

இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிகளின் வங்கி’ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் மைய வங்கியாக செயல்படுகிறது. ரிசர்வ் வங்கி பணியாளர்களும், அதிகாரிகளும் அவ்வங்கியின் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், ரிசர்வ் வங்கியானது குருப் ‘பி’ அதிகாரி பதவியில் 134 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி ஆகிய மூன்றிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அவசியம் தேவை. எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் 50 சதவீத மதிப்பெண்கள் போதும்.
வயது 21 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். எம்.பில். பட்டதாரிகளாக இருந்தால் 32 வயது வரையும், பிஎச்.டி. பட்டதாரிகளாக இருப்பின் 34 வயது வரையும் இருக்கலாம். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். போட்டித்தேர்வு இரண்டு கட்டங்களாக ஆன்லைனிலேயே நடத்தப்படும். முதல்கட்ட ஆன்லைன் தேர்வில் பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதத் திறன், ரீசனிங் ஆகிய 4 பகுதிகளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
முதல்கட்ட தேர்வில் வெற்றிபெறுவோர் 2-வது கட்ட ஆன்லைன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், மொத்தம் 3 தாள்கள். முதலாவது தாளில் பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்க வேண்டும். இரண்டாவது தாள் ஆங்கில அறிவை சோதிக்க நடத்தப்படும் தேர்வு. இதற்கு ஆன்லைனில் விரிவாக விடையளிக்க வேண்டும்.
3-வது தாளில் நிதி மற்றும் மேலாண்மை அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதில் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 100 மதிப்பெண்கள், தேர்வு நேரம் தலா ஒன்றரை மணி நேரம். இறுதியாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
முதல் கட்ட ஆன்லைன் தேர்வு நவம்பர் மாதம் 21, 22-ந் தேதிகளிலும், 2-வது கட்ட தேர்வு டிசம்பர் 7-ந் தேதியும் நடத்தப்படவுள்ளது. தகுதியான நபர்கள் அக்டோபர் 23-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.rbi.org.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், படிக்க வேண்டிய புத்தகங்கள் உள்ளிட்ட விவரங்களையும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.