Last Updated : 19 Jan, 2021 06:50 AM

 

Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

குழந்தைகளின் மனிதவளத் திறனை வளர்ப்பது எப்படி?

கரோனா தெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் இணையவழியிலும் தொலைக்காட்சிகள் வழியாகவும் மாணவர்களுக்கு கல்வி சென்றுசேர்வதற்கு அரசு, பள்ளி, கல்லூரிகள் வழிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மாணவர்களின் மனநலனும் பட்டம் பெற்று வெளியேறும் நாளைய பணியாளர்களான இன்றைய மாணவர்களின் மனிதவளத் திறன் குறைவாக இருப்பதை உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ.) வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த ஹெச்.சி.ஐ.-க்கு அடிப்படையாக இருப்பது மனநலம். மாணவர்களின் மனநலன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்போது, பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில்தான் குழந்தைகள் வாழ்ந்தனர். இன்றைக்கு குழந்தைகள் படிக்கும்போதே, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உறவுகளின் பெயர்களையும் மிகவும் குறைவாகவே தெரிந்துகொள்ளும் சூழல் நிலவுகிறது.

ஒரு குழந்தையின் தாய், தந்தை இருவருமே பணிக்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தை பெரும்பாலும் பணியாளர்களுடனே பெரும்பான்மையான நேரத்தை கழிக்கிறது. தொலைக்காட்சி, கைபேசி போன்றவையும் இன்றைக்கு குழந்தைகளின் விருப்பமாக மாறிவிட்டன. இதனால் அப்படிப்பட்ட குழந்தைகள் படிக்கும் காலத்திலும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனே பெரும்பாலும் தங்களின் நேரத்தை செலவிடுபவர்களாக மாறுகின்றனர். இதனால் சக மனிதர்களுடன் பழகும் தன்மை, வெற்றி, தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றை இழந்தவர்களாக வளர்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியக் குழந்தைகளின் ஹெச்.சி.ஐ. மதிப்பு

இந்திய மனிதவளத் திறன் குறைவாக இருப்பதை, உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ) உணர்த்துகிறது. இந்தியாவின் ஹெச்.சி.ஐ. மதிப்பு 0.44 என்ற அளவிலேயே உள்ளது. இது சீனா (0.67), வியட்நாம்(0.67), ஏன் வங்கதேசத்தை (0.48) விடக் குறைவு. அதாவது இந்தியாவில் 2018-ல் பிறக்கும் குழந்தையின் ஆக்கவளம் 44 சதவீதம் மட்டுமே.

ஆக்கவளத்தில் நிலவும் இந்தப் போதாமையை மீட்டெடுத்தோம் என்றால், நாட்டின் தனிநபர் வருவாயை அது கணிசமாக உயர்த்தும். இதனால், கல்வியின் தரத்தை வெகுவாக உயர்த்துவதும் கற்றலில் நிலவும் பற்றாக்குறையைக் களைவதும் அரசின் இன்றைய தலையாயக் கடமைகளாக இருக்க வேண்டும். இந்தப் பெருந்தொற்றால், தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கல்வியமைப்பையும் கற்றல் சார்ந்த பிரச்சினைகளையும் விவேகத்துடன் தீர்க்க முற்பட வேண்டும்.

இதனால் மாணவர்கள் எதார்த்த வாழ்க்கையின் சிக்கல்களை உணராதவர்களாக இருக்கின்றனர். எப்போதுமே கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருக்கின்றனர். இந்தக் கால மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்திருக்கும் அளவுக்கு, கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் வளரவில்லை.

மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் விழிப்புணர்வையும் வழங்குவதற்காகவே அரசின் இலவச தொலைபேசி எண் 104 செயல்படுகிறது.

நேர்மறை எண்ணங்கள் வளர…

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுவாக சில யோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்:

# தோல்வியை எதிர்த்து போராடும் குணத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

# மாணவர்களின் மீது பெற்றோர் நம்பிக்கை வைக்கும் அதேநேரத்தில், அவர்களின் நண்பர்கள் யார் யார், அவர்களின் நடவடிக்கைகள் என்ன என நேரடியாக ஊடுருவிப் பார்க்காவிட்டாலும், கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.

# வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுடன் பெற்றோர் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள், விழாக்கள் நடக்கும்போது, அவர்களுக்கு சிறிய அளவில் பொறுப்புகளை கொடுப்பதும் அவர்களின் கருத்துகளை கேட்பதும் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

# மாணவர்களிடையே நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

# நேரத்தின் முக்கியத்துவத்தையும் காலத்தின் அருமையையும் மாணவர் களுக்கு பெற்றோர் பொறுமையாக உணர்த்த வேண்டும்.

# முடிந்தவரையில் சமூகவலை தளங்களில் மட்டுமே பார்க்கும் உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு தங்களின் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுபோய், தங்கள் குழந்தைகள் எந்த அளவுக்கு பொறுப்பானவர்கள் என்பதை அவர்களின் முன்பாகவே பெற்றோர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆவணமாகக் கருதப்பட வேண்டிய பார்வை நூல்

இந்து தமிழ் இயர்புக் 2021

பொதுவாக ‘இயர் புக்’ என்பது பக்கங்களை புரட்டுவதுபோல் மட்டுமே இருக்கும்; ‘தமிழ் இந்து இயர்புக்’கின் பக்கங்களைப் புரட்டு கையில், வரலாற்றோடு வாழ்க்கையையும் சேர்த்தே பார்க்க முடிகிறது. சாமனியன் முதல் சமூகத்தின் அத்தனை மூலைகளில் இருந்து நகர்வோரும், நகர்த்துவோருக்குமான நூலாக அமைந்திருக்கிறது இந்த இயர்புக்.

உலகை உலுக்கிய கரோனாவைப் பற்றிய விரிவான பதிவாக இருந்தாலும் சரி, உலகளாவிய செய்திகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியாக நெசவுசெய்து உடுத்துவதற்கு ஏற்பப் பதமாகக் கொடுத்திருக்கிறது ‘இந்து தமிழ்’ ஆசிரியர் குழு. அவசியம் படிக்க வேண்டியது மட்டுமல்ல, இது ஆவணப்படுத்தி வேண்டிய நூலும்கூட.

“நாட்டுக்குள்ளிருந்த மக்கள் காட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால், காட்டுக்குள் இருந்த நுண்ணுயிரிகள் இப்போது நாட்டுக்குள் நுழைகின்றன” என சிந்திக்க வைக்கும் வரிகள் மெச்சுதலுக்குரியவை. உலகப் பெருந்தொற்றுக்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில் தொடங்கி, கரோனாவின் வேற்றுருக்கள் குறித்த விவரங்கள், இந்தியத் தடுப்பூசி முனைப்பு, தடுப்பூசிகளில் இம்முறை பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பம், ‘ஹாப்பி ஹைப்பாக்சியா’ முதல் ‘பிராடிகைனின் ஸ்டார்ம்’ வரையிலான பல நுட்பமான அறிவியல் செய்திகள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்துக்குரியது.

அதேவேளை, தமிழகத்திலும் பெரும் பேசுபொருளாகவும், முதல்நிலை நோயர்களிடம் பெரும் நம்பிக்கையையும் பயனையும் கூடவே பல ஆய்வுகளையும் முடுக்கி விட்டிருந்த கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ மருந்துகள் குறித்த செய்திகள் இடம்பெற்றிருக்கவில்லை. அவற்றையும் சேர்த்திருந்தால் கரோனா தொற்று குறித்த பகுதி முழுமை அடைந்திருக்கும் என்று தோன்றியது.

- மருத்துவர் கு. சிவராமன்,
பிரபல சித்த மருத்துவர்
மருத்துவ எழுத்தாளர்

‘இந்து தமிழ் இயர்புக் 2021’ இல் பல பயனுள்ள
கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 250. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications
புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:
‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில்
DD, Money Order, Cheque
அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2021,
இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
தொடர்புக்கு: 7401296562 / 7401329402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x