட பங்குச் சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

தற்போதைய சூழலில், பங்குச் சந்தையானது நிறுவன பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது சமநிலையில் இருப்பது தெரிகிறது.
அதாவது அவற்றின் மதிப்பு குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமானதாகவோ இல்லை. இன்னும் சற்று கூர்ந்து கவனித்தால், அவற்றின் மதிப்பு பேரியல் பொருளாதார காரணிகளான பணவீக்கம், வட்டி விகிதம், பொருளாதார சூழல், கரோனா தடுப்பூசி கிடைப்பது, சர்வதேச மத்திய வங்கிகளின் நிலைப்பாடு ஆகியவற்றை சார்ந்து மாறுவதற்கான வாய்ப்புகளுடன் இருப்பதை காணலாம். மேலும் நடுத்தர மற்றும் சிறு முதலீட்டு நிறுவன பங்குகளின் மதிப்பீடானது கடந்த சில ஆண்டுகளில் தன்னை திருத்திக் கொண்டுள்ளன. எனவே இவற்றின் செயல்பாடு பெரிய நிறுவன பங்குகளைப் போல அல்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

லட்சுமணன் அஷோக்
இயக்குநர், ராம் இன்வெஸ்ட்மென்ட்

இதுபோன்ற சூழலில் குறிப்பாக குறைந்த வட்டி விகிதம் போன்ற சில நுண்காரணிகள் புதிய முதலீடுகளை நோக்கிய அணுகுமுறைக்கு வித்திட்டுள்ளன. பங்குச் சந்தையின் மாறுபடும் போக்கிற்கேற்பவும், சந்தையின் சுழற்சி அடிப்படையிலும் (மேல் நோக்கி, கீழ்நோக்கி மற்றும் பக்கவாட்டில் நகர்தல்) கவனிக்கும் போது ஒரே சீரான முதலீட்டு திட்டம் அதாவது எஸ்ஐபி முதலீடுகளை சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது பலன் அளிப்பதாக இருக்கும்.

சீரான முதலீட்டுத்திட்டம் (எஸ்ஐபி) உங்களது முதலீடுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்குபடுத்துகிறது. சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கமான அதாவது ஸ்திரமற்ற சூழலில் பாதிக்கப்படாத வகையில், சந்தை எதிர்கொள்ளும் நெருக்குதலை சமாளித்து குறிப்பிட்ட காலத்தில் சிறந்த பலனைத் தருவதாக உள்ளன. சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற போக்கை சமாளிக்க நடுத்தர மற்றும் சிறிய முதலீட்டு திட்டங்கள் சரியானவை என்பதையும் அவற்றின் செயல்பாடு உணர்த்துகிறது.

மேலும் இவை முதலீட்டாளர்கள் தொடர்ந்து சீரான முதலீட்டை குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ள சிறந்தவை. இத்தகைய முதலீடானது நீண்ட கால அடிப்படையில் சந்தையில் ஏற்படும் நெருக்குதல்களால் பாதிக்கப்படாத வகையில், முதலீட்டு காலம் வரையில் பாதிக்கப்படாமலிருக்கும். குறிப்பிட்ட கால வரையிலான முதலீட்டுத்திட்டங்கள், அதிக லாபம் தரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு வழி செய்வதோடு வளர்ச்சிக்கான பாதையையும் வகுக்கிறது. இதனால் குறித்த காலகட்டத்தில் மிகச் சிறந்த வருமானம் கிடைக்க வழியேற்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x