Last Updated : 19 Oct, 2015 11:45 AM

 

Published : 19 Oct 2015 11:45 AM
Last Updated : 19 Oct 2015 11:45 AM

குறள் இனிது: அடி பலமாக இருக்கணும்னா...

எனது நண்பர் ஒருவர் வங்கியில் மேலாளர். அவரது கிளையில் வேலை பார்த்த அதிகாரி ஒருவர் எப்பொழுது பயணப்படி கோரினாலும் அது அதிகமாகவே இருக்கும். வெளியூர் சென்றால் டாக்ஸி வாடகை, போர்ட்டர் கூலி முதலியவைகளுக்கு அதிகம் செலவழித்ததாகக் கணக்குக் காட்டி சுமார் 100 அல்லது 200 ரூபாய் அதிகம் பெறுவார்.

மேலாளர் அவரைக் கூப்பிட்டு, ‘இது சரியல்ல, அழகல்ல’ என்று அறிவுரை கூறினால், ‘நான் செலவழித்தது இவ்வளவு தான் என்னால் பேரம் பேசிகொண்டிருக்க முடியாது’ என்பார். எனது நண்பரை கேட்டபொழுது ‘இவருக்கு அற்ப புத்தி; என்ன செய்வது. இதையெல்லாம் எப்படி சரிபார்ப்பது? போகட்டும் சின்ன விஷயம். ஒருநாள் சிக்காமலா போய் விடுவார், பிடித்து விடுவேன்’ என்பார்.

அந்த அதிகாரிக்கு இந்தக் கெட்டபழக்கம் விடாமல் தொடர்ந்தது. மேலாளர் இதுவரை எந்தத் தொகையையும் குறைக்கவில்லை என்கிற தைரியம் வேறு வந்துவிட்டது. மேலாளர் நினைத்திருந்தால் அதிகம் காட்டப்பட்ட செலவுகளை மறுத்து இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. போனால் போகட்டும் என்றோ அல்லது வம்பு வேண்டாம் என்றோ விட்டுவிட்டார் என அதிகாரி நினைத்து விட்டார்.

அடுத்து ஒரு சிறிய ஊருக்கு வேலை நிமித்தம் அவரை அனுப்பினார்கள். முன் அனுபவம் கொடுத்த தைரியத்தில் தங்கியிருந்த அறை வாடகையையும் அதிகரித்து எழுதி ரசீது வாங்கிக்கொண்டார். 5 நாட்களுக்கு சுமார் ரூ.1500/- அதிகம். அவர் கோரிய தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்ளேயே இருந்தாலும் அவர் சென்ற ஊரில் அந்த வாடகை அவ்வளவு அதிகம் இருக்க முடியாதென்பது யாருமே யோசிக்கக்கூடியது. மேலாளர் அந்த அதிகாரி கொடுத்த பிரயாணப் படிவத்தைக் கையெழுத்திடச்சொல்லி வாங்கி அதற்கான ஒப்புதலையும் கொடுத்துவிட்டார்.

ஆனால் தனியே விசாரணைக்காக சிலரை அனுப்பி அந்த விடுதி ரசீதின் பிரதியில் இருந்த தொகை குறைவாக இருந்ததைக் கண்டுபிடித்து ஆதாரங்களை திரட்டிக் கொண்டார். குற்றம் நிரூபிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அந்த அதிகாரியை பணி நீக்கமும் செய்துவிட்டார். அவர் தண்டிக்கப்பட்டது பின் கதை.

வலிமை மிகுந்த அரசன், எதிரிகளுடன் மோதாமல் உரிய காலத்திற்குக் காத்திருப்பது ஆட்டுக்கடா ஒன்று பாயும் பொருட்டு காலைப் பின் வாங்குவதற்கு ஒப்பாகும் என்கிறது குறள்.

நம் அன்றாட வாழ்க்கையிலும் அப்படித் தானே? மேலாளர் அதிகாரி மேல் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அதிகாரி தப்பித்திருப்பார், வங்கியில் பெரிய தவறுகள் செய்ய வாய்ப்பாயிருக்கும். மேலாளர் தாம் சும்மா இருப்பது போல போக்குக்காட்டி அதிகாரியை தம் வலையில் விழ வைத்துவிட்டார்! அடி பலமாக இருக்கணும்னா விட்டுப்பிடிக்கணும். திறமையோ, பலமோ, அதிகாரமோ இருப்பவர்கள் சும்மா இருப்பது ஒன்றும் சும்மா இல்லை! காரணமாகத்தான்!! இயலாமை என நினைத்து ஏமாறக் கூடாது!!!

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து - குறள்: 486

somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x