Last Updated : 07 Dec, 2015 11:50 AM

 

Published : 07 Dec 2015 11:50 AM
Last Updated : 07 Dec 2015 11:50 AM

மோடியின் முன்னுரிமைக் கடமை

“வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற இந்தியாவில் தயாரிப்போம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்” என்று தொடர்ந்து கூறிவரும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய முன்னுரிமைக் கடமை இதுதான் என்று முடிவெடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் சிறிய தொழில் முனைவோரின் கண்ணோட்டத்தில் உலகை அவர் காண வேண்டும். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருடைய தோள்களின் மீது ஏறியிருக்கிறது.

எல்லா நாட்டிலுமே கட்டுமானத் துறைதான் உடனடியாக நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியது. அப்படிப்பட்ட துறையைச் சேர்ந்த ஒரு கட்டுனர் மஹாராஷ்டிர மாநிலத்தின் தாணே நகரில் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அதிகாரிகள் தொடர்ந்து தன்னிடம் லஞ்சம் கேட்டு நச்சரிப்பதாகவும் அவர்களுடைய நச்சரிப்பு தாங்காமலேயே தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தார். “கட்டுமானத் தொழில்துறையில் மந்தம் நிலவுகிறது. இதைக்கூட என்னால் சமாளித்துவிட முடியும் அதிகாரிகளின் லஞ்சப் பசிக்கு என்னால் தீனிபோட முடிய வில்லையே!” என்று மனம் உருகி யிருக்கிறார் அந்தக் கட்டுனர்.

இந்தியாவின் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவை நிர்வாக ரீதியிலானவை (அதிகார வர்க்கங் களால் ஏற்படுத்தப்படுவது), மேலாண்மை தொடர்பானவையே தவிர வேறு அல்ல; எல்லாவற்றுக்கும் அரசியல்தான் மூல காரணம் என்று குற்றஞ்சாட்டினாலும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பூதா காரமானவை அல்ல. எனவே லஞ்சம், ஊழல் போன்ற கசிவுகளை அடைக்கும் கசப்பான பொறுப்பை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். அரசின் மானியங்கள் இடைத்தரகர்கள் வழியாக அல்லாமல் நேரடியாகக் கிடைக்கும் வகையில் ‘ஜாம்’ (ஜன் தன் யோஜனா-ஆதார்-மொபைல் பேங்கிங்) போன்ற வழிமுறைகளை அதிகப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது; இத்தகைய முதலீடுகளுக்கு அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடா முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி, விற்பனை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வர்த்தக நீதிமன்றங்களை நிறுவ அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதும் வர வேற்கப்பட வேண்டியதே.

திவாலாகிவிட்டதாக ஒரு தொழில் முனைவர் அறிவிப்பதற்கான நடை முறைகளை எளிமைப்படுத்தி யிருப்பதும், அவருடைய நிறுவ னத்தை மற்றொருவர் ஏற்று உற்பத்தியும் வேலைவாய்ப்பும் குறையாமல் தொடரவும் சட்டங்களில் மாறுதல் செய்யும் முயற்சிகளும் பாராட்டுக்குரியவையே.

நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கு சட்டம் இயற்றுவது அவசியம். அதே வேளையில் ஆண்டுக்கணக்காக நடைமுறையில் இருந்த ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா’ நடைமுறைகளைக் களைவது சாமானி யமான வேலையல்ல, என்பதால் அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.

இவற்றையெல்லாம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய வலு இல்லை, எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க மறுக்கின்றன. இதற்காக மோடி அரசு மனம் தளர்ந்துவிடக்கூடாது. 2003 முதல் 2012 வரையில் நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமான அளவில் பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டினோம். அப்போது ‘பொது சரக்கு, சேவை வரி’ (ஜி.எஸ்.டி.), நிலம் கையகப்படுத்தல் சட்டம், தொழிலாளர் சட்ட சீர்திருத் தங்கள் போன்றவை இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

எதிர்க்கட்சிகளால் முட்டுக் கட்டை போடப்படும் இவை இல்லா மலேயேதான் நம்மால் சாதிக்க முடிந்தது. இப்போது பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகமாகவும் பணவீக்க விகிதம் குறைவாகவும் இருக்கிறது. அந்நிய முதலீடும் அரசின் வருவாயும் அதிகரித்து வருகின்றன. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் (இறக்குமதி, ஏற்றுமதிக்கு இடை யிலான இடைவெளி), நிதி வருவாய் பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. வட்டி வீதம் குறைந்துள்ளது, ரூபாயின் மதிப்பு நிலையாக இருக் கிறது. இவையெல்லாம் தற்செயலா கவோ, விபத்தைப் போலவோ நடந்து விடவில்லை.

தகவல் தொலை தொடர்புத் துறையில் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், ரயில் என்ஜின் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான ஜி.இ. மற்றும் அல்ஸ்தாம் போன்றவையும் முதலீடு செய்துள்ளன. பேமெண்ட் வங்கிகள் விரைவில் முழு வீச்சில் செயல்படப் போகின்றன. தகவல் தொலை தொடர்பு நிறுவ னங்கள் அலைக்கற்றையைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள முடிவெடுத் துள்ளன. ராணுவத்துக்குத் தேவைப் படும் ஆயுதங்கள், தளவாடங் கள், வாகனங்கள், கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற வை தொழில் வளர்ச்சியில் இப்போது முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விட்டன. பிஹார் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் கூட ‘வளர்ச்சி’ என்ற அம்சத்துக்கு முக்கியத்துவம் தந்துதான் நடந்தது. நிதீஷ்குமார் மாநிலத்தின் பெரும்பாலான கிராமங் களுக்கு மின்சார இணைப்பை அளித்து சாதித்திருந்ததால் வெற்றி பெற்றார்.

நிர்வாகத்தைச் சீராக நடத்து வதற்கு அடைக்க வேண்டிய ‘ஓட்டைக் குழாய்கள்’ நிறைய இருக் கின்றன. நாடாளுமன்றத்தின் உதவி யில்லாமலேயே இதைச் செய்ய முடியும். நம் நாட்டின் அரசு ஆரம்பப் பள்ளிகளில் 25% ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை; அப்படியே பள்ளிக்குச் செல்வோரில் பாதிப்பேர் பாடம் நடத்துவதே இல்லை. அரசு மருத்துவமனை செவிலியரில் மூன்றில் ஒரு பங்கினர் வேலைக்குச் செல்வதில்லை. ஐந்தில் இரண்டு மடங்கு மருத்துவர்கள் தங்களுக்குரிய ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வேலைக்குச் செல்வதில்லை. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பாதி மருந்துகள் களவாடப்படுகின்றன. இந்திய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலங் களுக்குரிய பட்டாக்களை வருவாய்த் துறை அதிகாரிக்கு கையூட்டு தராமல் பெற்றுவிட முடியாது. அதற்கு முன்னால் அவரை அங்கும் இங்கும் அலைக்கழித்து அவமானப்படுத் தாமல் விடமாட்டார்கள்.

நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அவர் களில் சிலர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்முறை வழக்குகள் கூட பதிவாகியுள்ளன. மாநிலத்துக்கு மாநிலம் இவை வேறுபடலாம், ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டவையெல்லாம் தேசிய சராசரிகள். இவற்றில் பெரும் பாலான பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஆனால் இதில் மாநிலங்கள் தீவிரமாகச் செயல்பட மத்திய அரசு உந்து சக்தியாகத் திகழ முடியும். கல்விக்காகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம், வேலைக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தண்டனை அளிப்பதாக இருக்க வேண்டும்.

மற்றொரு முக்கியமான ஓட்டை மின்சாரத் துறையில் காணப்படுகிறது. மக்களிடையே கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக உற்பத்திச் செலவுக்குப் பொருந்தாத வகையில் மின் கட்டணம் குறைத்து வசூலிக் கப்படுகிறது அல்லது இலவசமாகத் தரப்படுகிறது. இலவசம் என்ற பெயரில் பெருமளவு மின்சாரம் திருடப்பட அனுமதிக்கப்படுகிறது.

இதனால் மாநில மின்சார வாரி யங்கள் கடுமையான இழப்புக் கும் நிதி நெருக்கடிக்கும் உள்ளாகி யிருக்கின்றன. மின்சார வாரியங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல், லஞ்சம், விரயம், திறமைக்குறைவு, அக்கறையின்மை ஆகியவற்றால் அவை திவாலாகும் நிலை காணப் படுகிறது. மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்காக அறிவிக்கப்படும் இலவச மின்சாரங்களும் குறைந்த கட்டணங்களும்கூட மின்சார உற்பத்தி, விநியோகத்தைக் கடுமையாக பாதிக் கின்றன. இதையும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் மாற்றலாம். நன்கு நிர்வகிக்கப்படும் மின்சார வாரியங்களுக்கு ஊக்குவிப்புகளை யும் மோசமாக நிர்வகிக்கப்படும் வாரியங்களுக்கு நிதிக்குறைப்பு, மானிய வெட்டு, அபராதம் போன்ற வற்றை அறிவித்தும் சரிப்படுத்தலாம்.

தன்னுடைய மக்களை நம்பி இந்திய அரசு எடுக்கும் நடவடிக் கைகள் வெற்றியைத் தருகின்றன; தன்னுடைய அரசு நிர்வாக அமைப்பை நம்பி எடுக்கும் நடவடிக்கைகள் குறைந்த அளவே பலன்களைத் தருகின்றன. எனவே பொருளாதாரச் சீர்திருத்தங்களைவிட ஊழல், லஞ்சம், திறமைக்குறைவு, அலட்சியம் போன்ற தவறுகளைக் களைவது அதிக பலன்களைக் கொடுக்கும். அதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அதனால் ஊக்கம் பெற்று சிறு முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். இதுதான் மோடிக்கும் அரசுக்கும் முன்னுரிமை லட்சியமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவை நிர்வாக ரீதியிலானவை மேலாண்மை தொடர்பானவையே தவிர வேறு அல்ல; எல்லாவற்றுக்கும் அரசியல்தான் மூல காரணம் என்று குற்றஞ்சாட்டினாலும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பூதா காரமானவை அல்ல.

குர்சரண் தாஸ், gurcharandas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x