Last Updated : 13 Aug, 2020 08:48 AM

 

Published : 13 Aug 2020 08:48 AM
Last Updated : 13 Aug 2020 08:48 AM

ஜென் துளிகள்: ‌கடப்பதற்கு மட்டும்தான், பிடித்து வைத்துக்கொள்ள வேண்டாம்

‌‌“துறவிகளே, கட்டுமரத்தைப் பற்றிய ஒரு உருவகக்கதையை உங்களுக்குக் கூறப்போகிறேன். கடந்து செல்வதற்குத்தான், பிடித்து வைத்துக்கொள்வதற்கு அல்ல என்பதைச் சொல்லும் கதை அது.

‌யாத்திரையில் இருக்கும் ஒருவன் வழியில் பெரிய நதியைப் பார்க்கிறான்; அவன் நிற்கும் கரையிலோ ஆபத்துகளும் பயங்களும் இருக்கின்றன. அக்கரையோ, பயங்கள் எவையுமற்றுப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நீரோட்டத்தைக் கடப்பதற்கு அங்கே படகோ, பாலமோ இல்லை. கரையிலிருக்கும் இடர்களைக் கடந்து பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல மரக்குச்சிகளாலும் கிளைகளாலும் ஒரு கட்டுமரத்தைக் கட்ட வேண்டிய தேவையை உணர்ந்தான்.

‌அந்தக் கட்டுமரத்தில், அவன் இடர்களைக் கடந்து பாதுகாப்பாக மறுகரைக்கு வந்தபிறகு, இந்தக் கட்டுமரம் நமக்கு எவ்வளவு உபயோகமாக இருந்தது என்று யோசித்தான். அவன் தலையிலும், தோள்களிலும் சுமந்தபடி அதைத் தன்னுடனேயே எடுத்துக்கொண்டு சென்றுவிடலாமா என்று நினைத்தான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், துறவிகளே? அந்த மனிதன், கட்டுமரத்தை என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தானா?” என்று கேட்டார் குரு.

‌“இல்லை, குருவே,” என்றனர் அவர்கள்.

‌“அப்படியென்றால், அந்த மனிதன் என்ன செய்ய வேண்டும்? அவன் கடக்க வேண்டிய பகுதியைக் கடந்துவந்துவிட்ட பிறகு, கட்டுமரத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, தன் பயணத்தை அவன் தொடர வேண்டும். இதுதான் ஒரு மனிதன் கட்டுமரத்துக்குச் செய்ய வேண்டியதாகும். இந்த வழியில்தான் நான் உங்களுக்குத் தர்மத்தைக் கற்றுக்கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுமரத்தின் நீதியைப் போல, அது கடப்பதற்கு மட்டும்தான். தக்க வைத்துக்கொள்ள அல்ல. துறவிகளாகிய நீங்கள், இந்தக் கட்டுமரத்தின் நீதியைப் புரிந்துகொள்ளும்போது, மனத்தின் சரிநிலைகளின் மீது பற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள். இது சரியானதிலிருந்து மனத்தின் தவறான நிலைகளுக்கும் பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x