Published : 05 Aug 2020 10:03 AM
Last Updated : 05 Aug 2020 10:03 AM

கதை: காணாமல் போன தங்கபுஷ்பம்

படித்துக்கொண்டிருந்த ராணி சட்டென்று அம்மாவை அழைத்தாள்.

“இப்போ தானே படிக்க ஆரம்பிச்சே? அதுக்குள்ளே என்ன?” என்று கேட்டார் அம்மா.

“நம்ம தங்கபுஷ்பம் இப்ப எப்படி இருக்கும்மா?”

“ஆறு வருஷத்துக்கு முன்னால காணாமல் போனதைப் பத்தி இப்போ என்ன ஆராய்ச்சி?’’

“நல்லா வளர்ந்திருக்கும். என்னை எல்லாம் நினைவு வச்சிருக்குமா?”

“தங்கபுஷ்பம், ஞானபுஷ்பத்தோடு நீ அடித்த லூட்டிகளை யாராலும் மறக்க முடியாது. படி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அம்மா.

******

ராணி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தங்கபுஷ்பமும் ஞானபுஷ்பமும் குட்டிகளாக வீட்டுக்கு வந்தன. எப்போதும் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருப்பாள் ராணி.

‘குத்தடி குத்தடி ஜைனக்கா

குனிஞ்சு குத்தடி ஜைனக்கா

பந்தலிலே பாவக்கா

தொங்குதடி லோலாக்கு...’

இந்தப் பாடலை ராணி நடனமாடிக்கொண்டே பாடுவாள். தங்கபுஷ்பமும் ஞானபுஷ்பமும் அவளுடன் சேர்ந்து ஆட, உற்சாகம் அதிகரிக்கும்.

திடீரென்று ஒரு நாள் தங்கபுஷ்பம் காணாமல் போய்விட்டது. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரம் வரை அழுதுகொண்டே இருந்தாள் ராணி.

******

ஞாயிற்றுக்கிழமை. “அம்மா, சர்க்கஸுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே...” என்று ஞானபுஷ்பத்துடன் விளையாடிக்கொண்டே கேட்டாள் ராணி.

“அப்பா இன்னிக்குப் போகலாம்னு சொல்லிட்டார். சீக்கிரம் கிளம்பு” என்றார் அம்மா.

மூவரும் சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்தார்கள். கூட்டம் இல்லை என்பதால் முன் வரிசையில் உட்கார்ந்துகொண்டாள் ராணி.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சாகசங்கள் தொடர்ந்தன. பிரமிப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் ராணி. இறுதியில் ஒரு நாயின் சாகசம் என்று அறிவிப்பு வந்தது. அழகான கறுப்பு நாய் ஒன்று வளையத்துக்குள் பாய்ந்தது. பந்துகளைப் பிடித்தது. இசைக்கு ஏற்ப நடனமாடியது.

நாயைப் பார்க்கப் பார்க்க ராணியில் உடல் சிலிர்த்தது. தனக்கும் அதற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது. கண்கள் கலங்கின.

“அப்பா, அது நம்ம தங்கபுஷ்பம்னு நினைக்கிறேன்” என்றாள் ராணி.

“கறுப்பு நாய் எல்லாம் தங்கபுஷ்பம்னு நினைக்காதே ராணி. இது சர்க்கஸ் நாய். வட இந்தியாவிலிருந்து வந்திருக்கு” என்றார் அப்பா.

“இல்லப்பா, இது நம்ம தங்கபுஷ்பம்தான். நான் அதைப் பார்க்கணும்” என்றாள் ராணி.

சர்க்கஸ் முடிந்தது. சர்க்கஸ் உரிமையாளரிடம் அந்த நாயை அழைத்து வரச் சொன்னார் அப்பா.

நாயைக் கண்டவுடன் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் ராணி. “அப்பா, இது நம்ம தங்கபுஷ்பம் தான். வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்” என்று கெஞ்சினாள்.

உடனே உரிமையாளர் நாயை அழைத்துச் சென்றார்.

“இதெல்லாம் அநியாயம் ராணி. அவங்க விடமாட்டாங்க” என்று அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “குத்தடி குத்தடி ஜைனக்கா...” என்று ராணி பாட ஆரம்பித்துவிட்டாள்.

பாடி முடிக்கும்போது, அந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு ராணியிடம் ஓடிவந்தது.

எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ராணி, தங்கபுஷ்பம் பாசத்தைக் கண்ட சர்க்கஸ் உரிமையாளர், நாயை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x