Last Updated : 07 Dec, 2020 09:43 AM

 

Published : 07 Dec 2020 09:43 AM
Last Updated : 07 Dec 2020 09:43 AM

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா

saravanan.j@hindutamil.co.in

சமீப ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவருகிறது. இன்டர்நெட் யுகத்துக்கு முன்பு பெரிய அளவில் சீனா வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு போட்டியாக இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அமெரிக்காவை விடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா எடுக்க காரணமாக இருக்கிறது.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு உலக நாடுகளின் பார்வையில் சீனா பொது எதிரியாகவே மாறி இருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்கா- சீனா இடையிலான பிரச்சினைகள் குறைய வாய்ப்பு இருக்குமா என்று விவாதங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா தனது நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் நிலைமை சீனாவுக்கு எதிராக இன்னும் மோசமாக மாறி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அந்நிய நாட்டு நிறுவனங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் வகையில் ஒரு மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு செனட்டின் இரு கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதிபரின் கையொப்பத்துக்காகக் காத்திருக்கிறது. ட்ரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன் இந்த மசோதாவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா முழுக்க முழுக்க சீன நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அந்நிய நிறுவனங்களில் பெரும்பாலானவை சீன நிறுவனங்கள் தான். குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தையில் 200 க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி அமெரிக்க சந்தையில் பங்குகள் மூலமாகவோ கடன்பத்திரங்கள் மூல
மாகவோ நிதி திரட்ட வேண்டும் எனில் அந்நிறுவனம் முழுமையாக அமெரிக்க அரசால் தணிக்கை செய்யப்படும் அதன் நிதியியல், நிர்வாகம் மற்றும் தொழில்முறை ஆகிய அனைத்தும் தணிக்கை செய்யப்படுவது கட்டாயம் ஆக்கப்படும்

பிற நாட்டு நிறுவனங்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில் சீன நிறுவனங்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே சீன நிறுவனங்கள் முறையாக நிதியியல் கணக்குகளை சமர்ப்பிப்பது இல்லை என்றும், இதனால் பல பில்லியன் டாலர் அளவில் மோசடி நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவின்படி அந்நிய நாட்டு நிறுவனங்கள் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் இல்லை யெனில் பங்குச்சந்தையில் இருந்து நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தடை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் அவற்றின் பங்கு மதிப்புகளின் அடிப்படையில் மொத்தமாக 2.2 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உள்ளன. இந்த மசோதாவுக்குப் பிறகு இந்த நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் எடுக்கப்படும் நிலையில் இவற்றின் பங்கு மதிப்பு சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும் அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் அது சர்வதேச பங்குச் சந்தைகளில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும். இதனால் சர்வதேச சந்தைகள் சரிவை சந்திக்கும். மேலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான இந்த வர்த்தகப் போர் எங்கு போய் முடிய போகிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x