Last Updated : 03 Nov, 2020 03:12 AM

 

Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

சேதி தெரியுமா?

அக். 21: வங்கதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தையும் சாகு துஷார் மானே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

அக். 28: பிஹாரில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 53.54 சதவீத வாக்குகள் பதிவாகின. கரோனா தொற்றுக் காலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது.

அக். 28: கரோனா தொற்றுக் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட வங்கித் தவணைகளுக்கு வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டித் தொகை, நவம்பர் 5-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

அக். 29: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்த நிலையில், தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது. இதையடுத்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

அக். 30: வங்கக் கடலில் ஐ.என்.எஸ். கோரா கப்பலிலிருந்து எதிரிகளின் போர்க் கப்பலைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது. திட்டமிட்டபடி மாதிரிக் கப்பலை ஏவுகணை துல்லியமாகத் தாக்கியது.

அக். 31: இந்தியாவின் முதல் கடல் விமான சேவையான ஸ்பைஸ் ஜெட் சேவை, சபர்மதி ஆற்றங்கரையில் தொடங்கப்பட்டது. அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் உள்ள வல்லபபாய் பட்டேல் சிலைவரை இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அக். 31: ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி அரிதாகத் தோன்றுவது உண்டு. அக்டோபரில் 1, 31 ஆகிய நாள்களில் பௌர்ணமி தோன்றியது. இரண்டாவது முறை தோன்றும் பௌர்ணமியை ‘புளூ மூன்’ அல்லது ‘நீல நிலா’ என அழைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x