Published : 06 Nov 2015 12:48 PM
Last Updated : 06 Nov 2015 12:48 PM

உறவுகள்: கையில் எரியும் தணல்!

வணக்கம் அம்மா. என் வயது 22. நான் கல்லூரி இறுதி ஆண்டில் என் அத்தை மகனைக் காதல் திருமணம் செய்து கொண்டேன். அவர் வயது 28. என் பெற்றோர் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்னிடம் மட்டுமே என் பெற்றோர் பேசுவார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நான் மீண்டும் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். நான் திருமணமானவள் என்று தெரிந்ததால், என் வகுப்பு மாணவர்கள் பலரும் என்னை ஏதோ பெரிய 'சீனியர்' போல நடத்துகிறார்கள். யாரும் என்னுடன் இயல்பாகப் பேசுவதில்லை. நானாக சென்று ஏதேனும் உதவிகள் செய்தால் அதையும் அவர்கள் தவிர்க்கிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் முடியப் போகிறது. எங்கள் திருமணத்தால் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கல் இன்னும் முடியவில்லை. என்னால் குடும்பங்கள் பிரிந்துவிட்ட வேதனையும் ஒரு பக்கம். இதுவரை ஒரு முறை மட்டுமே என் வீட்டிற்கு நான் மட்டும் சென்றுள்ளேன்.

மன அழுத்தம் அதிகமாகி விட்டது. இந்நிலையில் என் கணவர் மீது அடிக்கடி கோபம் கொண்டு சண்டையிடுகிறேன். கோபத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. முன்பெல்லாம் கோபம் என்பதே எனக்குப் பிடிக்காது. இப்போது அப்படியே மாறி விட்டேன்.

படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல், இல்லற வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இல்லாமல் மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, கோபம், தனிமை என அனைத்தும் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்குவது போல் தோன்றுகிறது. என் கணவரும் சில சமயங்களில் என்னைப் புரிந்துகொள்வதில்லை. மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளவும், ஆலோசனை கூறவும் யாரும் இல்லை. என்ன செய்வதென்று வழி கூறுங்கள்.

அவர்கள் பகைக்குப் பெற்றோர் உங்களை பலி கொடுத்திருப்பது வருத்தம் தான். தான் ஆடா விட்டாலும், தன் தசையாடும். காத்திருங்கள்.

வகுப்பில் மாணவர்கள் உங்களிடம் பேசவில்லை என்று வருத்தமோ? அவர்கள் பேசவில்லையென்றால் என்ன? மாணவிகள் பேசுகிறார்களல்லவா? மாணவர்கள் ஒரு பெண்ணை 'ஃபிகரா'கப் பார்க்காமல் மரியாதையோடு நடந்து கொள்கிறார்களே என்று மகிழ்வதை விடுத்து ஏன் வருத்தம் கொள்கிறீர்கள்?

உங்களை ஒருமுறையாவது பிறந்த வீட்டிற்கு அனுப்பியதும், பெற்றோரும் உங்களுடன் உறவாடியதும் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளே! இரு குடும்பங்களையும் சேர்த்துவைக்க என்ன வழி என்று பாருங்கள். போன உறவை எண்ணி வருந்தி கையிலிருக்கும் ஒரே உறவை கோட்டைவிடுகிறீர்களே! இதைக் கவனியுங்கள் முதலில்!

கோபம் உங்கள் கையில் உள்ள எரியும் தணல். உங்களையே சுட்டுவிடும். யாரையும் மாற்றாது. மாறாக உறவைக் கெடுக்கும்! ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் வாயை மூடிக்கொள்ளுங்கள்! கோபத்தின் சூடு தணிந்த பின் பேசினால் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்வீர்கள். பிறகு பாருங்கள் அதனுடய பாஸிடிவ் விளைவை!

மனம் ஒரு நிலையில் இல்லாதபோது கவனச் சிதைவு ஏற்படுவதால் படிக்க முடியவில்லை. முதலில் மனமெனும் தோட்டத்தில் மண்டிக் கிடக்கும் களைகளைப் பிடுங்கி எறியவேண்டும். களை என்று சொல்வது ‘என் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே', ‘இவர் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லயே!', ‘என்னால் இவர்களைச் சேர்த்துவைக்க முடியவில்லையே', ‘என்னால் படிக்க முடியவில்லையே' என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைத்தான். இவைதான் உங்கள் மகிழ்ச்சிக்கு, உங்கள் மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டைகள்.

மனம் ஒரு நிலையில் இல்லாதபோது கவனச் சிதைவு ஏற்படுவதால் படிக்க முடியவில்லை. முதலில் மனமெனும் தோட்டத்தில் மண்டிக் கிடக்கும் களைகளைப் பிடுங்கி எறியவேண்டும். களை என்று சொல்வது ‘என் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே', ‘இவர் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லயே!', ‘என்னால் இவர்களைச் சேர்த்துவைக்க முடியவில்லையே', ‘என்னால் படிக்க முடியவில்லையே' என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைத்தான். இவைதான் உங்கள் மகிழ்ச்சிக்கு, உங்கள் மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டைகள்.

மிக மோசமான மூடில் இருக்கும்போது உங்களைப் படுத்தியெடுக்கும் எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதி, ‘இவை குப்பை; எனக்கு வேண்டாம்' என்று சொல்லிக்கொண்டே அதைக் கிழித்துப்போடுங்கள். மனம் மிகவும் லேசாவதை உணர்வீர்கள். களை எடுக்கப்படும். செழிப்பான வளர்ச்சி நிச்சயம்.

வணக்கம். என் வயது 24. எங்கள் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம். அதனால் என்னால் 5ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு நான் ஒரு மெக்கானிக்கிடம் கூலி வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது நானே சொந்தமாக ஒரு மெக்கானிக் கடை போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக எனது முதலாளி பெருமைப்படுவார்.

இந்நிலையில், எனக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. ஆகவே டுடோரியல் சென்டர் ஒன்றில் சேர்ந்து இப்போது எட்டாம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகிவருகிறேன். இந்த வயதில் நான் எட்டாம் வகுப்பு படிப்பதால் பலரும் என்னைக் கேலி செய்கிறார்கள். வயது கடந்து படித்து என்ன செய்யப் போகிறாய் என்று என் உறவினர்களும் கிண்டலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் ஆரம்ப காலத்தில் படிக்காமல் போனது குறித்து இப்போது வருந்துகிறேன். வாழ்க்கை முழுவதும் ஒரு மெக்கானிக்காகவே இருந்துவிடுவேனோ என்று என் எதிர்காலம் குறித்து அச்சம் எழுகிறது. தூக்கமின்றித் த‌விக்கிறேன். எனக்கு உங்களின் ஆலோசனை தேவை.

நண்பரே, கற்பதற்கு வயதும் இல்லை, முடிவும் இல்லை. கல்வியின் அருமை தெரியாதவர்கள் பேச்சை சட்டைபண்ணவேண்டாம். கிரேக்க அறிஞர் ப்ளேட்டோ “கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூல வேர்” என்றார்.

வள்ளுவரும் கல்வியின் முக்கியத்துவத்தை அன்றே வலியுறுத்தினார். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை உங்கள் முதலாளி பாராட்டியிருக்கிறார். 24 வயதில் சம்பாதிப்பதை குடி, சினிமா, போகம் என்று இளைஞர்கள் விட்டுவிடும் இந்தக் காலத்தில் சபலம் அடையாமல், மேன்மையான குறிக்கோளை நோக்கிச் செல்கிறீர்களே! உங்களைப் பாராட்டுகிறேன்.

வள்ளுவரும் கல்வியின் முக்கியத்துவத்தை அன்றே வலியுறுத்தினார். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை உங்கள் முதலாளி பாராட்டியிருக்கிறார். 24 வயதில் சம்பாதிப்பதை குடி, சினிமா, போகம் என்று இளைஞர்கள் விட்டுவிடும் இந்தக் காலத்தில் சபலம் அடையாமல், மேன்மையான குறிக்கோளை நோக்கிச் செல்கிறீர்களே! உங்களைப் பாராட்டுகிறேன்.

நாளை நீங்கள் ஒரு பட்டறையை சொந்தமாக ஆரம்பிக்கும்போது, அதற்குத் தேவையான அறிவை வளர்க்க, வங்கியில் கடன் கேட்க, கணினி மூலம் கணக்கு எழுத, வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள, வாகனங்களுக்குத் தேவையான உதிரி உறுப்புக்களை வாங்க, கல்வி கைகொடுக்கும். சமுதாயத்தில் உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும்.

உங்கள் ஆர்வம் குறையாமலிருக்க ஒரு காட்சியை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மெக்கானிக் ஷெட்டின் உரிமையாளர். உங்கள் அலுவலகத்தில் ஒரு குளுமையான, எளிமையாக அலங்கரிக்கப்பட்ட வரவேற்பரை. இன்முகத்தோடு வாடிக்கையாளர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு ரிஸெப்ஷனிஸ்ட். அதையடுத்து உங்கள் அறை. அதற்குத் தகுந்த அறைகலன்கள். உங்கள் மேஜையில் ஒரு கணினி, ஒரு ஃபோன், வண்ண மலர்க்கொத்து, 'ரொம்ப பிஸி' நீங்கள்!

பல நாடுகளின் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் ஆங்கிலத்தில் உறவாடுகிறீர்கள். பின்பக்கம் பெரிய பழுதுபார்க்கும் கொட்டகை-கண்ணாடிக் கதவு மூலம் நீங்கள் பார்க்கும்படியாக. பல வண்டிகள் வரிசையாக. சீருடயணிந்த பல பொறியியல் துறை வல்லுந‌ர்கள் சுறுசுறுப்பாகப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரவசமாக இல்லை? இந்தக் காட்சிதான் தெரிய வேண்டும்-உண்ணும்போதும், உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும். அதுபோதும் உங்களை விரட்டி, விரட்டி வேலைவாங்க. வெற்றி நிச்சயம்!

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x