Last Updated : 19 Oct, 2015 11:32 AM

 

Published : 19 Oct 2015 11:32 AM
Last Updated : 19 Oct 2015 11:32 AM

அமேசானில் அறிமுகமாகிறது டிரெய்ல்பிளேஸர்

போட்டிகள் நிறைந்த உலகம் இது. கால ஓட்டத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்யாவிடில் கரைந்து போகும் அபாயம் எல்லா தொழிலுக்குமே உள்ளது.

1970-களுக்கு முன்பு வரை கார் என்றால் அம்பாசிடர் கார் மற்றும் சிறிய ரகத்தில் ஃபியட் போன்ற கார்களே இருந்தன. கோடீஸ்வரர்கள் சிலர் மட்டுமே பிளைமவுத் எனப்படும் மிக நீளமான கார்களை வைத்திருந்தனர்.

இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்திய அம்பாசிடர் காரின் உற்பத்தி இன்று நின்றுவிட்டது. ஆனால் இன்று மாருதி, டாடா, மஹிந்திரா என உள்நாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் போர்டு, ஹுண்டாய், ஹோண்டா, டொயோடா, ரெனால்ட், நிசான் என பல வெளிநாட்டு நிறுவனங்களின் கார்கள் சீறிப் பாய்கின்றன. போதாக்குறைக்கு சொகுசுக் கார்கள் வரிசையில் ஆடி, மெர்சிடெஸ் பென்ஸ், ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ என பல நிறுவனத் தயாரிப்புகளும் பார்ப்பவர்களை மிரளச் செய்கின்றன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு சிறப்பான இன்ஜின் செயல்பாடு, சொகு சான பயணம், எரிபொருள் சிக்கனம் என பார்த்து பார்த்து வாகனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தங்களது தயாரிப்புகள் இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளன. அப்போதுதான் சந்தையில் நிலைக்க முடியும் என்பதும் இவற்றுக்குத் தெரியும்.

விளம்பரம், விற்பனை, விற்பனைக்கு பிறகான சேவை, விற்பனையக வசதி, பணியாளர்களின் செயல்பாடு இவற்றை யெல்லாம் பார்த்து பார்த்து நிறுவனங்கள் அமைத்து வாடிக்கையாளர்களைக் கவருகின்றன.

இப்போது ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் போக்கு இந்தியர் களிடையே குறிப்பாக இளம் தலை முறையினரிடையே அதிகரித்துள்ளது.

இளம் தலைமுறையினருக்காக பல்வேறு சிறப்பம்சங்களோடு வாகனங் களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இளைஞர்கள் அதிகம் புழங்கும் இணையதள விற்பனை மூலம் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

இந்த முயற்சியில் முதலில் களமிறங் கியுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் புதிய தயாரிப் பான டிரெய்ல்பிளேஸர் காரை அமேசான் மூலம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எஸ்யுவி ரக காரான டிரெய்ல்பிளேஸர் இம்மாதம் 21-ம் தேதி அமேசான் இணையதளத்தில் அறிமுகமாகிறது.

``முன்பெல்லாம் காரை வாங்கும் முன்பு அத்தகைய காரை வைத்திருப் பவர்களிடம் அதுகுறித்து கருத்து கேட்ட பிறகு வாங்கும் பழக்கம் இருந்தது. உறவினர்களோ, நண்பர்களோ அளிக்கும் தகவல்களைப் பொறுத்து கார்களைத் தேர்வு செய்வர், அல்லது சிலர் குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்புகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அடிப்படையில் கார்களை வாங்குவர். ஆனால் இப்போது உலகம் சுருங்கிவிட்டது.

காரை வாங்க விரும்புவோர் அதுபற்றி இணைய தளத்தில் பலரது கருத்துகளைப் பார்த்த பிறகு முடிவு செய்கின்றனர். இதனாலேயே அமேசான் இணையதளம் மூலம் அறிமுகம் செய்ய உள்ளதாக,’’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.

காரைப் பற்றிய அனைத்து விவரமும் அமேசான் டாட் இன் இணைய தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி முதல் பதிவேற்றப்பட்டு வருகிறது. முன்பதிவு அக்டோபர் 21-ம் தேதி தொடங்கும். இணையதளம் மூலம் வாங்க விரும்புவோர் பதிவு செய்யலாம். இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கு கடைசி நாள் இம்மாதம் 26-ம் தேதியாகும்.

முன்பதிவு தொகை ரூ.25 ஆயிரம் ஆகும். இது திருப்பியளிக்கத்தக்க முன் பணமாகும்.

இணையதளத்தில் பதிவு செய்தவர் களுக்கு அவர்களது இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள விற்பனை யகத்திலிருந்து கார் டெலிவரி செய் யப்படும் என்று சக்சேனா தெரிவித்தார்.

புதிய ரக எஸ்யுவி டிரெய்ல் பிளேஸரின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. இணையதளம் மூலம் விற்பனையாக உள்ள அதிக விலை கொண்ட கார் இதுவாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் தனது இடத்தை வலுவாக்கிக் கொள்ள அமெரிக்காவில் பிரபலமாக உள்ள தனது 10 முன்னணி பிராண்டுகளை இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக டிரெய்ல்பிளேஸர் அறிமுகம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய ரக ஸ்கார்பியோ காரை ஸ்நாப்டீல் ஆன்லைன் நிறுவனம் மூலம் முன் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை இந்தியாவில் குறைந்து வருகிறது. இழந்த சந்தையை மீண்டும் பிடிக்கும் முயற்சியாக பிரபல கார்களை அறிமுகப்படுத்துவது மற்றும் ஆன்லைன் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் முதல் 70 சதவீத கார் விற்பனை ஆன்லைன் மூலம்தான் நடக்கும் என்று மெக்கின்ஸி நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய சூழலில் ஆன்லைன் நிறுவனங்களுடன் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கைகோர்ப்பது தவிர்க்க முடியாததாகும்.

அதிக விலை உயர்ந்த பொருள்களை ஆன்லைன் மூலம் வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனரா என்று கேட்டதற்கு, நேரில் வந்து வாங்குவதைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புவர். ஆனால் ஆன்லைன் சந்தையைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பொதுமக்களிடம் எங்கள் தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததாக சக்சேனா கூறுகிறார்.

இது மிகச் சிறந்த விளம்பர உத்தி. பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அதுகுறித்த எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்க ஆன்லைன் விற்பனை உதவும் என்கிறார் சக்சேனா.

ரெனால்ட் நிறுவனம் கார்தேகோ (cardekho) மற்றும் கார்வாலே (carwale) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஆன்லைன் மூலமான விற்பனை வாய்ப்பை தங்கள் நிறுவனம் இழக்கத் தயாராக இல்லை என்று ஹோண்டா நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 6.5 கோடி மக்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு 4 கோடியாக இது இருந்தது. இத்தகைய சூழலில் ஆன்லைன் சந்தையைத் தவிர்க்கும் ஆட்டோமொபைல் நிறுவ னங்கள் கால சக்கரத்தில் காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக் கத்தான் செய்கிறது.

முன்பெல்லாம் காரை வாங்கும் முன்பு அத்தகைய காரை வைத்திருப்பவர்களிடம் அதுகுறித்து கருத்து கேட்ட பிறகு வாங்கும் பழக்கம் இருந்தது. உறவினர்களோ, நண்பர்களோ அளிக்கும் தகவல்களைப் பொறுத்து கார்களைத் தேர்வு செய்வர்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x