Published : 09 Jul 2020 09:23 AM
Last Updated : 09 Jul 2020 09:23 AM

சித்திரப் பேச்சு: நரமுக விநாயகர்

விநாயகர் என்றாலே யானை முகமும் பெருத்த தொந்தியும் தானே ஞாபகம் வரும். ஆனால், மனித முகத்துடன் இருக்கும் விநாயகர் உருவமும் உள்ளது. நரமுக ஆதி விநாயகரை, திருச்சி மாநகரில் தேவதானம் கிழக்கு பொலிவார்டு ரோட்டில் ஸ்ரீ நன்றுடையான் விநாயகர் திருக்கோயிலில் தரிசிக்கலாம்.

இவர் நான்கடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களில் வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக்கரத்தில் மோதகத்தையும் வைத்திருக்கிறார். பரந்து விரிந்த, சுருண்ட முடிக்கற்றையை கொண்டுள்ளார். தோள்கள் இரண்டிலும் தாமரை மலரை தாங்கியுள்ளார். அழகிய சிறுவனைப் போன்ற சிரித்த முகத்துடன், வாயில் கோரைப் பற்களுமாக உள்ளார். இவை பின்னாளில் மகாபாரதம் எழுதுவதற்குத் தேவைப்படும் என்று வைத்திருந்தார் போலும்.

இவருக்கு வாகனமான எலிக்குப் பதிலாக நந்தி தேவர் வீற்றிருக் கிறார். திருஞானசம்பந்தர் இவரை வணங்கி இவர் மீது பதிகம் பாடியுள்ளார் என்றும் ஒரு கர்ணபரம்பரை செய்தி உலவுகிறது. அதற்கேற்ப அவரது பதிகத்தில், “நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ள நொன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.” என்கிறார். இந்தப் பிள்ளையார் ஆறாம் நூற்றாண்டில் உருவாகியிருக்க வேண்டும்.

இவர் உருவத்தைப் பார்க்கும் போது பல்லவர், சோழர் காலத்தைச் சேர்ந்தவராகத் தெரியவில்லை. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இதேபோல் நரமுக விநாயகர் ஆலயம், சிதம்பரம் தெற்கு மாட வீதியில் தனிக்கோயி லாக, ஸ்ரீ சக்தி பால நரமுக விநாயகர் என்ற பெயரில் உள்ளது. மேலும், சிதலபதி ஆலயத்திலும் ஆதி விநாயகர் என்ற பெயரில் நரமுக விநாயகர் உள்ளார். ஆனால், அவரைப் பார்க்கும் போது ஜடாமுடி, அமர்ந்திருக்கும் கோலம் முதலியன  தட்சிணா மூர்த்தியின் தோற்றத்தை ஒத்துள்ளன. n ஓவியர் வேதா n

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x