Published : 11 May 2021 10:58 AM
Last Updated : 11 May 2021 10:58 AM

வழிகாட்டி: ஐ.ஐ.டி.யின் இலவசப் பயிற்சி

பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இலவச ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கும் பயிற்சியைத் தொடங்கவிருக்கிறது. மத்திய அரசின் ‘ஸ்வயம்' திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. எட்டு வாரங்கள் கொண்ட இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர swayam.gov.in. அல்லது iitb.ac.in இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எம். கண்ணன் இந்தப் பயிற்சி வகுப்பை எடுக்கவுள்ளார். இந்தப் பயிற்சிக்குத் தேவையான மென்பொருள், வன்பொருள் ஆகியவை பற்றிய குறிப்புகளுக்குத் தகுந்தவாறு மாணவர்கள் முன்கூட்டித் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலகப் பட்டியலில் மூன்று தமிழகப் பல்கலைக்கழகங்கள்

க்யூ.எஸ். உலகப் பல்கலைக்கழகப் பட்டியலில் 29 இந்தியக் கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தேசிய அளவில் முதல் இடத்தையும் உலக அளவில் 172வது இடத்தையும் பிடித்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தையும் டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மூன்றாம் இடத்தையும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நான்காம் இடத்தையும் (உலக அளவில் 275-ம் இடம்) பிடித்துள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகமும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட் போர்டுகள்

தமிழக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் பொருட்டு ஸ்மார்ட் போர்டு (மின்னணுப் பலகை) நிறுவுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 80 ஆயிரம் போர்டுகள் நிறுவத் திட்டமிடப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் போர்டு நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. வெள்ளக்கோவில் தீத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 63 அங்குல அளவுள்ள ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x