Published : 24 Oct 2015 10:48 AM
Last Updated : 24 Oct 2015 10:48 AM

26 பேர் மரணத்தின் மர்மம் என்ன?

இந்திய அணுசக்தித் துறை சார்ந்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது. உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம், அதனால் ராணுவ ரகசியம் என்பதே பெரும்பாலும் பதிலாகக் கிடைக்கும். அணுசக்தியைப் பொறுத்தவரை அரசு, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மவுனம் காப்பது மரபாகிவிட்டது.

இப்படி மவுனங்களும் மர்மங்களும் நிரம்பிய அணுசக்தித் துறையில் பணியாற்றிய 26 பேரின் மரணம், சமீபத்தில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது!

இயற்கைக்கு மாறாக

‘மரணம் என்பது இயற்கையான ஒன்றுதானே. அதில் என்ன பிரச்சினை?' என்ற கேள்வி எழலாம். ஆனால், அந்த 26 பேரின் மரணமும் இயற்கைக்கு மாறான முறையில் நடந்திருப்பதுதான், இப்போதைய விவாதத்துக்கான காரணம்.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்ற ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தாண்டு செப்டம்பர் 21-ம் தேதி பெற்ற தகவலின்படி, 2009 முதல் 2013-ம் ஆண்டுவரை அணுசக்தித் துறையில் 11 பேர் இயற்கைக்கு மாறாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது அரசுத் தகவல் சொல்லும் கணக்கு. இந்தத் தகவலின் கீழ் வராமல் மேலும் 15 அணுசக்தி விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்துள்ளனர்.

முதல் மர்மம்

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் நிலை என்று இதை கருத முடியாது. காரணம், ‘இந்திய அணுசக்தித் துறையின் தந்தை' என்று அழைக்கப்படுகிற ஹோமி ஜஹாங்கிர் பாபாதான் இப்படி இயற்கைக்கு மாறான முறையில் மரணித்த முதல் அணு விஞ்ஞானி.

1966-ம் ஆண்டு ‘சக்தி வாய்ந்த அணுஆயுதம் ஒன்றைக் குறைந்த காலத்தில் இந்தியாவால் தயாரிக்க முடியும்' என்று ஒரு கூட்டத்தில் ஹோமி பாபா பேசினார். அடுத்த சில நாட்களில் விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

எங்கே விமானம்?

அவர் சென்ற விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மான்ட் பிளாங்க் என்ற பகுதியில் மோதி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு விமானத்தின் சிதறிய பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அநேகமாக இது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் வேலையாக இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்பட்டுவருகிறது. ஆக, அணு விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறாக இறப்பது புதிதல்ல. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.

இஸ்ரோவிலும்...

இதுகுறித்து அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அணுசக்தித் துறையில் ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளர் எம்.வி.ரமணாவிடம் கேட்டோம்.

"இந்த இறப்புகள் குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யார் மீதும் குற்றஞ்சாட்டிவிட முடியாது. ஆனால், இந்த மாதிரியான இறப்புகள் அணுசக்தித் துறையில் மட்டும்தான் ஏற்படுகிறதா என்பதைக் கவனித்தாக வேண்டும்" என்றார்.

இவருடைய கூற்று முற்றிலும் சரி. கடந்த 15 ஆண்டுகளாக இஸ்ரோ அமைப்பிலும் 684 பேர் இயற்கைக்கு மாறான முறையில் இறந்திருக்கிறார்கள். அதாவது, ஓர் ஆண்டுக்கு 45 இறப்புகள் என்ற கணக்கில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பிரதமருக்குக் கடிதம்

ரமணா மேலும் தொடர்ந்தார். "சில மாதங்களுக்கு முன்பு ‘பாபா அணு ஆராய்ச்சிக் கழக'த்தை (BARC) சேர்ந்த ஊழியர்கள், ‘பார்க்' அமைப்பின் நிர்வாகத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

அங்கு நிலவிவரும் அதிகாரப் போட்டி, ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்துதல், பதவிஉயர்வுகளில் காட்டப்படும் வேறுபாடுகள் போன்ற பிரச்சினைகள்தான், இவ்வாறு அந்த ஊழியர்கள் கடிதம் எழுதக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லா அறிவியல் அமைப்புகளிலும் காணக்கூடியவைதான். ஆனால் குறிப்பாக ஓர் ஊழியர், ஒரு பிரச்சினையை அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார்.

கடலில் அணுக்கழிவு?

அது, அணுவை மறுசுழற்சி செய்யும் உலைகளிலிருந்து வெளிவரும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலுள்ள கதிரியக்க அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் விட வேண்டும் என்று உயரதிகாரி தன்னை நிர்பந்திப்பதாக அந்த ஊழியர் கூறியிருந்தார். இது உண்மை என்றால், அது குறித்து நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

இதுபோன்ற உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள பணியாளர்களைத் தரக்குறைவாக நடத்தினால், அந்தப் பணியாளர்கள் அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் கொட்டக்கூடாது என்பது போன்ற விதிகளை மீறலாம்.

ஆனால், இந்தப் பிரச்சினைகள் குறித்து அணுசக்தித் துறை ஏன் இன்னும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது உங்களைப் போலவே எனக்கும் தெரியவில்லை" என்றார்.

ஆர்வம் குறைவு

இதுபோன்ற பிரச்சினைகள் வருங்கால அணுசக்தி விஞ்ஞானிகளை எப்படிப் பாதிக்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, "1940 மற்றும் 1950-களில் இருந்ததைப் போன்ற சவால்களோ, தீர்க்க முடியாத பிரச்சினைகளோ அணுசக்தித் துறையில் இன்றைக்கு எதுவும் இல்லை. எனவே, இந்தத் துறையில் இளைஞர்களின் ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மேற்கண்ட பிரச்சினையால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது" என்றார்.

இந்தப் பிரச்சினை குறித்து அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தத் துறையில் பலர் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் இறந்துபோகின்றனர். இதற்கு மேல் அது பற்றி எந்தக் கருத்தும் எனக்கு இல்லை" என்கிறார். அதேநேரம் அரசும், இந்தப் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் இல்லை என்று இருந்துவிட முடியுமா?

யார்... எப்படி இறந்தார்கள்?

இயற்கைக்கு மாறான முறையில் இறந்த சிலரின் விவரங்கள் இங்கே. இவர்களில் பெரும்பாலோர், தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களில் ஈடுபட்டவர்கள். அப்படியென்றால், அந்தப் பாதுகாப்பு ரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான், இவர்கள் கொல்லப்பட்டார்களா? இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்?

பெரும்பாலான வழக்குகளில் போதிய சாட்சியங்கள் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அந்த மரணங்கள் தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1) ஹோமி பாபா (1966) - விமான விபத்து

2) அவ்தேஷ் சந்திரா (பார்க், 2000) - தற்கொலை

3) டாலியா நாயக் (எஸ்.ஐ.என்.பி., 2005) - விஷம் குடித்துத் தற்கொலை

4) ஜஸ்வந்த் ராவ் (இந்தியன் ரேர் எர்த், 2008) - தற்கொலை

5) லோகநாதன் மகாலிங்கம் (கைகா, 2009) - ஆற்றில் விழுந்து தற்கொலை

6) உமங் சிங் (பார்க், 2009) - தீ விபத்து

7) பார்த்தா பிரதிம்பாக் (பார்க், 2009) - தீ விபத்து

8) திருமலா பிரசாத் தென்காசி (ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி, 2009) - தற்கொலை

9) எம்.ஐயர் (பார்க், 2010) - தற்கொலை

10) அஷுதோஷ் ஷர்மா (பார்க், 2010) - தூக்கிட்டுத் தற்கொலை

11) செளமிக் சவுத்ரி (பார்க் - 2010) - தூக்கிட்டுத் தற்கொலை

12) அக்ஷய் பி. சவான் (பார்க் - 2010) - மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை

13) சுபாஷ் சோனவானே (பார்க் - 2010) - தற்கொலை

14) உமா ராவ் (பார்க், 2011) - தற்கொலை

15) முகமது முஸ்தபா (கல்பாக்கம், 2012) - தற்கொலை

16) கே.கே.ஜோஷி (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை

17) அபிஷ் ஷிவம் (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை

18) ரவி மூல் (என்.சி.பி.எல்.) - கொலை

19) டைட்டஸ் பால் (பார்க்) - தூக்கிட்டுத் தற்கொலை

20) ஜி.கே. குமரவேல் - விமான விபத்து

21) பல்தேவ் சிங் - தற்கொலை

- எம்.வி.ரமணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x