Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

திருப்புடைமருதூர்: திருப்புமுனை தரும் ஈசன்

ர. சாய்கார்த்திக்

‘அர்ச்சுனம்’ என்றால் மருதமரம். மருதமரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் ‘அர்ச்சுனத் தலங்கள்’ எனப் போற்றப்படுகின்றன. ‘தலையார்ச் சுனம்’ எனப்படுவது சைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ‘இடையார்ச்சுனம்’ என்றும் ‘மத்தியார்ச்சுனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘கடையார்ச்சுனம்’ எனப் போற்றப் படும் திருப்புடைமருதூரில் 1200 வரு டங்கள் பழமையான திருக்கோவிலில் அருள்மிகு கோமதி அம்பாளுடன் ஸ்ரீநாறும்பூநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். திருநெல்வேலி – பாபநாசம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் இருக்கும் வீரவநல்லூரிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் திருப்புடைமருதூர் அமைந்திருக்கிறது.

மரத்துக்குள் மறைந்த மான்

மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, அவர் எய்த அம்பு பட்டு மான் ஒன்று மருத மரத்துக்குள் சென்று மறைந்தது. மன்னர் எட்டிப் பார்க்க மான் லிங்கமாக மாறி இத்திருத்தலத்தின் இறைவன் நாறும்பூ நாதசுவாமியாக மன்ன ருக்குக் காட்சியளித்தது.

செவிசாய்த்துக் கேட்கும் பெருமான்

கருவூர் சித்தர் சிவனைத் தரிசிக்க இங்கே வந்திருந்தபோது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியாமல் இருந்த இடத்திலிருந்தே மனமுருகி வழிபட்டார். பின்னர் சிவனை மனத்தில் நினைத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அவரது பாடலை ரசிக்க விரும்பிய சிவன் தனது இடது காதில் கைவைத்து ஒருபுறம் சாய்வாகத் திரும்பினார். பின்னர் சித்தரிடம் “என்னை மனத்தில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார்.

கருவூராரும் அப்படியே செய்து ஆற்றைக் கடந்து சிவனைத் தரிசித்துவிட்டு அவரிடம் பக்தர்கள் நலன் கருதி ஒரு கோரிக்கையையும் வைத்தார். அதாவது எக்காலத்திலும் இங்கே தரிசிக்க வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளைச் செவிசாய்த்துக் கேட்டு அவற்றை நிறைவேற்றித் தரும்படி வேண்டினார். சுவாமியும் அவர் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே நடக்கும் என்று அருள்புரிந்தார்.

சுயம்பு அம்பிகை

மிகச் சிறந்த வரப்பிரசாதியும் பெருங்கருணை நாயகியுமான இத்திருத்தலத்து இறைவி கோமதி அம்பாள் உச்சி முதல் பாதம்வரை உலகில் எங்கும் காணா வண்ணமாக ருத்ராட்சத் திருமேனியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாரகா சக்திபீடமாக உள்ள இத்திருத்தலத்தின் அம்பிகை அருளே வடிவானவள். வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு.

சுரேந்திர மோட்ச தீர்த்தம்

திருப்புடைமருதூர் ஆற்றங்கரை தீர்த்த கட்டத்துக்கு ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும் இந்திராணியும் தவம் செய்து, தோஷம் நீங்க இந்தத் தீர்த்த கட்டத்தில் நீராடியதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

திருப்புடைமருதூர் கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் சுவரோவி யங்கள் உள்ளன.

அரிதினும் அரிது

சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு சிவாலயத்தில் சுயம்புத் திருமேனியாக அமைவது அரிதிலும் அரிது. மேலும், காசியில் கங்கை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதைப் போன்று இங்கே தாமிரபரணியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்கிறது. எனவே, இவ்வூர் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் ஸ்ரீகஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா சார்பில் ஏப்ரல் 24 அன்று இவ்வருடத்தின் முதல் மகாபிரதோஷ வழிபாட்டோடு ராஜகோபுரத் திருப்பணி நடைபெறு வதற்கு வேண்டுதல் விழா நடத்தவுள்ளனர். அன்று திருக்கோயில் முழுவதும் 10,008 தீபங்கள் ஏற்றப்படு கின்றன. மாலை 4:30 மணிக்கு மகாபிரதோஷ பூஜை தொடங்கும்.

வீரவநல்லூர் முக்கூடல் பேருந்து நிலையங்களிலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு மதியம் 2 மணி முதல் கட்டணமில்லா வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x