Published : 20 Sep 2015 09:57 AM
Last Updated : 20 Sep 2015 09:57 AM

திரை விமர்சனம்: 49-ஓ

விளைநிலங்களை வாங்கிக் கட் டிடங்களாகக் கட்ட நினைக்கும் மனிதர்களுக்கு எதிராக வெளி வந்திருக்கும் படம் ‘49-ஓ’. காதல், சண்டை, பேய் என வழக்கமாக வரும் கதைகளுக்கு மத்தியில் இவை எதுவுமே இல்லாத சினிமா.

விவசாயிகளின் விளைநிலங்களை வளைத்து போட்டு, அதனை ப்ளாட் கள் போட்டு விற்க நினைக்கிறார் அர சியல்வாதி திருமுருகன். விவசாயி களின் ஏழ்மையைப் பயன்படுத் திக்கொண்டு அவர்களது நிலங்களைத் தனதாக்கிக் கொள்கிறார்கள். கவுண்ட மணி இதைத் தடுக்க நினைக்க, விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் அவர்கள் கண்களை மறைக் கிறது. ஆனால், தாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை விரைவில் உணர்கிறார்கள்.

அரசியல்வாதிகளிடம் இருந்து விளைநிலங்களை மறுபடியும் வாங்க கவுண்டமணி வியூகம் அமைக்கிறார். அச்சமயத்தில் தொகுதியில் சட்ட மன்ற இடைத்தேர்தல் வருகிறது. தேர் தலையே தன் வியூகத்தின் மைய மாக்குகிறார் கவுண்டமணி. தன் திட்டப்படி கவுண்டமணி நிலங்களைக் கைப்பற்றினாரா என்பதுதான் கதை.

நகைச்சுவை வேடங்களில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி பல ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் படம். அவருக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற திரைக்கதையை அமைத்து, கவுண்ட மணியின் மறுபிரவேசத்தை மறக்க முடியாததாக்கிவிட்டார் இயக்குநர் ஆரோக்கிய தாஸ்.

முழுக்க கவுண்டமணியைச் சுற் றியேதான் கதை நகர்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் கவுண்டமணி, தனக்கு எந்த மாதிரியான கதை சரியாக அமையும் என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார். பேச்சிலும், உடல் மொழியிலும் கவுண்டமணி மாறவே இல்லை. படம் முழுவதும் அரசியல் நையாண்டி வசனங்கள்தான். கவுண்டமணி பட்டையைக் கிளப்பு கிறார். அவரது வசன உச்சரிப்பும் பிரத்யேகமான உடல் மொழியும் சேர்ந்து கைத் தட்டல்களை அள்ளுகின்றன.

தன் முதல் படத்திலேயே இத் தகைய கதையை எடுத்துக்கொண்டு அதை நேர்த்தியாகக் கையாண்ட தற்காக இயக்குநர் ஆரோக் கிய தாஸைப் பாராட்ட வேண்டும். அரசியல்வாதிகளைக் கிண்டல் செய் யும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கின் றன. ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு (49-ஓ) அதிக வாக்குகள் கிடைத்தால் அங்கே போட்டியிடும் வேட்பாளர் களுக்கும், போட்டியிட்ட கட்சிகளுக் கும் என்ன தண்டனை என்று எழுப்பி யிருக்கும் கேள்வி கூர்மையானது. அரசியலை மட்டுமல்லாமல் இன் றைய உறவு நிலைகளையும் படம் கையாள்கிறது. ‘ஆறடி தாய்மடி திட்டம்’ என்ற திட்டத்தின் மூலம் இன்றைய உறவுகளுக்கு இடையேயான நிலை எப்படி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வசனங்கள் மூலமாக இன்றைய தேர்தல் நடப்புகளை விமர்சனம் செய் திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் கதை ஒரே இடத்தில் சுழல் வது சில சமயங்களில் அலுப்பைத் தருகிறது. சிறிய படமாக இருந்தாலும் நீண்ட நேரம் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது திரைக்கதை.

கவுண்டமணிக்கு அடுத்து, வட்டிக் காரராக சோமசுந்தரம், அரசியல்வாதி யாக திருமுருகன் ஆகிய இருவருமே தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தனது பேச்சால் விவசாயிகளின் ஏழ்மையை உணர்த்தி அவர்களை வீழ்த்தும் வேடத்தில் ஈர்க்கிறார் சோமசுந்தரம். விளம்பரப் படம் எடுக்கும் ராஜேந்திரன், சாம்ஸ் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவர்கள் நடிப்பும் பாத்திர வார்ப்பும் கவர்கின்றன.

இசையமைப்பாளர் கே மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா ஆகியோ ரின் பங்களிப்பு கதையோட்டத்துக்கு இசைவாக உள்ளன. முக்கியமான வசனங்கள் வரும் போதெல்லாம் பின் னணி இசை இல்லாமல் விட்டிருப்பதும் பாராட்டத்தக்கது. ‘அம்மா போல அள்ளித்தரும் மழை’, ‘எத்தனை காலம் தான் இப்படியே இருப்பது’ ஆகிய பாடல் வரிகளில் யுகபாரதி கவனிக்க வைக்கிறார்.

காலத்துக்கேற்ற கதை, கவுண்ட மணிக்கு ஏற்ற திரைக்கதை, வசனங்கள், பொழுதுபோக்குக்காக எதையும் வலிந்து திணிக்காத அணுகுமுறை, நேர்த்தியான இசை, ஒளிப்பதிவு, கவுண்டமணியின் முத்திரை நடிப்பு ஆகியவை படத்துக்கு ‘ஓ’ போடவைக்கின்றன. திரைக்கதையில் இன்னமும் மெனக்கெட்டிருந்தால் சற்று பலமாகவே ‘ஓ’ போட்டிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x