Last Updated : 08 Oct, 2020 09:39 AM

 

Published : 08 Oct 2020 09:39 AM
Last Updated : 08 Oct 2020 09:39 AM

81 ரத்தினங்கள் 52: இங்கும் உண்டு என்றேனோ பிரகலாதனைப் போல

எங்கும் நீக்கமற நின்று நிறைந்துள்ள இறைவனை எவ்விடம் இருக்கிறார் எனக் குறித்துக் காட்டுவது? அதனாலே எங்கும் எதிலும் தூணிலும், துரும்பிலும் நிறைந்தவனை இங்கும் உண்டு என கூறினான் பக்தப் பிரகலாதன்.

இரண்யாட்சன் எனும் அரக்கன், கடுந்தவமிருந்து பிரம்மாவிடம் சாகாவரம் பெற்றான். “எனக்கு இறப்பு மனிதனால். விலங்கால் இரவில், பகலில் உள்ளே, வெளியே எந்த ஆயுதங்களாலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது” என்று வரம் வாங்கி மகா அட்டூழியங்கள் செய்து தேவா்களையும் மனிதா்களையும் துன்புறுத்திவந்தான்.

அனைத்து மக்களையும் ‘இரண்யாய நம’ என்று கூறச் செய்து தன்னையே கடவுளாக்கி வணங்க வைத்தான். ஆனால், அவனுடைய மகன் பிரகலாதன் ‘நாராயணாய நம’ என பரப்பிரம்மத்தையே வணங்கினான். இதை அறிந்த இரண்யன், நச்சுப் பாம்புகளைக் கொண்டுக் கடிக்கவிட்டான். பாம்புகள் அப்படியே கிடந்தன. யானையை ஏவி மிதிக்கவிட்டான்; யானையும் வணங்கிச் சென்றது. கடலில் தூக்கிப் போடச் சொன்னான். பிரகலாதனோ மிதந்துவந்தான். நெருப்பிலிட்ட போதும் தணல் தணிந்து இரண்யாட்சனைக் காத்தது. இவற்றையெல்லாம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் நாமத்தால் வெற்றிக்கொண்டான்.

மேலும் கோபமும் ஆத்திரமும் அடைந்த இரண்யன், தான் பெற்ற மகன் என்றும் நினைக்காமல் பிரகலாதனைத் தலைக்கு மேல் தூக்கிக் கொல்வதற்கு முயன்றான். உன் நாராயணன் எங்கேடா எனக் கேட்டு கர்ஜித்தான். எங்கும் நிறை என் நாராயணன், இத்தூணிலும் இருக்கார் என சிறுவன் பிரகலாதன் கூறியதும் தன் கதாயுதத்தால் தூணைப் பிளந்தான். பகலும் இரவும் கூடும் பிரதோஷ காலம் அது நரன் அணிந்த சிம்மமாக, உடனே உருவெடுத்து இரண்யனைப் பிடித்து வாயிற்படியில் அமா்ந்து தன் கூரிய நகங்களால், அவன் குடல் கிழித்துக் கொன்றார் நரசிம்மா். எல்லா அவதாரங்களையும்விட நரசிம்மருக்கு மதிப்பு அதிகம். ஏனென்றால், பக்தன் நினைத்து அழைத்த அந்நேரத்தில் உடனே அவதார வடிவமெடுத்தவர் நரசிம்மா்.

பிரகலாதன், அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் இறைவன் மீது நம்பிக்கைகொண்டு அவன் நாமத்தையே கூறியதால் பிரகலாத ஆழ்வான் எனப் போற்றப்பட்டார். பிரகலாதனைப் போல் இறைவனை என் மனதில் நினைக்கவில்லையே எனவும் நாராயண நாமத்தை நான் கூறவில்லையே எனவும் தன் ஆற்றாமையைக் கூறி வருந்துகிறாள் திருக்கோளுா் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x