Last Updated : 21 Jan, 2021 03:14 AM

 

Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

சித்திரப் பேச்சு: மலர் சூடிய அரசிளங்குமரி

இயற்கையாகவே பெண்கள், குழந்தைப் பருவத்திலிருந்தே மலர் சூடி அலங்கரித்துக்கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்களாகத் திகழ்வார்கள். இங்கே ஒரு இளம்பெண், மலர்ச் செடியின் கிளையை வளைத்து லாகவமாக மலர்களை பறித்துக்கொண்டிருக்கும் கோலம் சிற்பமாகியுள்ளது. ஒரு காலை மடித்து ஒய்யாரமாக செடி மீது வைத்திருக்கும் பாங்கைப் பார்த்தால், இவள் ஒரு அரசகுமாரியைப் போன்று தெரிகிறது. அவளது தேகமும், இளமையும், சௌந்தர்யமும், முகத்தில் தெரியும் மெல்லிய புன்னகையும் அதை உறுதிப்படுத்துகின்றன. அவள் அணிந்திருக்கும் அணிமணிகளும், இடையில் புரளும் முத்துச்சரங்களும் தத்ரூபம்.

அவளின் தலையலங்காரத்தைப் பாருங்கள். சுருண்ட முடிக்கற்றையும், தலைவகிட்டின் இருபுறமும் சூரிய, சந்திரர்களைப் போன்ற ஆபரணங்களும், மத்தியில் சிறிய அளவில் ஸ்ரீ மகாலட்சுமி அபய, வர ஹஸ்தத்துடன், இரண்டு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியபடி அமர்ந்த கோலத்தில் காட்சிதருவது, வேறு எங்கும் காண முடியாத ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.

அளவில் சிறியதாக இருந்தாலும் நுட்பமான வேலைப்பாடுகளில் எந்த விதத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. அழகிய கொண்டையும், அதில் சூடியுள்ள மலர்களும் அருமை. காதில் அணிந்துள்ள அணிகலன்களைக்கூட மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ள சிற்பியின் திறமையை என்னவென்பது. இந்தச் சிற்பம், 'திருபுவன வீரன்' என்று பெயர்பெற்ற மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (பொ.ஆ. (கி.பி.) 1178 முதல் 1218 வரை) பெயரால் அமைந்த திருபுவனம்  கம்பஹரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள  சரப மூர்த்தி சன்னதி அருகே உள்ள படிக்கட்டுகளின் மேல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x