Last Updated : 01 Dec, 2015 12:22 PM

 

Published : 01 Dec 2015 12:22 PM
Last Updated : 01 Dec 2015 12:22 PM

தடம் பதித்த நூல்கள்: உலக சரிதம்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இருந்தபோது தன் மகள் இந்திராவுக்குப் பல கடிதங்கள் எழுதினார். அப்போது இந்திராவுக்குப் பத்து வயது. அந்தக் கடிதங்களை விரிவுபடுத்தி எழுதப்பட்டதுதான் இந்த நூல். எந்தக் குறிப்பும் இல்லாது, நினைவிலிருந்து இந்த நூலை வடித்துள்ளார் நேரு. Glimpses of World History என்ற அந்த ஆங்கில நூல், நேருவின் அமைச்சர்களில் ஒருவரான ஓ.வி. அளகேசனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1947- ல் முதல் பதிப்பும் 1958-ல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தன.

2013-ல் அதே நூலை பல்கலைப் பதிப்பகம் இரு தொகுதிகளாய் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை மொழிபெயர்த்தபோது ஓ.வி. அளகேசனும் சிறையில் இருந்துள்ளார். இவ்வளவு அருமையான இந்த நூல் இவர்கள் இருவரையும் சிறையில் வைத்த ஆங்கியேலயர்களின் உதவியில்லாமல் வெளிவந்திருக்காது.

மனித வரலாறு முழுக்க புரட்சிகளும் மாறுதல்களும் தொடர்ந்து வந்துள்ளன என்பதை நேரு நூலின் தொடக்கத்திலேயே பதிவு செய்துவிடுகிறார். மனிதனின் அறியப்பட்ட 7000 ஆண்டுகள் வரலாற்றை நேரு சுவையுடன் பரிமாறுகிறார். வெறுமனே வரலாற்று நிகழ்வுகளை அடுக்காமல், விமர்சனப் பார்வையை அவற்றுள் செலுத்தி, ஒரு தத்துவ விசாரணையையே நேரு நடத்துகிறார்.

ஆசிய, ஐரோப்பிய வரலாறுகளின் ஒற்றுமையையும் வேற்றுமையையும் முதலில் விவரிக்கத் தொடங்கி, மனித நாகரிகம் எப்படிப் படிப்படியாக வளர்ந்துள்ளது என்பதைப் படம் பிடிக்கிறார். திராவிட, ஆரிய மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய மக்கள் கடைபிடித்த நாகரிகங்களின் கலப்புதான் இந்திய நாகரிகம் என்கிறார். ஆரியர்களுடன் வந்த வர்ணப் பாகுபாடு அவர்களால் பாதுக்காக்கப்பட்டது ஏன் என்பதையும் நேரு விளக்குகிறார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு மதங்களும் அறிவியலும் எதிரும், புதிருமாக தோன்றி, எவ்வாறு மோதிக்கொண்டன? கிறிஸ்தவ மதம் நிலப்பிரபுத்துவ உறவுகளுடனும், பண்ணை அடிமைத்தனத்துடனும் எப்படிச் சமரசம் செய்துகொண்டது என்பதையெல்லாம் விளக்குகிறார் நேரு.

நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு எதிராக கிறிஸ்துவ மதத்துக்குள்ளேயே ஓயாத சண்டைகள் நடந்தன. இறுதியாக, போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் பிரிந்து போனார்கள். அவர்கள் பிராட்டஸ்டண்டுகள் எனப்பட்டனர். கி.பி. 622-ல் உதித்த இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்துக்கும் இடையே சிலுவை யுத்தம் 150 ஆண்டுகள் நடைபெற்றது. அதைவிடக் கொடுமையானது இங்கிலாந்துக்கும், அயர்லாந்துக்கும் இடையே 600 ஆண்டுகள் நடந்த போர். கிறிஸ்தவத்துக்கு எதிராக இஸ்லாம் எல்லோரையும் சமமாக பாவித்தபோதும் பெண்களை மட்டும் கீழ்நிலையில் வைத்திருந்தது.

இந்தியாவின் தத்துவஞானிகளில் முக்கியமானவரான ஆதிசங்கரரின் காலமான எட்டாம் நூற்றாண்டிலும்கூடப் பண்டைய இந்திய தத்துவ ஞானியான சார்வாகன் என்பவரின் நாத்திகக் கொள்கைகள் மக்களிடம் பரவியிருந்தன.

ஐரோப்பாவில் ஆலைத் தொழில்கள் தொடங்கியவுடன், பெருநகரங்களும் முதலாளித்துவமும் உருவாயின. முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டது. ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சிக்கு முன்பாக, ஆசிய நாடுகளே உலக உற்பத்தியில் முன்னணியில் இருந்துள்ளன. ரயில் இன்ஜின், நீராவிக் கப்பல் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உற்பத்தியில் ஐரோப்பியர்களை முன்னிலைப்படுத்தின என்றும் தனது புத்தகத்தில் விவாதிக்கிறார் நேரு.

தென்னிந்திய வரலாற்றையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். காகிதம், அச்சு எந்திரங்களின் கண்டுபிடிப்பு சமூக மறுமலர்ச்சிக்கும் புரட்சிக் கருத்துக்களின் உதயத்துக்கும் வழிவகுத்தன. பிரெஞ்சுப் புரட்சி, ருஷ்யப் புரட்சி, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிய முதல் சுதந்திரப் போர், உலகையே புரட்டிப்போட்ட கம்யூனிசத் தத்துவம் மற்றும் டார்வினின் பரிணாமக் கொள்கை போன்ற புரட்சிக் கருத்துக்களும் நிகழ்வுகளும் அதன் பின்தான் வளரத் தொடங்கின என விவாதிக்கும் இந்த நூல் 1905-ல் ஜார் மன்னனுக்கு எதிரான ருஷ்யப் புரட்சி தோல்வியடைவதை விளக்குவது வரை முதல் தொகுதி முடிவடைகிறது.

இரண்டாவது தொகுதியில், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதற்கெதிராக கம்யூனிச சிந்தாந்தத்தின் தோற்றம், அமெரிக்க ஆதிக்கத்தின் வளர்ச்சி, 1914-19-ல் நடந்த முதல் உலகப்போர், அதைத்தொடர்ந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள், 1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, இந்திய விடுதலை இயக்கத்தின் எழுச்சி, ஜெர்மனியில் நாஜிகளின் வெற்றி, முதலாளித்துவத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது. 1938 நவம்பர் 14-ல் நேரு எழுதிய பிற்சேர்க்கையுடன் இரண்டாம் தொகுதி முடிவடைகிறது.

நேருவின் விருப்பத்துக்குரிய தேர்வு பழமையா, நவீனமா எனும் குழப்பம் இந்த நூலைப் படிக்கும்போது ஆங்காங்கே நமக்குள்ளே தலைகாட்டும். நேருவின் மேதைமை நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது. இந்த நூலைப் படிப்பதன் மூலம் இளைஞர்கள் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் பெறுவார்கள். நம்மை நாமே சரியாகப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

வெளியீடு:
பல்கலைப் பதிப்பகம், 97/55,
என்.எஸ்.கிருஷ்ணன் சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024,
தொடர்புக்கு: 9444431344,
இரு தொகுதிகளும் சேர்ந்து: ரூ.750.

தொடர்புக்கு: veeveekalai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x