Last Updated : 03 Nov, 2015 12:11 PM

 

Published : 03 Nov 2015 12:11 PM
Last Updated : 03 Nov 2015 12:11 PM

சேதி தெரியுமா? - நடுங்கியது பூமி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அக்டோபர் 26-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 375 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்துகுஷ் மலையில் பாஷியாநாத்தை மையமாகக் கொண்டிருந்தது இந்த நில நடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீர், பஞ்சா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடுமையாக உணரப்பட்டது. மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

பிடிபட்ட நிழல் உலக தாதா

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா சோட்டாராஜன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அக்டோபர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பைக் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கும், அவரது நெருங்கிய கூட்டாளியான சோட்டா ராஜன் வெளிநாட்டுக்கும் தப்பிவிட்டனர். ஆஸ்திரேலியாவில் தலைமறைவான சோட்டாராஜனைப் பிடிக்க இன்டர்போல் சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியது.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு அவர் தப்பினார். இதை மோப்பம் பிடித்த இந்திய உளவுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இன்டர்போல் போலீஸ் பாலி தீவில் அவரை கைதுசெய்தது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன் அண்மையில் தூக்கிலிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவுக்கு முன்னேற்றம்

உலகில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தைப் பிடித்திருப்பதாக உலக வங்கி அக்டோபர் 28-ம் தேதி அறிவித்தது. ‘தொழில் தொடங்க உகந்த நாடு’ என்ற தலைப்பில் உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியா 12 இடங்கள் முன்னேறி 130-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொழில் தொடங்கச் சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்றும், 12 நடைமுறைகளைச் செய்து முடித்து 29 நாட்களில் இந்தியாவில் தொழில் தொடங்கிவிடலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே ஆய்வில் இந்தியா 142-வது இடம் பிடித்தது.

பட்டாசு வெடிக்கத் தடை கிடையாது

தீபாவளி பண்டிகையையொட்டிப் பட்டாசு வெடிக்க முழுமையாகத் தடை விதிக்க முடியாது என்று அக்டோபர் 28 அன்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதாக உச்ச நீதிமன்றத்தில் மூன்று குழந்தைகளின் சார்பில் அவர்களது பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, சாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது எனக் கருத்து தெரிவித்தது. அதேநேரத்தில், கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுப்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கத் தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென் ஆப்பிரிக்கா சாதனை

இந்தியாவில் முதன்முறையாக ஒரு நாள் தொடரைக் கைப்பற்றித் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி அக்டோபர் 25 அன்று மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 214 ரன் வித்தியாசத்தில் இந்தியாவைத் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. இதன்மூலம் தொடரை 2 -3 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றது. 1988-ம் ஆண்டு முதன்முறையாகத் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இதுவரை 4 ஒரு நாள் தொடரில் அந்த அணி இந்தியாவுடன் விளையாடியுள்ளது. இப்போதுதான் முதன்முறையாக அந்த அணி தொடரை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x