Last Updated : 16 Dec, 2015 12:31 PM

 

Published : 16 Dec 2015 12:31 PM
Last Updated : 16 Dec 2015 12:31 PM

வாண்டு பாண்டு: மழையை ஷூட் பண்ணிடுவோமா?

பாண்டு: ஹலோ வாண்டு, எங்க வேகமா போய்ட்டு இருக்க?

வாண்டு: ஸ்கூலுக்குக் கொஞ்சம் முன்னாடியே இன்னைக்கு வரச்சொன்னாங்க. அதான் வேகமா போய்ட்டு இருக்கேன்.

பாண்டு: ஏன்...? ஏதாவது ஸ்பெஷல் கிளாஸா?

வாண்டு: இல்லை பாண்டு. இன்னைக்கு ஸ்கூலுக்கு டாக்டர்ங்க வராங்க. மழை, வெள்ளம் வந்துச்சுல்ல. அதனால எல்லோருக்கும் மெடிக்கல் செக்கப் பண்றாங்க. ஏன்... உங்க ஸ்கூலுக்கு யாரும் வரலையா?

பாண்டு: வந்தாங்க... வந்தாங்க. டாக்டர்ங்க மட்டுமில்ல. ஒரு விஞ்ஞானியும் வந்தாரு.

வாண்டு: விஞ்ஞானியா...? யாரு பாண்டு?

பாண்டு: வெளிநாட்டுல வானிலை மையத்துல வேலை பார்த்தவராம். மழையைப் பத்தி நிறைய சொன்னாரு.

வாண்டு: ஓ... மழையைப் பத்தி சொன்னாரா? ஏதும் புதுசா சொன்னாரா?

பாண்டு: ஆமா ஆமா, அதை உன்னைப் பாக்குறப்ப சொல்லலாம்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

வாண்டு: அதான், இப்போ என்னைப் பார்த்திட்டியே... சொல்லேன்.

பாண்டு: சொல்றேன் சொல்றேன். மழைன்னாலே நமக்கு இப்போ பயம் வர அளவுக்கு ஆயிடுச்சுல்ல. ஆனா, மழை பெய்யாம இருக்குறதுக்கான ஆய்வுகளைப் பல நாடுகளும் செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு அந்த விஞ்ஞானி சொன்னாரு.

வாண்டு: என்னது, மழை பெய்யாம இருக்குறதுக்கான ஆய்வா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே. எந்த நாட்டுல இப்படி ஆய்வு செஞ்சிருக்காங்க?

பாண்டு: சொல்றேன் வாண்டு. அமெரிக்கா, சீனா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜார்ஜியான்னு சில நாடுகள் இதுமாதிரியான ஆய்வுகளை செஞ்சிருக்காங்களாம். சில இடங்கள்ல அதை பரிசோதிச்சும் பார்த்திருக்காங்களாம்.

வாண்டு: கேக்கவே ரொம்ப ஆர்வமா இருக்கே. எப்படி மழையைத் தடுப்பாங்களாம்?

சுவிட்சர்லாந்தில் கலைக்கப்பட்ட மேகம்

பாண்டு: சுவிட்சர்லாந்துல இது பத்தி ஒரு ஆய்வு நடத்தியிருக்காங்க. மேகக்கூட்டம் திரண்டு வர்றப்ப பீரங்கி மூலமா லேசரால சுடணுமாம். அப்படி சுட்டு மேகக்கூட்டத்தை கலைக்க முடியுமாம். அது மட்டுமில்ல, மேகக்கூட்டத்தை உருவாக்கி கடலிலோ, வீடுகள் இல்லாத பகுதியிலோ மழையை பெய்ய வைக்கிற முயற்சியிலும் தீவிரமா இருக்காங்களாம். அப்புறம், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடியைக்கூட வீடு, கட்டிடம் மீது விழாமல் வைக்கவும் விஞ்ஞானிகள் முயற்சி செய்யுறாங்களாம்.

வாண்டு: ஓ... எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு பாண்டு.

பாண்டு: இதைக் கேக்குறப்ப எனக்கும் பிரமிப்பா இருந்துச்சு. 2008-ம் வருஷத்துல சீனத் தலைநகர் பெய்ஜிங்குல ஒலிம்பிக் நடந்துச்சு இல்லையா? அப்போ தொடக்க விழா மழையால பாதிக்காம இருக்க, ரசாயனங்களைப் பயன்படுத்தி வானத்துல சுட்டு மேகக்கூட்டத்தை கலைச்சாங்கன்னும் அந்த விஞ்ஞானி சொன்னாரு.

வாண்டு: இந்தத் தொழில்நுட்பத்தை நமக்கும் அவுங்க சொல்லியிருந்தா கடலூர், சென்னைல அதிகமா பெய்ஞ்ச மழையைத் தடுத்திருக்கலாம் இல்லையா பாண்டு.

பாண்டு: இதே கேள்வியை நானும் அந்த விஞ்ஞானிக்கிட்ட கேட்டேனே. ஆனா, எல்லாமே ஆய்வு நிலையிலதான் இருக்காம். விஞ்ஞானத்தால ஒரு நாள் நிச்சயமா மழையை பெய்ய வைக்கவும், கட்டுப்படுத்தவும், வேற இடத்துக்கு திருப்பி விடும் நிலை வரும்ணு சொன்னாரு. அதே நேரத்துல இயற்கையோட போக்குல தலையிட்டால் பேரழிவு ஏற்படும்னு அவரு சொன்னாரு.

வாண்டு: உண்மைதான். நமக்கு மழையும் வேணுமே. மழை இல்லைன்னா பூமியில யாரும் வாழ முடியாதே... ஆனா, எதிர்காலத்துல எது வேணாலும் நடக்கலாம். அது யாருக்குத் தெரியும்?

பாண்டு: ம்... சரியா சொன்ன. அப்புறம், மழை, வெள்ளத்துனால கொஞ்ச நாளா நம்ம குட்டிப் பிரெண்ட்ஸ் பத்தின செய்திகளை நாம பேசவே இல்லை. ஏதாவது செய்தி இருக்கா வாண்டு?

வாண்டு: இருக்கே. விசாகப்பட்டினத்துல 3-ம் வகுப்பு படிக்குற கார்த்திக்கும், 4-ம் வகுப்பு படிக்குற அவனோட அக்கா ரம்யாவும் கூகுள் நிறுவனம் நடத்திய ஒரு போட்டியில ஜெயிச்சுருக்காங்களாம்.

பாண்டு: அது என்ன போட்டி? இவுங்க என்ன பண்ணாங்க?

வாண்டு: இன்டர்நெட்டுல கூகுள்ள நிறைய விஷயங்களைத் தேடுவோம் இல்லையா? அப்படி தேட கூகுள் பக்கத்துல G O O G L E -ன்னு ஒரு தேடுபொறியைப் பார்த்திருக்கேல்ல. அந்த வார்த்தை விதவிதமான வடிவங்கள்ல வருமே. அப்படி விதவிதமா கூகுள் வார்த்தையை எழுதி, வரைஞ்சு அனுப்ப ஒரு போட்டி வைச்சாங்க. ‘கூகுள் டூடுள் போட்டி-2015’ ன்னு அதுக்குப் பேரு. அதுல சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு விஷயத்தை அழகா வரைஞ்சு கார்த்திக் அனுப்பியிருக்கான். அந்த கூகுள் டூடுளை இந்திய அளவுல தேர்வு செஞ்சிருக்காங்க.

பாண்டு: அடடே... ரொம்பப் பெருமைப்படற விஷயமா இருக்கே.

வாண்டு: ஆமா, அதுல கார்த்திக் சுற்றுச்சூழலை மையப்படுத்தி வரைஞ்ச டூடுள் உடனே தேடுபொறியில வந்துடுச்சு. ரம்யாவோட டூடுளையும் தேர்வு செஞ்சிருக்காங்களாம். இந்தக் குட்டிப் பசங்களோட அப்பா கார் டிரைவர்தானாம். வீட்டுல கம்ப்யூட்டர்கூட இல்லையாம்.

பாண்டு: ஆர்வம் இருந்தா போதாதா வாண்டு? அந்த ஆர்வம்தான் அவுங்கள ஜெயிக்க வைச்சுருக்கு. அந்தக் குட்டி பிரெண்ட்ஸ்களுக்கு நாமளும் வாழ்த்து சொல்லிடுவோம்.

வாண்டு: நிச்சயமா, பேசிக்கிட்டு வந்ததுல ஸ்கூலுக்கு வந்ததே தெரியலை. அப்போ, நான் வரேன். டாட்டா...

பாண்டு: ஒகே. பை...பை..

கார்த்திக் - ரம்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x