Published : 09 Nov 2020 09:35 AM
Last Updated : 09 Nov 2020 09:35 AM

திரையரங்குகள் இனி என்னவாகும்?

கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த திரையரங்குகள் அடுத்த சில தினங்களில் திறக்கப்பட இருக்கின்றன. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப் பட வேண்டும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது. கரோனா பரவல் தொடர்ந்து நீடித்துவருகிற சூழலில் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவார்களா என்ற சந்தேகமும், ஓடிடி தளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்துவருவதால் திரையரங்குகளின் தேவை இனி என்னவாக மாறும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

திரைப்பட ரசிகர்களிடையே நடத்தப்பட்டக் கருத்துக் கணிப்பில் 82 சதவீத ரசிகர்கள், திரையங்குகள் திறக்கப்படுவதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், உடனடியாக இல்லாவிட்டாலும், திறக்கப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் திரையரங்குக்குச் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு, பெரிய நடிகர்களுக்கு இது சற்று நம்பிக்கையான செய்திதான். ஆனாலும், திரையங்குகளின் பயன்பாடு முன்பிருந்ததுபோல் இருக்காது என்பதே யதார்த்தம். காரணம், ஓடிடி. கரோனா காலகட்டத்தை நாம் மாற்றத்துக்கான காலகட்டம் என்று கூறலாம். மருத்துவம், கல்வி, வர்த்தகம் என அனைத்தும் அதன் முந்தைய தன்மையிலிருந்து மாற்றமடைந்து புதிய பரிமாணத்துக்குள் நுழைந்திருக்கின்றன.

பொழுதுபோக்குத் துறையும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஓடிடி 2008-ம் ஆண்டே அறிமுகமாகி இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளிலேயே பரவலாகச் சென்றடைந்திருக்கிறது. 2012-ல் இரண்டு ஓடிடி தளங்கள்தான் இருந்தன. தற்போது 40க்கும் மேற்பட்ட தளங்கள் உள்ளன. தற்சமயம் இந்தியாவில் ஓடிடி தளங்களின் சந்தை மதிப்பு ரூ.3,500 கோடியாக இருக்கிறது. ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரோனா காலகட்டத்தில் ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் என ஓடிடி தளங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. தற்போது வயதானவர்களும் ஓடிடி தளங்களை நோக்கி நகர்ந்துவருகின்றனர்.

உலகளாவிய திரைப்படங்கள், தொடர்கள் என பல தரப்பட்ட கதைக்களங்கள் வழியாக பார்வையாளர்களை புதிய அனுபவத்துக்கு இட்டுச் செல்வதே ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. திரையரங்குக்கு படம் பார்க்கச் செல்ல ஒரு நபருக்கு டிக்கட்டுக்கு மட்டும் சராசரியாக 150 ரூபாய் ஆகிறது. நான்கு பேர் கொண்ட குடும்பம் எனச் சென்றால் பார்க்கிங், திண்பண்டங்கள் என மொத்தமாக 1000 ரூபாய் செலவாகிறது. இந்தச் சூழலில் மாதம் 200 ரூபாயில் ஓடிடி தளத்தில் அவர்கள் தங்களுக்குத் தேவையான படங்களை குடும்பத்துடன் பார்த்துவிடுகிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரையில் திரையரங்கு என்பது ஒரு கொண்டாட்டத்துக்கான இடம்; பெரிய திரையில் படம் பார்ப்பது பலரையும் வசீகரத்தில் ஆழ்த்தக்கூடியது என்பது மறுக்க முடியாத ஒன்று. அதேசமயம், எம்மாதிரியான படங்களுக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். வணிக நோக்கிலான ஜனரஞ்சக சினிமாக்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் கலை நோக்கிலான புதிய முயற்சிகளுக்கு இடமற்று இருந்தது.

ஓடிடி-யின் வருகை அந்த நிலைமையை மாற்றி இருக்கிறது. திரையரங்குகள் நடிகர்களின் களம் என்றால், ஒடிடி தளங்கள் இயக்குனர்களின் களம் என்று சொல்லலாம். ஒருவகையில் ஓடிடி தளங்கள் பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தி இருக்கிறது என்றும் சொல்லலாம். ஓடிடியில் படம் வெளியிடக்கூடாது என்று போராடுவதன் மூலம் திரையரங்குகளை காப்பாற்றிவிட முடியாது. திரையரங்குகளுக்கான தனித்துவத்தை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்வதன்மூலம் மட்டுமே திரையரங்குகள் பிழைத்திருக்க முடியும். இல்லையெனில், திரையரங்குகள் பண்டிகை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மட்டுமே சுருங்கிவிடவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x